ஞாயிறு, 2 அக்டோபர், 2016

கொதிக்கும் அதிமுக தொண்டர்கள்... அமைச்சர்களுக்கு மட்டுமல்ல... எங்களுக்கும் அவர் அம்மா தான்...!’

விகடன்,காம்  ;தமிழக முதல்வர் ஜெயலலிதா, திடீர் உடல் நலக்குறைவு
காரணமாக அப்போலோவில் சேர்க்கப்பட்டதில் இருந்து தமிழகம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது.அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள, கிரீம்ஸ் சாலை முழுவதும் அதிமுக தொண்டர்களும்,பலதரப்பட்ட வி.ஐ.பி.களும் குவிந்துள்ளனர்.எந்நேரமும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையின் நுழைவு வாயிலுக்கு முன்பு போலீஸார் தடுப்பு அமைத்துள்ளனர். தடுப்பைத் தாண்டி மருத்துவமனைக்குச் சென்று முதல்வரின் உடல் நிலை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிமுகவினரின் எண்ணமாக இருக்கிறது. அதனால்,மருத்துவமனை உள்ளே அனுமதிக்கக் கோரி தொண்டர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றாடக் காட்சியாக இருக்கிறது. ஆனால், அதற்கு போலீஸார் அனுமதி மறுக்கின்றனர். தடுப்புக்கு முன்பாக நிறுத்தப்படும் தொண்டர்கள், மருத்துவமனை வாசலைப் பார்த்தபடியே மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர்.

முதல்வரின் உடல் நிலை குறித்து செய்தி சேகரிக்க வரும்  செய்தியாளர்கள், மாவட்ட செயலாளர்கள், இதர கட்சி நிர்வாகளிடம் எல்லாம், 'அம்மா எப்படி இருக்காங்க?' என்று தொண்டர்கள் விசாரித்தபடி இருக்கின்றனர்.
தினமும் அப்பல்லோவுக்கு வருவதும், அனுமதி மறுப்பால் 'கேட்' டிலேயே காத்திருந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்துவிட்டு திரும்பும் சென்னை ஓட்டேரி சேர்ந்த பீனிக்ஸ் எபிநேசன் என்பவரிடம் விசாரித்தோம்.
"அம்மாவை அனுமதித்த அந்த வியாழக்கிழமை (22-ந்தேதி) இரவிலிருந்து நானும் விடாமல் இங்கே வந்து போய்க் கொண்டிருக்கிறேன். உள்ளே போக அனுமதி மறுக்கிறார்கள்.
அப்பல்லோவுக்கு வந்தவங்களை தடுத்து நிறுத்தி,கட்சி நிர்வாகிங்க வீட்டுக்குப் போகச் சொன்னதால 23ம் தேதி  எல்லோரும் அங்கிருந்து கிளம்பிப் போயிட்டோம். 'கூட்டம் சேர்றது அம்மாவுக்குப் பிடிக்காது... அம்மாவே உங்களை வீட்டுக்குக் கிளம்ப சொல்றாங்க'ன்னு அழுத்திச் சொன்னதாலதானே நாங்க கிளம்பினோம்.
எங்களையெல்லாம் போகச் சொல்லிட்டு, 28ம் தேதியும்  29ம் தேதியும் மட்டும் ஏன் அத்தனை அமைச்சர்களும்  மருத்துவமனைக்கு ஓடி வந்தாங்க... அவங்க எங்களுக்கும்தானே அம்மா! அமைச்சர்களுக்கும் , மாவட்டச் செயலாளருக்கும் மட்டும்தான் அம்மாவா!
அம்மா விவகாரத்துல எதையோ மறைக்கிறார்களோ என்ற சந்தேகம் அ.தி.மு.க தொண்டர்களான எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அம்மா ஹெல்த் சம்மந்தமா ஹாஸ்பிட்டலில் கொடுக்கும் அறிக்கையை மட்டும்தான் இப்போதைக்கு நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறோம். பத்து நாள் ஓடிப்போச்சு. 'நான் நல்லா இருக்கேன்' னு அம்மாவின் வாய்ஸை வாட்ஸ்அப் மூலமாவது ரிலீஸ் பண்ணுங்க... " என்று கொதிக்கிறார் எபிநேசன்.
இது எபிநேசனின் குரல் மட்டும் அல்ல, அப்போலோவில் நாம் சந்தித்த பல அதிமுக தொண்டர்களின் குரல் இதுவாகத்தான் இருக்கிறது.அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பும் அதிமுக அப்பாவித் தொண்டர்களுக்கு எப்போது விடைகிடைக்கும்

கருத்துகள் இல்லை: