செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சண்டிகார் கிஷ்ணபிரசாத் உயிரழப்புக்கு தலைவர்கள் கடும் கண்டனம்

மாணவர் மரணம்: நீதி விசாரணை கோரும் தலைவர்கள்!
மின்னம்பலம் : தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் மரணத்தில் மர்மம் இருப்பதால், முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சண்டிகரில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கிருஷ்ண பிரசாத் கல்லூரி விடுதியில் நேற்று தற்கொலை செய்துகொண்துள்ளார். வெளிமாநிலத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்துகொள்வது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கிருஷ்ண பிரசாத் மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசியல் தலைவர்கள் நீதி விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்
பிற மாநிலங்களில் மருத்துவ மேற்படிப்பில் இணையும் தமிழக மாணவர்கள் ரேகிங், இன - மொழிப் பாகுபாடு, எதிர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்துவந்தாலும், மத்தியில் உள்ள பாஜக அரசோ அல்லது மாநிலத்தில் உள்ள அதிமுக அரசோ, தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒரு நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனையளிக்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க மத்திய - மாநில அரசுகள் உடனடியாக முன்வர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ,மதிமுக பொதுச் செயலாளர்
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் மரணமும், இயற்கையாக நடைபெறவில்லை; அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பது தெளிவாகிறது. தில்லியில் மருத்துவ உயர் கல்வி கற்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும், கவலையும் ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ராமதாஸ்,பாட்டாளி மக்கள் கட்சி
மர்மமான முறையில் இறந்த மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது மாணவரின் உயிரை மீட்டுத் தருமா? வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்கள் தொடர்ந்து உயிரிழப்பதை வேடிக்கைப் பார்க்காமல் மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மத்தியில் மதவாத பாஜகவின் மோடி ஆட்சி வந்ததிலிருந்தே தமிழக உயர் கல்வி மருத்துவ மாணவர்கள் தொடர்பான இத்தகைய தற்கொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன. தலைநகர் டெல்லி மட்டுமின்றி வட மாநிலங்களிலும் தமிழக மாணவர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்கதையாகிவிட்டது. திட்டமிட்ட சதியாகத் தோன்றும் இத்தகைய சம்பவங்களுக்கு உயர்மட்ட அளவிலான நிபுணத்துவ ஆய்வும் நீதி விசாரணையும் வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை: