வியாழன், 7 ஏப்ரல், 2016

கலைஞரின் வீடே ஒரு சமத்துவபுரம்தான் ....அம்பட்டன் கருணாநிதி என்று வெறுப்பாளர்கள்...யுவகிருஷ்ணா ..

சாதியை கடப்பது சாமானிய சாதி மறுப்பாளனின் பெருங்கனவு. தந்தை பெரியாரின் குடும்பத்திலேயே கூட முழுமையாக நடைமுறைக்கு வராத இந்த சாதனையை தன் குடும்பத்தில் முழுக்க நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர் ஒருவர்தான். உயர்சாதியான பார்ப்பனரில் தொடங்கி, கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் வரை கலைஞரின் குடும்பத்தில் உண்டு. சாதியெதிர்ப்பு/மறுப்பு பேசுபவர்கள், இந்தியாவில் வேறு எந்தத் தலைவனின் குடும்பமாவது இப்படி சமத்துவபுரமாக மாறியது என்று உதாரணம் காட்ட முடியுமா? சாதிய அடையாளத்திலிருந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்ட கலைஞரைதான் இன்னமும் அவர் பிறந்த சாதி துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதே வேதனை. 
luckylookonline.com :சிறுவயதிலிருந்தே அந்த சலூனில்தான் சிகையலங்காரம். அங்கே காந்தி கண்ணாடியும், குல்லாவும் போட்ட ஒரு மனிதரின் கருப்புவெள்ளை புகைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் அந்த மனிதர் சலூன் உரிமையாளரான மோகன் அண்ணாவின் தாத்தா என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்தபிறகுதான் அவரை அறிந்துக் கொண்டேன்.

ஒருமுறை முடிவெட்டிக் கொண்டிருந்தபோது அண்ணனிடம் கேட்டேன். “அண்ணே, அந்த போட்டோலே இருக்குறது யாரு?”

“தியாகி விஸ்வநாததாஸ். எங்க ஜாதித்தலைவரு”

“ஓஹோ. அவர் என்ன பண்ணாரு?”

“அதெல்லாம் தெரியாது. சுதந்திரப் போராட்ட தியாகின்னு மட்டும்தான் தெரியும். எல்லா ஜாதிக்கும் ஒரு தலைவர் போட்டோ வேணுமில்லே? அதனாலே இவரை செலக்ட் பண்ணிக்கிட்டோம்”

விஸ்வநாததாஸ், சங்கரதாஸ் சாமிகளிடம் சீடர். காந்தியடிகளின் தொண்டர். முப்பது முறை சிறை சென்றவர். நாடகமேடையில் முருகனாக தோன்றினாலும் கதர்தான் உடுத்துவார். புராண நாடகங்களிலும் சுதந்திரப் போராட்ட கீதங்களை பாடி வெள்ளையர் அரசால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர். நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே காலமானவர் என்று எனக்குத் தெரிந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.

“எங்க ஜாதித்தலைவரை பத்தி, எனக்குத் தெரிஞ்சதைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு” என்றார்.

“இப்பவே ரொம்ப ஃபேமஸான தலைவர் இருக்காரே அண்ணே? திமுககாரரான நீங்க எதுக்கு காங்கிரஸ் தலைவரை முன்னிறுத்தறீங்க?”

“கலைஞரைதானே சொல்லுறே? அவர்தான் என் படத்தை ஜாதி போஸ்டர்லே போடக்கூடாதுன்னு சொல்லிட்டாரே? ஜாதின்னு சொல்லி அவரை யாரும் போய் பார்க்கவும் முடியாது. கட்சி மட்டும்தான் அவருக்கு கணக்கு” என்றார்.

இதுதான் கலைஞர். கலைஞரை சாதிவெறியர் என்று இன்று இணையங்களில் அர்ச்சிப்பவர்கள் அவரை என்றாவது அவருடைய சொந்த சாதி சங்க கூட்டங்களில் கண்டதுண்டா? கலைஞரின் சாதிக்காரன் என்று சொல்லி யாரேனும் யாரையேனும் அதிகாரம் செய்ததுண்டா? அரசியல் / அரசு பதவிகளில் தன்னுடைய சாதிக்காரர்களுக்கு கலைஞர் முக்கியத்துவம் தந்தார் என்று நாக்கு மேல் பல்லை போட்டு பேசமுடியுமா?

சாதியை கடப்பது சாமானிய சாதி மறுப்பாளனின் பெருங்கனவு. தந்தை பெரியாரின் குடும்பத்திலேயே கூட முழுமையாக நடைமுறைக்கு வராத இந்த சாதனையை தன் குடும்பத்தில் முழுக்க நிகழ்த்திக் காட்டியவர் கலைஞர் ஒருவர்தான். உயர்சாதியான பார்ப்பனரில் தொடங்கி, கடைநிலையில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் வரை கலைஞரின் குடும்பத்தில் உண்டு. சாதியெதிர்ப்பு/மறுப்பு பேசுபவர்கள், இந்தியாவில் வேறு எந்தத் தலைவனின் குடும்பமாவது இப்படி சமத்துவபுரமாக மாறியது என்று உதாரணம் காட்ட முடியுமா? சாதிய அடையாளத்திலிருந்து வெகுதூரத்துக்கு வந்துவிட்ட கலைஞரைதான் இன்னமும் அவர் பிறந்த சாதி துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதே வேதனை.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஜூனியர் விகடன்’ ஏடு, ஒரு கட்டுரை எழுதியது. “ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவை பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து கொண்டாடினார் கருணாநிதி” என்று காரசாரமாக விமர்சித்தது. வாசித்த சூத்திரமகாஜனங்களும் பதறிப்போய், “ஒரு சூத்திரனுக்கு இப்படியொரு வாழ்வா?” என்று மனம் வெதும்பினார்கள்.

ஜூ.வி. இதழ் அக்கட்டுரையில் ‘வேண்டுமென்றே’ மறைத்த செய்தி ஒன்றுண்டு. கலைஞர், பட்டுவேட்டி பட்டுசட்டை அலங்காரத்தில் கலந்துக்கொண்ட நிகழ்வு தஞ்சையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி. பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் கலைஞர்கள் ஆடிய நிகழ்ச்சி. கரைவேட்டியை தவிர வேறு உடையை நாடாத கலைஞர், அன்று ஏன் பட்டினை தேர்ந்தெடுத்தார் என்கிற ரகசியம் அவரது சமூகத்தாருக்குதான் தெரியும். ஆயிரம் ஆண்டு சாதிய இழிவை துடைத்தெறிந்துவிட்டோம் என்பதன் அடையாளமாகதான் அன்று கலைஞர் பட்டு வேட்டி, சட்டையில் ஜொலித்தார்.

எதற்கு பூசி மெழுகிக் கொண்டிருக்க வேண்டும்? கிராமங்களில் இன்றும் சாதாரணமாக ‘அம்பட்டன் கருணாநிதி’ என்றுதான் கலைஞர் வெறுப்பாளர்கள் அருவருப்போடு விளிக்கிறார்கள். கழகத்தை ‘அம்பட்டன் கட்சி’ என்றுதான் ஐம்பது ஆண்டுகளாக விமர்சிக்கிறார்கள். இதில் ஒளிவுமறைவு ஏதுமில்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாக கழகத்துக்காக / கலைஞருக்காக பாடுபட்ட அண்ணன் வைகோவுக்கும், அவர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டதே என்பதுதான் ஆதங்கம். “வைகோவின் பேச்சை கண்டிக்கிறோம்” என்று கூறிவிட்டு, கூடவே ‘ஆனால்’, ‘அதே நேரம்’ போடும் அறிவுஜீவிகளும் இதே ரகம்தான். இடதுசாரிகளை சொல்லவே தேவையில்லை. அவர்கள் சாதி சங்கம் நடத்தப் போகலாம்.

‘திமுக, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது; கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது’ என்கிற பலரது உள்மன விருப்பத்துக்கு கலைஞர் பிறந்த சாதியும் காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. சாதிய ஒடுக்குமுறைகளை கண்டிப்பதில் எவரையும்விட அதிக கடமை கொண்டவர்களான தலித்துகளே இதற்கு துணைபோகக்கூடிய விசித்திரமான சமூகமுரணைதான் எப்படி புரிந்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: