ஞாயிறு, 2 அக்டோபர், 2016

முதல்வரைப் பார்க்காத கவர்னர்.... சசிகலாவிடம் மத்திய அரசு வாக்குறுதி !

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை யாரும்
சந்திக்க அனுமதிக்கவில்லை. நேற்று மாலை கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குப் போனார். திரும்பி வந்தார். கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு செய்திக் குறிப்பு வெளியானது. அதில், ‘முதலமைச்சருக்கு சிகிச்சை அழைக்கப்படும் வார்டுக்கு சென்று முதல்வரை சந்தித்தார். தன்னை அங்கே அழைத்து போன டாக்டர்களுக்கு நன்றி!' என மையமாகவே குறிப்பிட்டுள்ளனர். கவர்னர், முதல்வரை சந்தித்த படம் ஏன் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. இதுபற்றி நாம் விசாரித்தோம்.
“முதல்வரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியே இருந்தன. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி, ‘ஏன் கவர்னர் சென்று பார்க்கவில்லை?’ என்று அறிக்கை விட்டார். அதன் பிறகு தான் கவர்னர் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார். அப்பல்லோவுக்குப் போனார். அங்கிருந்த டாக்டர்களுடன் பேசியிருக்கிறார். அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழுவினருடன்தான் கவர்னர் பேசினார். முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு கவர்னர் போகவில்லை. அப்பல்லோ குழும தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியிடம் தனியறையில் கவர்னர் ஆலோசனையில் ஈடுபட்டபோது அங்கு, சசிகலா வந்தார். “முதல்வருக்கு என்ன உயரிய சிகிச்சை வேண்டுமானாலும் கொடுங்கள், வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சிகிச்சையளிக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று சசிகலாவிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
பிறகு, தான் கொண்டு வந்த பழக்கூடையை சசிகலாவிடம்தான் கொடுத்து விட்டு கிளம்பினார். கவர்னர், முதல்வரை பார்க்கவில்லை என்று வெளியே சொன்னால், அது இன்னும் சிக்கலை உண்டாக்கிவிடும் என்றுதான் அப்பல்லோ மருத்துவனை கடந்த ஒருவாரமாக வெளியிடும் செய்தி குறிப்பு போலவே கவர்னர் மாளிகையில் இருந்தும் செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது” என்று சொல்கிறது கவர்னர் மாளிகை.   மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: