திங்கள், 3 அக்டோபர், 2016

கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…

child-labour-1மோடி அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் சட்டமும் புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் குறிவைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்.பேனாவைப் பிடிக்க வேண்டிய கரங்கள் தீக்குச்சிகளை அடுக்கும் சமூக அவலம்
இனி இந்தியாவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலம் என்பது அச்சமூட்டக்கூடிய கொடுங்கனவாய் ஆகிவிடும் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது மோடி அரசு. அவரது அரசு விவாதத்திற்கு விட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கனவைக் காவு வாங்கும் விதத்தில் உள்ளதென்றால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்கள் ஏழைக் குழந்தைகளைச் சட்டபூர்வ கொத்தடிமைகளாக வைத்து, அவர்களது உழைப்பையும் இளமையையும் உறிஞ்சிக் கொள்ளும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்யும் சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே கொண்டுவரப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அச்சட்டங்கள் அக்கொடுமையைப் பெயரளவிற்குக்கூட ஒழித்துவிடவில்லை. ஒருபுறம் அச்சட்டங்கள் பல்வேறு ஓட்டைகளோடும், குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் சலுகைகளோடும் உருவாக்கப்பட்டிருந்ததோடு, இன்னொருபுறத்தில் அவை சோளக்காட்டு பொம்மைகளாகவே இருந்து வந்தன.
1980-களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த பிரச்சாரங்கள் பொது வெளியில் தீவிரமாக நடைபெறத் தொடங்கிய பிறகு, ஏற்கெனவே இருந்துவந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் 1986-இல் மைய அரசால் கொண்டுவரப்பட்டது. இப்புதிய சட்டமும்கூட குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாகத் தடை செய்யவில்லை. மாறாக, அச்சட்டம் 14 வயதுக்குக் கீழான குழந்தைகளை எந்தெந்த தொழில்களில் பணிக்கு அமர்த்தலாம், எந்தெந்த தொழில்களில் பணிக்கு அமர்த்தக் கூடாது என வரையறுக்க மட்டுமே செய்தது.
ஆலை உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள்: இளமையை உறிஞ்சி, உழைப்பைச் சுரண்டி
ஆலை உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்கள்: இளமையை உறிஞ்சி, உழைப்பைச் சுரண்டி
இந்தச் சட்டம் எந்தளவிற்கு மொன்னையானது என்பதை 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. அக்கணக்கெடுப்பு இந்தியாவெங்கும் 43,53,247 குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. இவர்கள் அனைவரும் ஐந்து வயதிலிருந்து 14 வயதிற்குட்டபட்ட குழந்தைத் தொழிலாளர்கள் என்பதும், இக்குழந்தைகள் முழு நேரமாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதும் அக்கணக்கெடுப்பின் வழியாகத் தெரிய வந்தன. இம்முழு நேர குழந்தைத் தொழிலாளர்களுக்கு அப்பால், மேலுமொரு 57 இலட்சம் குழந்தைகள் வருடத்தில் ஆறு மாதங்கள் பல்வேறு விதமான வேலைகளில் அமர்த்தப்படுவதும் அக்கணக்கெடுப்பின் வழியாக அம்பலத்திற்கு வந்தது.
இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாகத் தடை செய்வது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள உடன்படிக்கைகள் (conventions) 138 மற்றும் 182 ஆகியவற்றுக்கு இசைவாகக் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது என்ற முகாந்திரங்களின் அடிப்படையில், 1986-ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்து, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி, அரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது, மோடி அரசு.
14 வயதுக்குக் கீழான குழந்தைகளை எந்தவொரு தொழிலிலும் வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்வதாகக் கூறும் இப்புதிய சட்டம், அதேசமயத்தில், அக்குழந்தைகளைப் பள்ளி நேரம் முடிந்த பிறகும், பள்ளி விடுமுறை நாட்களிலும் தமக்கு உதவியாக, குடும்பத் தொழிலில் ஈடுபடுத்துவதற்குப் பெற்றோர்களுக்கு அனுமதியளிக்கிறது.
ஏழைக் குடும்பங்களின் நிலை கருதி, இப்படியொரு விலக்கு அளித்திருப்பதாகக் கூறும் மோடி அரசு, குடும்பத் தொழிலில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை முதலாளி – தொழிலாளி என்ற நிலையில் பார்க்க முடியாது என்றும், குழந்தைகள் கைவினைஞர்களாக வளர்வதற்கு இது வாய்ப்பளிக்கும் என்றும் கூறி இந்த விலக்கை நியாயப்படுத்தி வருவதோடு, இப்புதிய சட்டம் இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறி வருகிறது.
caption-1ஏழ்மையைச் சாக்கிட்டு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு சலுகை அளிப்பது நயவஞ்சமானது மட்டுமல்ல, இந்த விலக்கு ஒரு முகமூடி. ஏழை குடும்பங்களின் பெயரால் காண்டிராக்டு முதலாளிகள் குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டுவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகை. பட்டாசு, தீப்பெட்டி, பீடித் தொழில்களிலும்; செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருத்தப்பட்டிருக்கும் “இந்திய”க் குடும்பங்களின் நிலைமைகளே, இந்தத் திருத்தத்தால் பலன் அடையப் போவது ஏழை பெற்றோர்களா அல்லது அவர்களின் எஜமானர்களா என்பதை எடுத்துக்காட்டிவிடும்.
இனி, டூ வீலர் மெக்கானிக் ஷாப்களில், நகர்ப்புற தேநீர்க் கடைகளில், உணவு விடுதிகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் குறித்து விசாரித்தால், ”அவன் என் உறவுக்காரன்” எனக் கூறித் தப்பித்துக் கொள்ளும் ஓட்டையை இச்சட்டத் திருத்தம் சிறுவர் உழைப்பைச் சுரண்டும் அனைவருக்கும் வாரி வழங்கியிருக்கிறது.
மோடி அரசு குறிப்பிடும் இந்தியத் தன்மை என்பது சாதிரீதியான வேலைப் பிரிவினைக்கு வக்காலத்து வாங்கும் பூடகமான சொல்லாடல் தவிர வேறில்லை. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த குருமூர்த்தி, “நாடார், கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட சில குறிப்பிட்ட சாதிகள் தொழிலில், வர்த்தகத்தில் ஈடுபட்டு, வெற்றி பெற்ற கதைகளைக் காட்டி, சாதியை இந்தியாவின் வரமாக”க் குறிப்பிட்டு வருகிறார். இதன் அடிப்படையில் சாதிரீதியான குலத்தொழில், சாதியப் படிநிலை ஆகியவற்றை அங்கீகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல், சாதிகளுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என நாடகமாடி வருகிறது. எனவே, குடும்பத் தொழிலில் ஈடுபடுவதால் குழந்தைகள் கைவினைஞர்களாக மலருவார்கள் எனத் தேன் தடவிச் சொல்லப்படும் மோடி அரசின் வாதத்தைக் கீறிப் பார்த்தால், குலத்தொழில் இழிவைக் குழந்தைகளின் தலையில் சுமத்தும் கயமைத்தனம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.
“குயவனின் குழந்தைகள் மண்பாண்டத் தொழிலையும், செருப்பு தைக்கும் தொழிலாளியின் குழந்தைகள் அறுந்த செருப்புகளைத் தைப்பதையும், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் சாக்கடை குழிக்குள் இறங்குவதையும்” உறுதி செய்யும் மனுதர்மத்தையும்; கூலி ஏழைகளின் குழந்தைகள் கூலித் தொழிலாளர்களாகவே மறுஉற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் முதலாளித்துவ தர்மத்தையும் சேர்த்துப் பிசைந்து இப்புதிய சட்டத்தை உருவாக்கியிருக்கிறது, மோடி அரசு.
18 வயது வரையில் உள்ள அனைவரையும் சிறுவர்களாகக் கருத வேண்டும் என வரையறுக்கிறது சிறுவர் சீர்திருத்தச் சட்டம். இதற்கேற்றபடி, குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்யும் வயது வரம்பை 18 ஆக உயர்த்த வேண்டும் என குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடிவரும் அனைத்துச் சமூக ஆர்வலர்களும் கோரி வருகின்றனர். ஆனால், மோடி அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டமோ, 14 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அபாயகரமான தொழில்களில் பணியமர்த்துவதற்கும் தாராள அனுமதி அளித்திருக்கிறது.
1986 குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் 18 வகையான நேரடி உற்பத்தித் தொழில்களையும், 65 வகையான பதனீட்டுத் தொழில்களையும் அபாயகரமான தொழில்களாக வகைப்படுத்தி, இந்த 83 தொழில்களிலும் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்திருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கை எண் 138-க்கு ஏற்ப இந்த அபாயகரமான தொழில் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்டுப் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கோரி வந்த நிலையில், மோடி அரசு இப்பட்டியலின் எண்ணிக்கையை வெறும் மூன்றாகச் (சுரங்கத் தொழில், வெடிமருந்துத் தொழில் மற்றும் தொழிற்சாலைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிற தொழில்கள்) சுருக்கி, 1986 சட்டம் தடைவிதித்திருந்த பெரும்பாலான தொழில்களில் 14 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்ட பதின்வயது சிறுவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதித்திருக்கிறது.
மேலும், புதிய சட்டத்தில் அபாயகரமான தொழில்கள் என வரையறுக்கப்பட்டிருப்பதை நீக்கும் அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறது, மோடி அரசு. கையூட்டு வாங்கிக் கொண்டு எதையும் செய்து கொடுப்பதற்குத் தயாராக உள்ள அக்கும்பல், சிறுமிகள் விபச்சாரத்தில் தள்ளப்படுவதைக்கூடச் சட்டபூர்வ தொழிலாக அறிவித்துவிடத் தயங்காது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தொழிலாளர்களை சப்ளை செய்யும் காண்டிராக்டர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அவுட் சோர்சிங் முறையில் ஆர்டர்களைப் பெறும் தொழில் நிறுவனங்களுக்கு, மற்ற ஏழை நாடுகளைக் காட்டிலும் குறைவான கூலியில் பொருட்களை உற்பத்தி செய்து, அதன் மூலம் இந்தியாவை உலகின் ஏற்றுமதி கேந்திரமாக மாற்றும் கனவோடு அறிவிக்கப்பட்டுள்ள “மேக் இன் இந்தியா” திட்டத்தின் வெற்றிக்கு இந்தத் திருத்தம் ஒரு பம்பர் பரிசு எனச் சொல்லத் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால், மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம், பழைய சட்டங்களைக் காட்டிலும் ஆகக் கொடிய அபாயங்களும், பிற்போக்குத்தனங்களும் நிறைந்த, 1800-களில் நிலவியதைப் போன்ற குழந்தைகள், சிறுவர்கள் மீதான கட்டுப்பாடற்ற முதலாளித்துவச் சுரண்டலுக்கு நாட்டை நெட்டித் தள்ளியிருக்கிறது.
“குழந்தைத் தொழிலாளர்களைப் புரிந்துகொள்ளுதல்” என்ற ஐ.நா. மன்றத்தின் அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர் முறையை அனுமதிக்கும்பொழுது, அவர்கள் கற்றல் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
அரியானா மாநிலத்திலுள்ள பிவானி பகுதியைச் சேர்ந்த கிராமப்புற ஆசிரியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில், “மற்ற குழந்தைகளை ஒப்பிடும்பொழுது, வயல் வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளின் கற்றல் திறன் மிகத் தாழ்ந்த நிலையில் இருப்பதோடு, படிக்க, எழுத, கணக்குப் பாடங்களைச் செய்ய அவர்கள் மிகுந்த சிரமப்படுவதாகத்” தெரிவித்திருக்கின்றனர்.
”ஒன்றாம் வகுப்பில் சேரும் 100 குழந்தைகளுள் 33 குழந்தைகள்தான் 12-ஆம் வகுப்பிற்குச் செல்வதாக”க் குறிப்பிடுகிறது, ”குழந்தை நிவாரணமும் நீங்களும்” (CRY) என்ற தன்னார்வ அமைப்பு.
ஏழைக் குழந்தைகளின் கல்வியுரிமையை, கற்றல் திறனை அவர்கள் மீது திணிக்கப்படும் உழைப்புச் சுமை பாதிப்பதை இந்த விவரங்கள் நிறுவுகின்றன. இந்நிலையில் 14 வயதுக்குக் கீழான குழந்தைகளைக் ‘குடும்ப’த் தொழிலில், பதின்வயது சிறுவர்களை முதலாளித்துவ நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்ள சட்டபூர்வமாகவே அனுமதித்திருப்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியுரிமையைக் மறுக்கும் சமூகவிரோத நடவடிக்கையாகும்.
இப்படிக் குழந்தை உழைப்பு காரணமாகக் கற்றல் திறன் குறைவாக உள்ள ஏழைக் குழந்தைகளைக் கைதூக்கிவிடுவதற்குப் பதிலாக, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் அவ்வாறான குழந்தைகளுக்குத் தேர்ச்சி அளிக்க முடியாது என அகம்பாவத்தோடு அறிவிக்கிறது, புதிய கல்விக் கொள்கை. அவர்கள் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் உடல் உழைப்பிற்குத்தான் லாயக்கு என முடிவு செய்து அவர்களின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வஞ்சகத் திட்டமும், தப்பித் தவறி அவர்கள் பத்தாம் வகுப்பைத் தொட்டுவிட்டால், அவர்களுக்கு அறிவியல், கணித, ஆங்கில அறிவு தேவையில்லை என முடிவு செய்து, அவர்களை ஒதுக்கி வைக்கும் திட்டமும் புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டிலுள்ள மொத்த குழந்தைத் தொழிலாளர்களுள் 80 சதவீதக் குழந்தைகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்றும், 20 சதவீதக் குழந்தைகள் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்றும் குறிப்பிட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையும், புதிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் அபாயத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
– குப்பன்  vinavu.com

கருத்துகள் இல்லை: