வியாழன், 7 ஏப்ரல், 2016

விஜயகாந்த் ஆணை :ஜெ., - ஸ்டாலினை திட்டி தீருங்க.....ஓஹோ இதாய்ன் கொள்கை விளக்கம் என்கிறதா?

ஜெயலலிதா மற்றும் ஸ்டாலினை திட்டி தீர்த்து பேட்டி அளித்த பிறகே, விஜயகாந்தை சந்திக்க, தே.மு.தி.க., நிர்வாகிகள் அனுமதிக்கப்பட்ட தகவல் அம்பலமாகிஉள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள் யாரும் பத்திரிகை மற்றும், 'டிவி'க்களுக்கு பேட்டி அளிக்க கூடாது; 'டிவி' விவாதங்களில் பங்கேற்க கூடாது என, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.இந்நிலையில், விஜயகாந்திற்கு எதிராக, புதிய அணியை சந்திரகுமார் உருவாக்கி உள்ளார். அவரை தொடர்பு கொண்டு, பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


அதற்கு பதிலடி கொடுக்க, தலைமை அழைப்பின்படி, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும், நேற்று சென்னை வந்தனர். விஜயகாந்தை சந்தித்து பேச விரும்பினர். ஆனால், அவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை. கட்சி, 'டிவி' சார்பில், அவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. விஜயகாந்தை ஆதரிப்பதாக அளித்த அதே பேட்டியை, மற்ற செய்தி சேனல்களுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலினை கடுமையாக விமர்சிக்க வேண்டும். அதன்பிறகு சந்திரகுமார் அணியினரை விமர்சிக்க வேண்டும் என்றும்
அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி, பேட்டி அளித்தவர்களுக்கு மட்டுமே, விஜயகாந்தை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

மா.செ., கூட்டம்: விஜயகாந்த் கைவிரிப்பு:
தே.மு.தி.க., கொள்கை பரப்புச் செயலர் சந்திரக்குமார், மாநில துணை செயலர் தேனி முருகேசன், எம்.எல்.ஏ.,க்கள் சேகர், பார்த்திபன் மற்றும் மாவட்டச் செயலர் சிலர், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளனர். கூட்டணி முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அவர்களை, கட்சி தலைவர் விஜயகாந்த் நீக்கினார்.எதிர்ப்பு குரல் எழுப்பிய மாவட்டச் செயலர்களுக்கு பதிலாக, புதிய நிர்வாகிகள் உடனடியாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் பலர், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்; விலக மாட்டோம் என, வாக்குறுதி அளித்தனர். பதிலடி கொடுக்கும் வகையில், மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை, உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், 'அதற்கு அவசியம் இல்லை' என, விஜயகாந்த் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரம் கூறியதாவது: மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் முடிவை, மார்ச், 23ல் விஜயகாந்த் எடுத்தார். வரும், 10ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரில், கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு நடக்கும் என, அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.ஆனால், இந்த தகவல், இதுவரை மாவட்டச் செயலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. 'சீட்' பெற கட்டிய பணத்தை திரும்ப கேட்டு, மாவட்டச் செயலர்கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். எனவே, அவர்களை சந்திக்க, விஜயகாந்த் தயங்குகிறார். இதற்காகவே, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை, அவர் விரும்பவில்லை. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் --

கருத்துகள் இல்லை: