வியாழன், 7 ஏப்ரல், 2016

கலைஞர் எச்சரிக்கை :திமுக பேச்சாளர்கள் கண்ணியத்துடன்,நாகரீகத்துடன் பேசவேண்டும்

திமுக பேச்சாளர்கள் கண்ணியம், நாகரிகத்துடன் பேச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நாகை நாகராஜன் என்பவர், இஸ்லாமிய மதம் குறித்து தவறான கருத்துக்களை பேசியதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை கழகப் பேச்சாளராக நாகை நாகராஜன் என்றொருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், திமுக மேடைகளில் உரையாற்றுவோர் நமது இயக்கத்திற்குரிய கண்ணியத்தோடும், நாகரிகத்தோடும் பேச வேண்டும்.

ஆர்வம் மிகுதியால் மதம் சம்பந்தமாக ஏதாவது தவறாக பேசினால், அதை மிகைப்படுத்திட மாற்று கட்சியினர் மட்டுமல்ல, வேறு சிலரும் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி திமுக மீது அவதூறு வீசிட எப்போது நேரம் கிடைக்கும் என அவர்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
எனவே திமுக கூட்டங்களில் பேசுவோர் யாகாவாராயினும் நா காக்க என்று திருவள்ளுவர் வழங்கியிருக்கும் அறிவுரையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு பேச வேண்டும்.
நாகை நாகராஜன் தவறாக எதுவும் பேசியிருந்தால், அது திமுகவின் கருத்தல்ல என்று மறுப்புத் தெரிவித்துக் கொள்கிறேன், அந்த குறிப்பிட்ட பேச்சாளரும் இதனையை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இனி கட்சி மேடைகளில் மிகுந்த கவனத்துடன் பேச வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: