வெள்ளி, 7 அக்டோபர், 2016

சசிகலாவே பொறுப்பு: டிராபிக் ராமசாமி; ...சும்மா விடமாட்டேன். சிறையில் தள்ளுவேன்”

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், உண்மைகளை மறைக்கும் சசிகலாவே அதற்கு பொறுப்பு. அப்படி ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவரை நான் சும்மா விடமாட்டேன்’ என்று வெகுண்டெழுந்துள்ளார் டிராபிக் ராமசாமி. பதினைந்து நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான விரிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ‘இந்த வழக்கு விளம்பர நோக்கம் கொண்டது’ என சாடியது.

இந்நிலையில் நேற்று விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்டது அப்பல்லோ. வழக்கத்துக்கு மாறாக இந்த அறிக்கையில், முதல்வருக்கு பல்வேறு நோய்கள் இருப்பதாகக் கூறி, நீண்ட நாட்கள் அவர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியில் சொல்லவிடாமல் தடுப்பது அவரது உயிர்த்தோழி எனப்படும் சசிகலாதான். நான் வழக்குத் தொடர்ந்த பிறகுதான் முதல்வர் உடல்நிலை குறித்து இந்த அளவு தகவல்களையாவது வெளியிட்டுள்ளார்கள். ஜெயலலிதா உடல்நலத்துக்குப் பொறுப்பு அப்பல்லோ நிர்வாகமும், சசிகலாவும். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், இவர்களைச் சும்மா விடமாட்டேன். சிறையில் தள்ளுவேன்” என்றார்.   மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: