சனி, 23 அக்டோபர், 2010

நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம்

பணிக்கனும் பணத்தாளும்  : ஒரு சுவையான தகவல்
- எச்.எம்.எம்.பஷீர் 
“ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்
பாவானர் பாடப் பல்லுரெல்லாம் வாழ்க!
மாத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர
என்றார் பணிக்கர் குலத்திப னேந்திடம்
கண்டறிந்து மாயவன் கருணைதனை யுண்மை யென்று
'விமலதரு மனென்' னும் வேந்தனாக மகிழ்ந்து
கமல விழிக் கண்ணன் கருணை தங்குமிப்பதிக்கு
வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும்
தூண்டு திகிழி தந்தம் சோதியெழ யீந்து மன்னன்
'கண்டி நகர்' சென்றான் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் பார்”.
                                 ( தாதன் கல்வெட்டு )

ஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம் என்ற தலைப்போடு ஒரு செய்தி பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பான இணையத்தளமொன்றில் பிரசுரமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஏறாவூர் வரலாறு பற்றி  எழுதப்பட்ட நூலொன்றில் (2005) இது பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் ஆங்கிலத்தில் வெளியான செய்திகுறிப்பும் அன்னூலில் வெளியான தமிழ் குறிப்பின் ஆங்கில மொழியாக்கமாகவே காணப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அக்குறிப்புரையை இங்கு மொழிபெயர்த்து உங்களின் வாசிப்புக்கு விட்டுவிட்டு அது பற்றிய சில செய்திகளையும் பார்ப்போம்.
“எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை)  ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும்  ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே. அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது,  
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும்  பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து  ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி  15 ஜூலை 1988ல்   இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான  நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சந்ததியினர்  இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற”  (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில்  அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று   ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது
இந்த யானை பன்னிரெண்டு வயதில் உமர் லெப்பை பணிக்கரால் பிடிக்கப்பட்டதென்றும்  முறையாக அதனை விற்பனை செய்யும் சட்ட விற்பனைக்கான ஆவணம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்துக்காக அந்த கொம்பன் யானை ஆனால் அதை வாங்கிய நீதி திறை நிர்வாகியான கண்டி யட்டினுவர திஸ்ஸாவ  டிக்கிரி பன்டா மாம்பிட்டிய என்பவர் 1937ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 22ம் திகதி அதனை தலதா மாளிகாவையின் பொறுப்பாளரான தியவதன நிலமேயிடம் சம்பிரதாயபூர்வமாக  அன்பளிப்பு செய்தார். இந்த யானயை கேகால்ல வரை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிற‌து.  உமர் லெப்பை பணிக்கர் விற்ற இன்னுமொரு யானையான கன்டா எனப் பெயரிடப்பட்ட யானையும் அதே காலப்பகுதியில் டிக்கிரி பன்டா வாங்கியிருந்தார் என்பதுடன் அந்த யானையையும் அவர்  அந்த நிகழ்விலே தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பு செய்துள்ளார் என்ற குறிப்பு ஆங்கில பிரயான எழுத்தாளர் ஒருவரின் குறிப்புரையில் காணப்படுகிறது  மேலும் இவ்யானைகள் புகையிரதம் மூலமே  கடுகண்ணாவைக்கு  கொன்டுவரப்பட்டன என்றும் சில குறிப்புகள் உள்ளன. எது எப்படி இருப்பினும் இந்த யானை தப்பி ஓடி உமர் லெப்பை பணிக்கரை தேடி ஏறாவூர் சென்ற கதை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை ஆனால் நான் விசாரித்தறிந்த தகவலின்படி யானை பிடித்த சில நாட்களிள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் அதனால் உமர் லெப்பை பனிக்கரின் தந்தையார் சினம் கொன்டு தந்து மகன் உமர்லெப்பை பணிக்கரை மீன்டும் அதனை எப்படியாயினும் பிடித்துவர வேன்டும் என்று வற்புறுத்தியதாகவும் யானை தப்பி ஓடிய உடனேயே காட்டிற்குள் தேடிச்சென்று பிடித்து வந்ததாகவும் ஒரு கதை உண்டு.
இலங்கையில் சிவில் யுத்தம் முடிந்து பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டபின் யுத்த வெற்றியை முன்னிட்டு அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு பக்கத்தில் தனது உருவமும் மறு புறத்தில் இராணுவ வீரர்கள் கொடி நாட்டுவதுமான படத்துடன் கூடிய ஆயிரம் ரூபாய் நானயத்தாள் வெளியிட்டார்.
கண்டி ஆட்சி நிர்வாகத்தின் கீழேயே திருகோணமலை மட்டக்களப்பு உட்பட்ட கிழக்கு கரையோரப் பிரதேச பகுதிகள் இருந்துவந்துள்ளன.மட்டக்களப்புக்கு மாருத சேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கம் சிற்றரசனாக இருந்த காலத்தில் பட்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தை பற்றிய இன்னுமொரு கல்வெட்டுக் குறிப்பும் காண‌ப்படுகிறது. அதன்படி எதிர்மன்னசிங்கம் ஒரு பணிக்கன் என்பதையும் அவனின் ஆட்சி காலத்தில் கி.பி 1600 பிற்பகுதிகளில் கண்டிய அரசனாகவிருந்த விமலதர்மசூரியன் 1 ( கோனப்பு பன்டார , டொன் ஜுஆன் எனவும் இவன் கண்டி அரசனாக முடிசூட முன்னர் அறியப்பட்டவன்) இவனே பட்டிருப்பு ஆலயத்திற்கும் காணி மற்றும்  பல நண்கொடைகளை வழங்கியிருந்தான் என தாதன் கல்வெட்டுப்பாடல் ஒன்றை திரெளபதை அம்மன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
எனவே இங்கு சொல்லப்படும் பணிக்கர் குல அரசன் யுத்த பயிற்சியாளனாகவோ அல்லது யானையை பிடிக்கும் தொழில் செய்பவர்களில் ஒருவனாகவிருக்கலாம். ஆனால் மட்டக்களப்பில்  பணிக்கனாகுடி, பணிக்கனர்குலம் என்பன சாதி அடிப்படியிலான சமூகப்பிரிவாகவிருந்தன என்பதையே அவதானிக்க முடிகிறது , ஆயினும் அவை யானை பிடிக்கும் தொழில் செய்பவரின் சமூக பிரிவினரைக் குறித்து சொல்லும் சொல்லாக பாவிக்கப்படவில்லை.
பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலில் பொன்னியின் செல்வன் ( இளவரசன் ) யானைப்பாகனாக மாறு வேடமிட்டு இருப்பதை அவனது இரு உதவியாளர்களில் ஒருவர் அடையாளம் கண்டவுடன் இளவரசனை பாகன் என்று அழைப்பதை மரியாதைக்குறைவாக கருதி அதன் படைப்பாளி கல்கி "பாகர்" என்று ஆள் பார்த்து தகுதி பார்த்து மரியாதைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார் போல் தோன்றுகிறது. பணிக்கன் என்றும் பணிக்கர் என்றும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் பனிக்கர் குலத்தில் அரசர்கள் இருந்ததும் ஒரு காரனமாக இருந்திருக்கலாம்.  என்பது ஒருபுறம் இருக்கட்டும். பாகன் என்பவன் யானையை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர் மட்டுமே குறிக்கும். ஆனால் பணிக்கன் யானையை சாதுரியமாக பிடிப்பவன் , பிடித்து அதனை மனித உபயோகத்திற்கு பயிற்றுவிப்பவன் வர்மம் எனும் தற்காப்பு கலையில் (Martial Art) தேர்ச்சி பெற்றவனையும் பயிற்றுவோனையும் ஆசானையும் (Trainer)  யுத்த பயிற்சி அளிக்கும் பயிற்றுனரையும் கூட பணிக்கர்  அல்லது பணிக்கன் என்று சொல்லப்படுவதுன்டு.  . ஏனெனில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ( வடக்கிலும் கிழக்கிலும்)  யானை பிடித்து பராமரித்தவர்கள் பணிக்கன் என்ற குலமாக  அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் யானை பிடித்த சமூகத்தினர் தமிழர்களோ முஸ்லிம்களோ பொதுவாக பணிக்கர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது
தென்பாண்டி நாட்டில் மாநாடு என்ற பகுதியை கி.பி எட்டாம் நூற்றாண்டளவில் ஆண்ட செண்பக பெருமாள் எனும் குறுநில மன்னன் வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்றும் அதனால் பணிக்கன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த மலையாளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். பல வருடங்களின் பின்னர் கனகசூரியன் யாழ்ப்பாணத்தை கைபற்றியதாகவும் (ராகவன்)கதை உண்டு. எனவே இது வெறுமனே குலம் மதம் மொழிசார் நிலம்  என்ற வர்த்தமானங்களுக்கு அப்பால் பணிக்கர் என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது.. அந்த வகையில் கொம்பன் யானை (ராஜாவை) பிடித்து அது தலதா மாளிகாவையில் பணியாற்ற வழி சமைத்த பணிக்கரும் இலங்கையின்  நாணானயத்தாளில் மிடுக்குடன் நின்று வரலாறு படைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: