வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அதிமுக தேர்தல் கமிஷன் ரகசிய பேச்சுவார்த்தை.....இம்முறையும் வாங்கப்பட்டுவிட்டதா?

விகடன்.காம் ;தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக, சென்னை வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசிய ரகசிய பேச்சின் சாராம்சம் அம்பலமாகியுள்ளது. சட்டமன்றத்  தேர்தல்,  வருகிற மே 16-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி. இப்படியே போனா நாட்டிலேயே அம்பானி. டாடா, அதானி போன்றவர்களை விட தமிழக தேர்தல் ஆணையர்கள் வெற்றிகரமான....

தி.மு.க சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி, சண்முகசுந்தரம் ஆகியோரும், அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், நவநீதகிருஷ்ணன், இன்பதுரை உள்ளிட்டோரும் ஆணையரைச் சந்தித்தனர்.
இதுதவிர, காங்கிரஸ், தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆணையரை தனித்தனியே சந்தித்தனர்.
தேர்தலில், 'அ.தி.மு.கவுக்காக தேர்தல் வேலை பார்க்கும் அதிகாரிகளை நீக்க வேண்டும். பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தி.மு.கவினர் முன்வைத்ததாக, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால், அ.தி.மு.க நிர்வாகிகள் என்ன பேசினார்கள்? என்பதைப் பற்றிய விவரத்தை அக்கட்சியின் தலைமையும் வெளியிடவில்லை, அ.தி.மு.க சீனியர்களும் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், வேறு வழியாகச் சென்றுவிட்டனர். ஒவ்வொரு கட்சிக்கும் பத்து நிமிடங்களை ஒதுக்கியிருந்தார் ஜைதி. அவரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் பேசியது என்ன? என்பதைப் பற்றி விசாரித்தோம்.

இது தொடர்பாக, நம்மிடம் விரிவாகப் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " நேற்று இரவு 7.30 மணியளவில் நஜீம் ஜைதியை சந்திக்க, எங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஏழு நிமிடங்கள்தான் எங்களிடம் பேசினார். எழுத்துபூர்வமான குற்றச்சாட்டாக எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. 'அவரிடம் என்ன சொல்ல வேண்டும்?' என அம்மா சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அவரிடம் பேசினார் தம்பிதுரை. முதல் கோரிக்கையாக, கட்சித் தலைவர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களை நடத்தும்போது, அந்தக் கூட்டத்தின் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் செலவுக் கணக்கு அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விடுகிறது. இந்தமுறையை நீக்க வேண்டும். அடுத்து, சுவர் விளம்பரங்களை எழுதுவதற்கு ஆர்.டி.ஓ வரைக்கும் அலைந்து சென்று அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக, எளிய முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பொதுவான சில குறைகளைச் சொன்னோம். அடுத்து சொன்னவை அனைத்தும் பர்சனலான குற்றச்சாட்டுகள்தான்" என இழுத்தவர்,

சிறிது நிமிடத்திற்குப் பின், " அம்மாவின் சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டான பணம் கண்டெய்னரில் கடத்தப்படுவதாக செய்திகள் வெளியானது. இதனால் அம்மா ரொம்பவே அப்செட்டில் இருந்தார்.
இதைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான இமேஜை உருவாக்கும் வகையில் எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் செயல்படுகின்றன. சிறுதாவூர் பங்களா கண்டெய்னர் பற்றி யாரும் பேசக் கூடாது. அதைப் பற்றி அவதூறான செய்திகளும் வெளியாகக் கூடாது என்பதை முக்கியமான கோரிக்கையாக முன்வைத்தோம். அதேபோல், நத்தம், ஓ.பி.எஸ் ஆகியோரிடம் இருந்து பல்லாயிரம் கோடிகள் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக, சில பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இதைப் பற்றி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அமைச்சர்கள் குறித்து இவ்வாறு செய்தி பரப்பப்படுவது கட்சியைப் பற்றி, மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தும். எனவே, சிறுதாவூர் பங்களா கண்டெய்னர் பற்றியோ, அமைச்சர்கள் பற்றியோ யாரும் இனி அவதூறாகப் பேசக் கூடாது. தேர்தல் பிரசாரத்தில் இதைப் பற்றிப் பேசுவதை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என்பதைத்தான் விலாவரியாக தெரிவித்தோம்.
இதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார் நஜீம் ஜைதி. இதை அம்மாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிட்டோம்" என்றார் அமைதியாக.

'தேர்தல் களத்தில் என்ன பேசப்பட வேண்டும் என்பதைக்கூட அ.தி.மு.க தலைமைதான் தீர்மானிக்க வேண்டுமா?' எனக் கொந்தளிக்கிறார்கள் நஜீம் ஜைதியைச் சந்தித்துவிட்டு வந்த அரசியல் கட்சிகள்.
ஆணையம் யார் பக்கம்? என்பதெல்லாம் ஓரிருநாளில் தெரியலாம்.

-ஆ.விஜயானந்த்
- படம்:ப.சரவணகுமார்

கருத்துகள் இல்லை: