திங்கள், 4 ஏப்ரல், 2016

குற்றப்பரம்பரை பாரதிராஜ இயக்கி நடிக்கிறார்...தொடக்க விழா ....பாரதிராஜா-பாலா மோதல்.....?

குற்றப்பரம்பரை பட விவகாரத்தில் பாரதிராஜாவுக்கு ஆதரவாக டைரக்டர்கள் திரண்டனர். உசிலம்பட்டி அருகே நடந்த தொடக்க விழா பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர்.  குற்றப்பரம்பரை கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது. விஷால், ஆர்யாவை நடிக்க வைத்து இந்த கதையை படமாக்க பாலா தயாராகி வந்தார். இதன் கதையை வேல ராமமூர்த்தி எழுதி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா படங்களுக்கு கதை வசனம் எழுதி பிரபலமான இயக்குனர் ரத்னகுமார் குற்றப்பரம்பரை தன்னுடைய கதை என்றார். 1997-ல் இந்த கதையை எழுதியதாகவும் சிவாஜிகணேசனை வைத்து படமாக்க பாரதிராஜா முன் வந்ததாகவும் பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பாரதிராஜாதான் இந்த கதையை படமாக்க வேண்டும் என்றும் பாலா இயக்கினால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்தார்.

ரேகை சட்டம்

ஒரே கதையை படமாக்க இரண்டு பேர் போட்டி போட்டதால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் 90 சாதி மக்களை குற்றப்பரம்பரையாக பட்டியலிட்டு அவர்கள் மீது ரேகை சட்டத்தை திணித்து கொடுமைப்படுத்தினர். இந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் பலியானார்கள். 1947-ல் ரேகை சட்டம் நீக்கப்பட்டது. இந்த வரலாற்று பின்னணியை மையமாக வைத்து குற்றப்பரம்பரை கதையை எழுதி உள்ளனர்.

இந்த நிலையில் குற்றப்பரம்பரை படத்தை இயக்குவதற்கான பணிகளை பாரதிராஜா தற்போது தொடங்கி உள்ளார். இதன் படப்பிடிப்புக்கான தொடக்க விழா பூஜையை, ரேகை சட்டத்தை எதிர்த்து 1940-ல் போராட்டம் நடந்த உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் நேற்று நடத்தினார். இதில் பாரதிராஜாவுக்கு ஆதரவாக இயக்குனர்கள் சீமான், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, சுசீந்திரன், பாண்டிராஜ், சுப்பிரமணியம் சிவா, மகிழ் திருமேனி, மீரா கதிரவன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, ஜீவன், நவீன், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உள்ளூரை சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்றார்கள்.

சிவாஜி வேடத்தில்

விழாவில் பாரதிராஜா பேசும் போது, ‘‘குற்றப்பரம்பரை படத்தை சிவாஜி கணேசனை வைத்து இயக்க திட்டமிட்டேன். அது நடக்காமல் போய் விட்டது. இப்போது நானே சிவாஜி கணேசன் வேடத்தில் நடித்து இந்த படத்தை இயக்குகிறேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்’’ என்றார்.   dailythanthi.com

கருத்துகள் இல்லை: