திங்கள், 26 பிப்ரவரி, 2018

அடிப்படைவாத வஹாபிசம் அஸ்தமனம் ?

சிறப்புக் கட்டுரை: வஹாபிசத்தின் அஸ்தமனம்?minnambalam : களந்தை பீர் முகம்மது இதர சமயங்களுக்கு இல்லாத ஒரு நெருக்கடி இஸ்லாமியச் சமூகத்தில் இருக்கிறது. அது, இஸ்லாமியச் சமயப் பண்பாடு என்பது சவூதி அரேபியாவின் நிழலாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. இது நிர்பந்தமல்ல; நடைமுறைகளால் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கருத்தியலால் நிர்பந்தம்போல ஆகியிருக்கிறது.
சவூதியின் மத அடிப்படைவாதமான வஹாபிசம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தது அல்லவா? அதன்பின், ஒரு முஸ்லிம் என்பவர் சவூதியின் ஆடை வடிவமைப்பு என்னவோ, அதையே தன்னுடைய ஆடை வடிவமைப்பாகவும் கொள்ள வேண்டும் என்று வரையறுத்தது. இதை முதல் பண்பாட்டுத் தாக்குதல் எனலாம். இதைத் தொடர்ந்து இதர அம்சங்களிலும் தன் நடைமுறைகளின் சிந்தனையைத் திணிக்க ஆரம்பித்தது.

இந்த ஆடை வரையறை முதலில் பெண்களின் உடைகளிலிருந்து தொடங்குகிறது. அது எந்த அளவுக்குக் கூர்மையானதென்றால், பெண்களை அடக்கம் ஒடுக்கமாக வைத்துக்கொள்ள இஸ்லாம் கூறுவதாகப் பிறரை நம்பச் செய்வதிலிருந்து தொடங்கியது. இங்கிருந்து தொடங்கிவிட்டால் சவூதியின் ஏனைய பண்பாட்டு அம்சங்களை உலக முஸ்லிம்களின் பண்பாடாக உருவாக்கிவிட முடியும் என்று அது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி.
அரேபியப் பண்பாடே இஸ்லாமியப் பண்பாடாக...
சவூதியின் நிலப்பரப்பு பாலைவனமாக இருப்பதால் அவர்களின் பயணங்களிலும் வசிப்பிடங்களிலும் புழுதிக் காற்றை எதிர்கொள்வதற்காக ஒருவர் தன்னை முழுவதும் மூடி மறைக்கும் உபாயம் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் தம் முழு உடலையும் மூடி மறைத்தனர். இது நபிகள் நாயகத்தின் காலத்துக்கு முன்னரே இருந்த ஓர் அம்சம். சொல்லப்போனால் அரேபியப் பழங்குடிகளின் தொன்றுதொட்ட வழக்கம். அதனால்தான் யூதத்திலும் கிறிஸ்துவத்திலும் இத்தகைய ஆடைப் பண்பாடு இருந்தது. நபிகளார் இதை மாற்ற இயலாது. இதில் சமய ரீதியாக இஸ்லாத்தின் கூறு அடங்கியிருக்கவில்லை. இருந்ததெல்லாம் பழங்குடி மக்களின் வாழ்நிலையையொட்டி உருவான நடைமுறைகள்.
சர்வதேச ரீதியாகவுமே ஆடை அணிதலையொட்டித்தான் ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் குறியீடு இருந்தது. கால வளர்ச்சி முறையினாலும் ஜனநாயக, நவீனக் கண்டுபிடிப்புகளின் வழியாகவும் முஸ்லிம் சமூகம் இதில் இன்னும் தீவிரமாகப் பின்தங்கியிருப்பதை மறுக்க இயலாது. பின்னர் இஸ்லாமியச் சட்ட மரபுகளில் இந்த ஆடை வடிவமைப்பு ஓர் அங்கமாக இணைந்துவிட்டது. பெண்களின் ஒழுக்கம் பேண அது கடைப்பிடிக்கப்பட்டாலும் அதன் நிமித்தம் சமூகத்தை அடிமைப்படுத்தும் யுக்தியோ, பின் நகர்த்திச்செல்லும் திட்டமோ இஸ்லாத்தின் ஆரம்ப காலச் சிந்தனையில் கிடையாது.
வஹாபிசம் உருவானது எப்படி?
ஆனால், ஷேக் முகம்மது பின் அப்துல் வஹாப் எனும் மதச் சீர்திருத்தவாதி பதினெட்டாம் நூற்றாண்டில் இஸ்லாத்தின் மூலக் கோட்பாடுகளுக்கு அனைவரும் திரும்பியாக வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் பண்டைப் பெருமைகளை வியந்தோதிப் பேசுபொருளாக்கினார். அது அக்கால இயல்புகளின் நவீனத் தன்மையை மறுத்தது. இஸ்லாத்தின் மாண்புகளை நிலைநிறுத்துவதெனில் முஸ்லிம் சமூகம் தன் பழைய காலத்துக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கூறியதை அரேபிய சமூகத்தின் ஒரு பகுதி அக்காலத்தில் ஏற்றுக்கொண்டது. இந்த வஹாப் பின்னர் ஒருநாள் அரேபியாவின் திரியா என்ற சிறு நகரின் ஆட்சியாளராக இருந்த முகம்மது பின் சவூத் என்பவரின் ஒத்தாசையுடன் இஸ்லாத்தைப் பழைய காலத்துக்கே திருப்ப எண்ணினார். இவர்கள் கூட்டு சேர்ந்து அரேபியாவைக் கைப்பற்ற, அதற்கு பிரிட்டிஷ் ஆட்சியும் பக்கபலமாக இருக்க உருவானதுதான் இன்றைய சவூதி அரேபியா.
இஸ்லாத்தை நோக்கித் திரும்புகையில் அதன் ஆரம்பமே மகா அநீதியான முறையில் தொடங்கியது. மன்னன் சவூத் தன் பெயரால் அந்த நாட்டுக்கு சவூதி அரேபியா என்ற பெயரைச் சூட்டிக்கொண்டான். இஸ்லாத்தின் பழைமைக்குத் திரும்புவதெனில் தனியொரு நபரின் பெயரால் எதுவும் அழைக்கப்படக் கூடாது. ஆனால், இங்கே விவகாரம் தலைகீழானது. இவ்வாறு பழைமைக்குத் திரும்பும் நோக்கில் பெண்களை அடிமைப்படுத்துவது முதற்காரணமாக இருந்தது. அவ்வண்ணமே பெண்களின் ஆடையாக ஹிஜாப் எனப்படும் கறுப்பு உடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரேபியாவுக்கான அந்த ஆடை பூகோள ரீதியாக அந்த மண்ணுக்கே உரித்தானது. ஆனால் வஹாபிசத்தை முன்னெடுத்துவருபவர்கள் அரேபியாவின் பண்பாட்டை இஸ்லாமியப் பண்பாடாகத் திரித்து அதை உலகமயமாக்கிவிட்டார்கள். இப்போது ஹிஜாப் விற்பனையில் மட்டும் பல லட்சம் கோடி டாலர்கள் வணிகம் நடக்கிறது. மதத்துக்கு மதம் - வியாபாரத்துக்கு வியாபாரம்.
மத ஆன்மிக உற்பத்தியே ஆணிய அதிகாரம்
வஹாபிசம் பரவத் தொடங்கிய பின் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம்களின் ஓர்மை அரேபியாவின் பண்பாடாக மாற்றப்பட்டது. சவூதி அரேபியாவின் நடைமுறைகளைப் பின்பற்றவில்லையெனில் அதில் இஸ்லாம் இல்லை என்ற அபிப்ராயம் தானாக உருவாகிவிட்டது. இதன் தாக்கத்தில் வஹாபிசத்துக்கு எதிர்நிலையில் இருக்கும் சுன்னத்-வல்-ஜமாத் பிரிவிலும் புர்கா எனப்படும் கறுப்பு ஆடை நடைமுறைக்கு வந்துள்ளது.
இது பெண்களின் பாதுகாப்புக்கு உரியது என்பது அனைவரின் வாதம். இஸ்லாத்தின் பெயரால் பெண்களைப் பாதுகாக்க முனைவது நல்ல அம்சமே. ஆனால், அது எப்படியிருக்க வேண்டும் என்பதற்குப் பல விதமான யோசனைகள் உள்ளன. முதலில் கறுப்பு ஆடை என்பது விஞ்ஞான ரீதியாகவே உடல்நலத்துக்கு ஏற்றதல்ல. அதிலும் பெண்கள் கண்டிப்பாகக் கறுப்பு ஆடைகளைப் புறக்கணிக்க வேண்டும். கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்தை இந்தக் கறுப்பு ஆடைகள் இன்னும் பல மடங்காக ஆக்குகின்றன. அதன் மூலம் நீர் இழப்புத் தன்மை பெண்களுக்குக் கூடும். இது அவர்களின் உடல்நலத்தைப் பேரளவில் பாதிக்கும். கர்ப்பத்திலிருக்கும் சிசுக்கள் பாதிக்கப்படும்.
பிறகு, ஐயன் வள்ளுவன் கூறியிருக்கிறான்; “சிறை காக்குங் காப்பு எவன்செய்யும் மகளிர் / நிறைகாக்கும் காப்பே தலை.” என்ன இருந்தாலும் ஒரு பெண் மட்டும்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். தம் பாலியல் வேட்கையைக் கட்டுப்படுத்திக்கொள்வது இறையச்சமிக்க ஆணின் கடமை. அவர் புர்கா மூலம் தன் கடமையைத் துறக்கிறார். தன் காம இச்சையைத் தூண்டிவிடாதிருப்பது மகளிரின் பொறுப்பு என அவர் கருதுகிறார். இதற்காக, மகளிரைச் சிறை செய்தல் என்ன நியாயம்? அனைத்து மத ஆன்மிகவாதமும் இத்தகைய ஆணிய அதிகாரத்தை உற்பத்தி செய்கிறது. பின்பு அவ்வதிகாரம் மகளிரின் உரிமைகளைக் கட்டுப்படுத்துகிறது. பர்தா குறித்த உரையாடல்களை இன்று உள்முகமாகவும் எழுப்ப முடியவில்லை. அதன் காரணம் இதுதான்.
மறுமலர்ச்சிக் காற்று
சவூதி அரேபியாவின் வஹாபிசத் தலைமைப் பீடம் இதுபோன்ற எண்ணற்ற விஷயங்களை அரேபியப் பண்பாட்டு அம்சங்களிலிருந்தும் கருத்தியல்களிலிருந்தும் ஏற்றுமதி செய்கிறது - தூய்மையான இஸ்லாம் என்பதாக! நாளடைவில் அது முஸ்லிம் உலகப் பொதுவில் வருகிறது. இவ்வாறு முஸ்லிம் சமூகம் அனைத்தையும் இஸ்லாத்தின் பிறப்பிடமான சவூதி அரேபியாவிலிருந்து பெற்றுக்கொண்டு அதை நிலைநிறுத்தியிருக்கையில் அங்கிருந்தே மறுமலர்ச்சிக் காற்றும் வீச ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் சவூதியின் இஸ்லாமிய மதபோதகரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் தன் நாட்டின் பின் நகர்வுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்தே தீர வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் பண்பாட்டைச் சீர்குலைக்காத கண்ணியமான உடையே போதும் என்றும் சொல்லியிருக்கிறார். இது சவூதியில் மட்டுமல்ல, முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளித்திருக்கிறது.
காலம்காலமாக ஊறிவந்த எண்ணத்தின் மீதான இந்த அமில வீச்சு இஸ்லாமியச் சமூகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. முந்நூறு ஆண்டுகளின் கரட்டு வழக்குகளை இது தேடிச்சென்று அழிக்கப்போகிறது. தான் சொன்ன மாற்றுக் கருத்தும் இஸ்லாமிய ஷரிஆ அடிப்படையில்தான் இருக்கிறது என்கிறார் முட்லாக்.

இந்த ஆடைகள் அணியாமல் இருப்போர் இஸ்லாத்துக்கு வெளியே போய்விட்டார்கள் என வஹாபியர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். தம்முடைய பெற்றோரும் இதுபோன்ற ஆடைகளோடு இஸ்லாத்தைப் பேணவில்லை என்பதை அவர்கள் கருதிப்பார்க்க மறுக்கிறார்கள். பொதுவெளியில் புர்காவை நியாயம் செய்வது பெண்கள் அல்ல; ஆண்கள்தான்.
இந்த புர்கா, வயதுக்கு வராத குழந்தைகளின் மேனியையும் வயது கழிந்து இல்லறச் சுகத்துக்கு வெளியே போய்விட்ட மூத்தோரையும் ஒரே விதமாக மூடுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் பெண்கள் தம் ஒழுக்கம் பேணுகிறார்கள் என்று ஆண்கள் சொல்வது அபத்தமானது என்று தெரியவரும்; பெண்களைச் சதைத்திரள் என்பதற்கு மேலே பார்க்க மறுப்பதால் இந்த ஆடையைத் தராதரமற்ற நிலையில் அனைத்துப் பெண்களும் அணிந்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள்
சவூதி இனி தன் பழைய பாதையில் நடக்க வழியில்லை. சர்வதேசச் சந்தைகளில் எண்ணெய் விலை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவும் பெட்ரோலிய உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் எண்ணெய் வருமானம் குறைந்து, அந்நியச் செலாவணி இறங்குமுகமாய் இருப்பது சவூதிக்குப் பீதியை உருவாக்குகிறது. பணமும் இல்லை, விஞ்ஞானத் தொழில்நுட்ப அறிவும் இல்லை என்கிறபோது சவூதி இதர நாடுகளின் வளர்ச்சியிலிருந்து பாடம் பெற எண்ணுகிறது. அந்த எண்ணம் காலத்திற்கொவ்வாத நடைமுறைகளைக் கழித்துக்கட்டுகிறது. சில மாதங்களுக்கு முன் சவூதிப் பெண்கள் வாகனங்களை இயக்கலாம் என்று அந்த அரசு அறிவித்தது. புர்கா கட்டாயமல்ல என இப்போது அறிவித்திருக்கிறது.
இவையெல்லாம் சவூதியின் பெரும் பாய்ச்சலாகப் பார்க்கப்பட வேண்டும். இது பெண்களின் வாழ்நிலையை மாற்றியமைப்பதுடன் இஸ்லாமியக் கருத்துகளையும் நவீன வாழ்வியலின் போக்கிலிருந்து வகுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற சிந்தனைமுறையை உருவாக்கியிருக்கிறது.
சவூதிக்கு வெளியே இதர நாடுகளிலுள்ள முஸ்லிம் பெண்கள் ஏற்கெனவே புர்காவைத் தவிர்த்திருக்கிறார்கள்; கல்வி பெறுகிறார்கள்; வாகனங்கள் ஓட்டுகிறார்கள். பெரும் பணிகளில் திறன் காட்டுகிறார்கள். இவ்விதம் இஸ்லாத்திலிருந்தபடியே செயல்பட்ட இத்தகு பெண்களை முஸ்லிம்களாகக் கருதவே வஹாபிசத்தால் முடியாதிருந்தது. இன்று சவூதியிலேயே அந்நிலை மாறும்போது வஹாபிசச் சிந்தனைகளை இனி இதர முஸ்லிம் நாடுகளுக்கு சவூதியால் ஊட்ட முடியாது.
அவரவர் போக்கில் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளவும் அனுசரிக்கவும் முடியும். பெரும் தளை ஒன்று முஸ்லிம் பெண்களின் கைகளிலிருந்து தானாகவே உடைபட்டுக் கீழே விழுகிறது. இனி இதர நாட்டு முஸ்லிம்களைப் பார்த்துத்தான் சவூதி அரேபியா தன் நாட்டின் இஸ்லாத்தை அனுசரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் உருவாகியிருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்த்தீர்களானால், சர்வதேச அமைதிக்குத் தடைக்கல்லாக இருந்து அடிப்படைவாதத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த வஹாபிசம் தன் உயிரணுக்களை மடிய விட்டுக்கொண்டிருக்கிறது என்பது தெரியவரும். இது அனைத்து முஸ்லிம்களுக்குமான சோபனம்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: களந்தை பீர் முகம்மது எழுத்தாளர், ஊடகவியலாளர், இஸ்லாமியச் சமூகம் குறித்து பரந்துபட்ட பார்வையுடனும் முற்போக்குக் கண்ணோட்டத்துடனும் எழுதிவருபவர். திரைப்படம், இலக்கியம், அரசியல் குறித்தும் நுண்ணுணர்வுடன் தன் சிந்தனைகளைப் பதிவு செய்துவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: kalanthaipeermohamed@gmail.com)

கருத்துகள் இல்லை: