புதன், 6 ஏப்ரல், 2016

அ.தி.மு.கவில் ...வேட்பாளர்களை எதிர்த்து உள்குத்து இப்பவே ஆரம்பம்

நேற்றுமுன்தினம், தேய்பிறை அன்று வெளியிடப்பட்ட அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலுக்கு, அதற்குள், கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பின் ஒதுக்கப்பட்டு அவமானப்பட்டதை போல், இந்த முறையும் நடக்குமா என்ற கிலியில் வேட்பாளர்கள் உள்ளனர். இதே போல், விழுப்புரம் மாவட்டத்தில், மொத்தமாக அதிருப்தி கிளம்பி உள்ளது. இங்குள்ள 11 தொகுதிகளில், மூன்று தனி தொகுதிகள் போக, மீதமுள்ள எட்டு தொகுதி களில், தற்போது, நான்கு வன்னியர் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் நான்கு மற்ற சமூகங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். ஆனால், தற்போதைய பட்டியலில் ஏழு வன்னியர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இது, கட்சியில் உள்ள மற்ற சமூகத்தினரை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. பட்டியலில், 48 <எம்.எல்.ஏ.,க்கள், 20 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், ஆறு முன்னாள் எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.

மீதமுள்ள 153 தொகுதிகளில், 139 பேர் உள்ளாட்சி பதவிகளில்இருப்பவர்கள். ஏற்கனவே உள்ளாட்சி பொறுப்புகளில் உள்ள பெரும்பாலானோர் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில், இவர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்ற கேள்வி, கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வினர் திகைத்துப்போயுள்ள இந்த நிலை, தி.மு.க.,வுக்கு கொண்டாட்டமாகப் போய்விட்டது. ஏனெனில், கடந்த தேர்தலில், தி.மு.க.,வில் ஏற்பட்ட வேட்பாளர் அதிருப்தி நிலை, இம்முறை, அ.தி.மு.க.,வை பிடித்துள்ளதாக அக்கட்சியினர் சொல்கின்றனர்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: