வியாழன், 15 செப்டம்பர், 2011

நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய கன்னட தயாரிப்பாளர் சங்கம்

ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் தடை விதித்தது தவறான முடிவு. மிக அவசரப்பட்டு நாங்கள் அறிவித்த இந்த முடிவுக்காக நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். இதற்கான மன்னிப்புக் கடிதத்தை நிகிதாவுக்கு அனுப்பியுள்ளோம், என்று கன்னட திரைப்பட சங்கத் தலைவர் முனி ரத்னா அறிவித்தார்.

இன்று பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "நிகிதா இனி எந்த கன்னடப் படத்திலும் நடிக்கலாம். தடை ஏதுமில்லை.

அவர் மீது நாங்கள் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துவிட்டோம். ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டில் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் அது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

இதற்காக நடிகை நிகிதாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்களது மன்னிப்பை எழுத்துப்பூர்வமாக நிகிதாவுக்கு தெரிவித்துள்ளோம்.

அதேநேரம், இப்போது சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு தடை விதிக்கும் திட்டம் ஏதுமில்லை," என்றார்.

அனைவருக்கும் நன்றி - நிகிதா

தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நீக்க உத்தரவு வெளியானதும் அதுகுறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்த நிகிதா, தனக்காக இந்த விஷயத்தில் தலையிட்டு நீதி பெற்றுத் தந்த பர்வதம்மா ராஜ்குமாருக்கு நன்றி தெரிவித்தார்.

பர்வதம்மாவுக்கு மிக நெருக்கமானவர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி. இருந்தும், 'இந்த விவகாரத்தில் நிகிதா மீது எந்தத் தவறும் இல்லை. தர்ஷன் - விஜயலட்சுமி விவகாரத்தில் நிகிதாவை இழுத்தது அநாகரீகம்' என பர்வதம்மா கூறியிருந்தார்.

இதுகுறித்து நிகிதா கூறுகையில், "பர்வதம்மாவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நியாயம் என்ன என்பதை நன்கு உணர்ந்தவர் அவர். அதனால்தான் என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

இந்த நெருக்கடியை காட்டி அனுதாபம் மூலம் பப்ளிசிட்டி தேட நான் விரும்பவில்லை. நான் ஏற்கெனவே தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்துவிட்டேன்.

எனவே இப்போதைக்கு எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை. எனக்காக ஆதரவுக் குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி," என்றார்.

கருத்துகள் இல்லை: