திங்கள், 26 பிப்ரவரி, 2018

சிரியா : ''நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் குண்டுகள் வீசப்படுகின்றன

சிரியா: நாங்கள் வாழ வேண்டும்!மின்னம்பலம் : உலக வரலாற்றில் நடக்காத மோசமான உள்நாட்டுப் போர்த் தாக்குதல் சிரியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஒன்றுமறியாத 500க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது.
சிரியாவில் வேலையின்மை, ஊழல், அரசியல் சுதந்திரமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி அதிபர் பஷார்அல் ஆசாத் பதவிவிலகக் கோரி 2011ஆம் ஆண்டு போர் மூண்டது. அதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இதை வலியுறுத்தும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யாவும் தமது படைகளைக் கொடுத்து உதவுகின்றன.
இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராட்டக்காரர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அரசுப் படை நடத்திய தாக்குதலில் சுமார் 500 குழந்தைகள் உயிரிழந்தனர். இதைத் தாண்டியும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்.இந்த சம்பவம் உலகளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 நாட்கள் நடந்த தாக்குதலில் இதுவரை 600 பேர் பலியாகியுள்ளனர். அந்தப் பகுதிக்குள் 3,93,000 பேர் சிக்கியிருக்கின்றனர். 3000 பேர் பெரிய காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள் என்பது மேலும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தாக்குதலில் கெமிக்கல் பாம்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 24) ஒப்புதல் வழங்கியது. போர் நிறுத்தத் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறிய பிறகும் ரஷ்ய ஆதரவுப் படைகளுடன், சிரிய ஆதரவுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் நூர், அலா என்ற சிறுமிகள் ''நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் எங்களைச் சுற்றிக் குண்டுகள் வீசப்படுகின்றன. நாங்கள் வாழ வேண்டும். நாங்கள் சாக விரும்பவில்லை'' என்று அழும் வீடியோ கண்ணீர் வர வைக்கிறது.
இதற்கு மேலும் குழந்தைகள் பலியாவதைத் தடுக்கும் வகையில் ஐ.நா. ஒப்பந்த அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

கருத்துகள் இல்லை: