திங்கள், 25 அக்டோபர், 2010

Toronto மாநகரசபைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதும், புலி முகவரும், மக்கள் நலன் விரும்பியும்!

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதும், புலி முகவரும், மக்கள் நலன் விரும்பியும்!
- கனடா கந்தசாமி
கனடாவில் மூன்று நிலைகளில் அரச அதிகாரம் செயற்பட்டு வருகிறது என்பது பலரும் அறிந்த விடயமாகும். ஒன்று தலைநகர் ஒட்டாவாவை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மத்திய அரசாங்கமாகும். இரண்டாவது வகை, மாகாணங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற மாகாண அரசுகளாகும். மூன்றாவது நிலையில் செயற்படுபவை மாநகர, நகர, கிராம மட்ட நிர்வாகங்களாகும். இவற்றில் கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்கு, நாளைய தினம் (ஒக்ரோபர் 25) இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த ஒன்ராறியோ மாகாணத்தில், அதுவும் ரொறன்ரோ பெரும்பாகப் பிரிவில் தான், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் 95 வீதமானோர் வாழ்கின்றனர்.
இந்தத் தேர்தலில் மாநகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும், மத்தியில் ஆட்சியிலுள்ள வலதுசாரி கொன்சவேட்டிக் கட்சியின் ஆதரவு பெற்ற FORD என்பவருக்கும், எதிர்க் கட்சியான லிபரல் கட்சியின் ஆதரவு பெற்ற SMITHERMAN என்பவருக்கும் இடையில், சரிக்கு சரியான ஆதரவு என்ற வகையில் கடும் போட்டி நிலவுகின்றது. இருப்பினும் பொது மக்களின் நலன்களில் Ford ஐ விட ஓரளவு கூடுதலான அக்கறையுள்ள Smitherman வெற்றி பெறக் கூடிய வாய்ப்பே அதிகமாகவுள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரை, இத்தேர்தலில் 42வது  வட்டாரமே அதிகம் கவனத்தை ஈர்த்ததாக இருக்கின்றது. அதற்குக் காரணம், இவ்வட்டாரத்தில் தான், கனடியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான நீதன் சண் (Neethan Shan) என்பவரும், நமு பொன்னம்பலம் (Namu Ponnampalam)  என்பவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
இலங்கையில் நெடுந்தீவு மண்ணை அடியாகக் கொண்ட, நீதன் சண்ணை எடுத்துக் கொண்டால், அவர் நமு பொன்னம்பலம் அளவுக்கு அரசியல் பாரம்பரியம் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவரல்லர். நீதன் சண் தன்னைத் தீவிரமான புலி ஆதரவாளராகக் காட்டிச் செயற்பட்டதின் மூலமே, பிரபலம் தேடிக் கொண்டவர். ரொறன்ரோவில் நடைபெற்ற அநேகமான புலி சார்பு ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பனவற்றுக்கு இவரும் ஒரு முக்கியமான ஏற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்துள்ளார். அந்தச் செயற்பாடுகளின் உச்சக் கட்டமாக, 2004 டிசம்பரில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch), புலிகள் கனடாவில் மேற்கொண்டு வந்த கட்டாய நிதி வசூலிப்பை அம்பலப்படுத்திய பகிரங்க அறிக்கையொன்றை, கனடாவின் ஸ்காபரோ நகரில் வெளியிட்ட நிகழ்ச்சில் பெரும் கலாட்டா செய்த புலி ஆதரவாளர்களில் நீதன் சண் மிக முக்கியமானவராவார். (இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே கனடிய அரசாங்கம் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த நிகழ்வில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட ஒன்ராறியோவின் முன்னாள் பிரதமரும், தற்போதைய லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும், அக் கட்சியின் வெளிவிவகாரப் பொறுப்பாளருமான பொப் ரே (Bob Rae) அவர்களை நீதன் சண் போன்றவர்கள் பேசவிடாமல் தடுத்ததின் மூலம், தமது ஜனநாயக விரோத, பாசியத் தன்னையை அக்கூட்டத்தில் நன்கு நிரூபித்துக் கொண்டனர். பின்னர் அந்நிகழ்வில் உரையாற்றிய பொப் ரே, தனது 25 வருட கால அரசியல் வரலாற்றில், இது போன்ற ஒரு அநாகரிகத்தை ஒருபோதும் எதிர் நோக்கியதில்லை என வர்ணித்திருந்தார். அதனால் தானோ என்னவோ, அண்மையில் நமு பொன்னம்பலத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், ஐக்கிய நாடுகள் சபை கூட்டமொன்றுக்கு செல்ல வேண்டிய தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும், பொப் ரே நேரடியாக வந்து கலந்து கொண்டு தனது ஆதரவை நமு பொன்னம்பலத்துக்கு தெரிவித்தார்.
இலங்கையில் புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டு, அவர்களால் மிரட்டப்பட்டு வந்த தாயகத் தமிழர்கள் மட்டுமின்றி, புலம் பெயுh தமிழர்களும் விடுவிக்கப்பட்டு, அவர்கள் மத்தியில் சிந்தனை மாற்றமும், தெளிவும் ஏற்பட்டு வருகின்ற இன்றைய சூழலில், புலியின் வாலில் இன்னமும் தொங்கிக் கொண்டு இருக்கும் நீதன் சண்ணை, இங்குள்ள தமிழ் மக்கள் ஆதரித்து வாக்களிப்பார்களா என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
மறுபக்கத்தில், இத்தேர்தலில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரான நமு பொன்னம்பலத்தை எடுத்துக் கொண்டால், அவருக்கு சாதகமான பல அம்சங்கள் இருக்கின்றன. அவர் இலங்கையின் வட பகுதியிலுள்ள அளவெட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பிரபலமான கல்வி மற்றும் அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவராவார். அவரது தகப்பனார் வி.பொன்னம்பலம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் ஒரு புகழ்மிக்க ஆசிரியராக இருந்ததுடன், பின்னர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் அதிபராகவும் இருந்தவர். அத்துடன் வடபகுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக கட்டியெழுப்பியவர்களில் ஒருவராக அவர் இருந்ததுடன், 50-60-70களில் மிகச் சிறந்த அரசியல - இலக்கியப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி மல்லாகம் - அளவெட்டி கிராமசபையின் தலைவராகவும், அளவெட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் இருந்து முன்னுதாரணமாகப் பணியாற்றியவர்.
அரசியலில் வி.பொன்னம்பலம் தமிழரசுக்கட்சியின் பிற்போக்குக் கொள்கைகளுக்கெதிராக, அக்கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துடன், காங்கேசன்துறைத் தொகுதியில் பல தேர்தல்களில் நேருக்கு நேர் மோதி, ஒவ்வொரு முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றவர். அதேநேரத்தில் 1977 ஆட்சிக்கு வந்த ஜே.ஆரின் அரசு தமிழ் மக்களுக்கு மேல் இராணுவ ஒடுக்குமுறையைக் கட்டவிழத்து விட்ட போது. ‘செந்தமிழர் இயக்கம்’ என்ற பெயரில் இயக்கமொன்றை ஆரம்பித்துப் போராடியதுடன், பின்னர் தமிழர்களின் பலத்தை ஒன்றுபடுத்தும் நோக்குடன் தனது இயக்கத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைத்துச் செயற்பட்டவர்.
இத்தகைய அரசியல் பின்னணியில் வளர்ந்த நமு பொன்னம்பலம், தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, தான் வாழ்கின்ற கனடாவில் தமிழ் முற்போக்கு ௲ ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்துச் செயல்படுவதுடன், கனடாவின் தேசிய அரசியலிலும் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்துச் செயல்படுகின்ற ஒருவராவார். குறிப்பாக கடந்த காலத்தில், நீதன் சண் பிரதிநிதித்துவப்படுத்தும் புலிப் பாசிசவாதிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளால், கனடியத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்த போது, அதற்கெதிராகத் துணிச்சலுடனும், சளைக்காதும் போராடிய ஒருவராவார். அவர் கனடியத் தமிழ் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையின் அறுவடையாக, தனது வெற்றியை இத்தேர்தலில் எதிர்பார்த்துப் போட்டியிடுகின்றார்.
கனடியத் தமிழ் மக்களின் மனதில் மாற்றமும், சிந்தனைத் தெளிவும் ஏற்பட்டுள்ளதா என்பதை, இத்தேர்தல் முடிவுகள் அநேகமாக எடுத்துக் காட்டலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: