ஞாயிறு, 16 டிசம்பர், 2018

கலைஞர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து கவிதை காணிக்கை! விடியோ


tamil.eenaduindia.com : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு ஒரு கவிஞன் செலுத்தும் காணிக்கை, 'ஒரு மலையே சிலையானதுபோல' என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.< அந்தக் கவிதையின் விவரம் பின்வருமாறு:

மலையடிவாரம் பார்த்து மழைச்சாரல் விழுதல் போல
கலையடிவாரம் பார்த்து கவிதை மலர்தல் போல
அலையடிவாரம் தன்னில் ஆட்படும் முத்தைப் போல்
ஒர் சிலையடிவாரம் தன்னில் சிந்தினேன் கண்ணீர் பூக்கள்

தலைமகன் பெரியாராலே தன்மானம் பெருமையுற்றாய்
கலைமகன் அண்ணாவலே கணித்தமிழ் புலமை பெற்றாய்
உலைக்களம் போல் உழைத்தே உயர்வினைப் பெற்றாய்
இன்று சிலையாகி நிறைத்தாய் பெற்றச் செல்வனால் சிறப்பு பெற்றாய்


மடியிலே தமிழை வைத்தாய்
மனதிலே உறுதி வைத்தாய்
விடியிலே வேகத்தைப் போல தீயை வைத்தாய்
கட்சிக் கொடியிலே உதிரம் வைத்தாய், கொள்கையும் வைத்தாய்
கல்லக்குடியிலே தலையை வைத்தாய், கோட்டையில் காலை வைத்தாய்

சமத்துவபுரங்கள் கண்டாய், சரித்திரம் சலவை செய்தாய்
நமக்கு நாம் என்றாய், சிற்றூர் நகரமாய் ஆக்கிவைத்தாய்
குமரியின் கடலின் ஓரம் குரலாசான் சிலை எடுத்தாய்
இமயத்து வடக்கும் தெற்கை எட்டியே பார்க்க வைத்தாய்

பண்ணூறு ஆண்டின் முன்னே பாரினை ஆண்ட மன்னர்
எண்ணூறு களங்கள் கண்டார், இன்புகழ் கொண்டார்
ஆனால் தொன்னூறு கவிஞர் கூடி, தோளிலே மாலையிட்டு
பண்ணூறு படித்த காட்சி பாரிலே நீதான் கண்டாய்

மறக்குள மாண்பு காட்ட மாக்கதை செய்தாய்
கல்வி சிறக்கவே வேண்டுமென்று செழுந்தமிழ் உரைகள் செய்தாய்
பிறக்காத காவியங்கள், எதிர்கால ஓவியங்கள், மறக்கவா முடியும்
உன்னை மறந்தவன் இறந்தவன்தான்

பொய் பலி சொல்லப்பார்த்தார், புவியதை ரசிக்கவில்லை
மெய்ப்புகழ் குறையவில்லை, மேம்பாடு சரியவில்லை
அய்யனே நீங்கள் கற்ற அண்ணாவின் தமிழ் மீது ஆணை
பொய்களால் போர்வை செய்து புதைக்கவா முடியும் வானை

செப்படி வித்தை காட்டும் செந்தமிழ் எங்கே
நாங்கள் தப்படி வைத்தபோது தடுத்தவன் எங்கே
எம்மை இப்படி துடிக்கவிட்டே இறந்தவன் எங்கே
நானும் அப்படி அழுததில்லை அப்பனே மறைந்தபோதும்

எங்களின் மதத்தின் பெயரோ இனமானம், இனமானம்தான்
எங்களின் கடவுள் எல்லாம் இறவாத தமிழ் ஒன்றேதான்
தங்களால் காக்கப்பெற்ற தமிழ்மானம் சாய்வதில்லை
செங்கதிர் தீர்ந்துபோகும் திராவிடம் தீர்வதில்லை

உளமாற சொல்லுகின்றேன், உன் படை வெல்லும்
கொள்கைத் தளத்திலே நின்று வீரத் தமிழ்நாடு செல்லும்
வெற்றிக் களம் பல கண்ட எங்கள் கலைஞரே
உங்கள் பெயரை இளம்பிள்ளை சொல்லும்
நாளை இந்நாடு திருப்பிச் சொல்லும்

கருத்துகள் இல்லை: