புதன், 28 பிப்ரவரி, 2018

கணவனால் கொலை செய்யப்படும் முன்பு பதிவு செய்த வீடியோ லீக் .. வேலூர் ஜெயந்திபுரம்

மின்னம்பலம் :வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்து இரண்டு நாள் கடந்த நிலையில் தன்னைக் கணவரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சும் வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவரிடமிருந்து காப்பாற்றுங்கள்: இறந்த பெண்ணின் கண்ணீர் காட்சி!வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி அருகே ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சத்யா என்ற பெண், கடந்த 25ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு தன்னைக் கணவரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய வீடியோ வெளியாகிப் பார்ப்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் தனது கணவர், தன்னை வீட்டில் பூட்டிவைத்து அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்; கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்; என்னால் அடி தாங்கமுடியவில்லை; அவரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று கதறி அழுகிறார்.

எனக்குத் தந்தை இல்லை; தாய்தான் வளர்த்துவந்தார்; எனக்கும் கணவருக்கும் இடையே சண்டை வந்தால் தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அங்குள்ளவர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் அனுப்பிவைப்பார்கள். என் பிள்ளைக்காக நான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை: