சனி, 14 ஆகஸ்ட், 2010

யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும்: கனிமொழி

விருதுநகரில் தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கல்லூரி திறப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்குமாறு கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கல்லூரி நிர்வாகி சாவி. நாகராஜன் மெழுகுவர்த்தியை கொடுத்தார். இது பெண்கள் விவகாரம் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். விலகி கொண்டதுடன், இதை பெருமையாக மேடையில் சொன்னார்.
பின்னர் விழாவில் பேசிய கனிமொழி, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேச்சை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால் இன்று அவரது பேச்சை கண்டிக்கிறேன். கல்லூரி நிர்வாகி சாவி நாகராஜன் குத்துவிளக்கேற்ற சொன்னதற்கு, இது பெண்கள் விவகாரம் என்று ஒதுக்கிக்கொண்டீர்கள்.
யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. குத்துவிளக்கை பெண்கள் பற்ற வைத்தால்தான் பற்றுமா? அதுவும் சிவகாசி அருகில் இருந்து கொண்டு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்படி பேசலாமா என்று கனிமொழி நகைச்சுவையுடன் பேச, கூட்டத்தில் இருந்து கே.கே.எஸ்.ஆர். உள்பட அனைவரும் கைதட்டி சிரித்தனர்.

கருத்துகள் இல்லை: