புதன், 5 அக்டோபர், 2016

மோடி, சோனியாவைச் சந்தித்தார் ரணில்!



இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். நாளை (வியாழக்கிழமை ) 6ஆம் தேதி நடக்கவுள்ள இந்திய பொருளாதார மாநாட்டில் ரணில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். ரணில் தன்னுடைய இந்தியப் பயணத்தின்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் இன்று சந்தித்துப் பேசவுள்ளார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதாரம் தொடர்பான உறவு மட்டுமே உள்ளது. சீனாவுடன் ராணுவரீதியான உறவு எதையும் இலங்கை வைத்திருக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வரலாற்றுரீதியிலானது.
இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா-இலங்கை இரு தரப்பு இடையேயான உறவு விரிவானது, ஆழமானது. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக கட்டமைப்புகள் மீட்டெடுப்பது கடினமான பணி என்றபோதிலும், இலங்கை தமிழ்ப் பகுதிகளில் புதிய வீடுகள், பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னை குறித்து சார்க் மாநாட்டில் விவாதிக்க வேண்டும். நாடுகளுக்குள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சார்க் அமைப்பு நீடிக்காது” என்று கூறினார்.   மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: