வெள்ளி, 22 அக்டோபர், 2010

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை கனேடிய பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலம்!

சட்ட விரோதமாக குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கொண்டுவரும் நபர்களுக்கு தண்டனையளிக்கும் வகையிலான புதிய சட்டமூலத்தை கனேடிய அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்ற பொதுச்சபையில் சமர்ப்பித்தது.

கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் ஆகியோர் இச் சட்டமூலம் குறித்து வான்கூவரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த சட்டமூலத்தின்படி 50 இற்கு மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வருபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அத்துடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளும் ஒருவருட காலம் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம். அவர்களுக்கு சுகாதார நலன்புரி சேவைகள் குறைக்கப்படுவதுடன் நிரந்தர வதிவுரிமையும் நிராகரிக்கப்படலாம். அவர்களின் அகதி விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் 5 வருடகாலம் வரை நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 490 இலங்கையர்கள் எம்.வி.சன்.ஸீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்த பின் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்தவதற்கு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் இந்த உத்தேச சட்டம் குறித்து கூறுகையில், கனடா ஒரு வரவேற்கும் நாடு. ஆனால் எமது முறைகளை துஷ்பிரயோகம் செய்வதை நாம் சகித்து கொள்ளமாட்டோம். எமது இந் நடவடிக்கை மனித கடத்தல்களை நாம் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற செய்தியை கூறுகிறது. எமது பிரஜைகளினதும் அகதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இச்சட்டமூலத்தை குறைகூறுவோர் இதன் மூலம் அகதிகள் குற்றவாளிகளைப் போன்று நடத்தப்படுவர். அத்துடன் இந்த உத்தேச சட்டம் கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
கனேடிய தமிழ் காங்கிரஸ்  கருத்து தெரிவிக்கையில் இப்புதிய விதிகள் நியாயமான அகதி அந்தஸ்து கோருபவர்களின் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தாம் கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: