சனி, 3 மார்ச், 2018

கெளரி லங்கேஷ் கொலை .. இந்து யுவசேனாவை சேர்ந்தவர் பிடிபட்டார்

மின்னம்பலம் :கடந்த வருடம் செப்டம்பர் 5-ம் தேதி இரவு கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளரும், இடதுசாரிச் செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் தன் வீட்டு வாசலிலேயே கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இது இந்தியாவின் கருத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத வாத இயக்கங்களுக்கு எதிராக எழுத்து ரீதியாகவும், கள ரீதியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்த கௌரி லங்கேஷ் கொலையில் ஐந்து மாதங்கள் கழித்து இப்போது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு.
கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி, பெங்களூரு மாநில அரசு பேருந்து நிலையத்தின் அருகே, சட்டவிதிகளை மீறி துப்பாக்கி தோட்டாக்களை விற்க முயன்ற நவீன்குமார் என்பரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவரை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரை கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் விசாரிப்பதற்காக சிறப்புப் புலனாய்வு படையினர் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று கைது செய்யப்பட்டவரை சிறப்புப் புலனாய்வுப் படையினரிடம் 7 நாள்களுக்கு ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் நவீனிடம் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுப் படை விசாரணை மேற்கொள்ள உள்ளது.
கௌரி லங்கேஷ் கொலை: முதல் கைது!’’இந்து யுவ சேனா உள்ளிட்ட வலது சாரி அடிப்படை வாத இயக்கங்களுடன் நவீன் தொடர்பில் இருப்பவர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவருக்கும் கௌரி லங்கேஷ் கொலையாளிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்ற முகாந்திரங்கள் தெரியவந்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது’’ என்று புலனாய்வு அதிகாரிகளை மேற்கோள் காட்டி கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கர்நாடக தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் விவாதிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: