வியாழன், 7 ஏப்ரல், 2016

தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி பேச்சு வார்த்தை..சிக்கல் தொடர்கிறது

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், இரண்டு கட்சிகளும் போட்டியிடக் கூடிய தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை, தி.மு.க., விட்டுக் கொடுக்க மறுப்பதால், தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., சார்பில் பொருளாளர் ஸ்டாலின், துணை பொதுச் செயலர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கொண்ட குழு, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன் கொண்ட காங்கிரஸ் குழுவிடம், போட்டியிடும் தொகுதிகளை கண்டறிவது தொடர்பாக நேற்று, சென்னை அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஒரு மணி நேரம் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. சென்னை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் போன்ற மாவட்டங்களில், தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளையே, காங்கிரஸ் தரப்பும் கேட்பதால், தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருந்த போதும், இன்று மீண்டும் இரு தரப்பும் கூடிப் பேசுகிறது. சுமுகமாக முடியும்! இரு தரப்பும் தொகுதிகளை பங்கிடுவது குறித்து பேசினோம்; தொடர்ந்து பேசுவோம். இரண்டொரு நாளில், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையும்.
இளங்கோவன்
தலைவர், தமிழக காங்கிரஸ்

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: