திங்கள், 18 அக்டோபர், 2010

போராளிகளக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக பெருந்தொகைப் பணம் செலவிடப்படுவதாக

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக பெருந்தொகைப் பணம் செலவிடப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு மே மாதம் முதல் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக மட்டும் சுமார் நூறு மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதனால் செலவுகள் 65 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் சுமார் 11000 போராளிகள் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும், இதில் ஏற்கனவே சுமார் 5000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வவுனியாவில் காணப்படும் 12 புனர்வாழ்வு மையங்களில் தொழிற் பயிற்சிகளை பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு பயிற்சிகளை பூர்த்தி செய்த 4500 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏற்கனவே தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஆயிரத்து ஐநூறு முன்னாள் போராளிகளுக்கு விரைவில் விடுதலை அளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை: