வெள்ளி, 2 மார்ச், 2018

விழுப்புரம் தலித் குடும்பம் மீதான கொடூரம்: தொடரும் விசாரணை!

விழுப்புரம் கொடூரம்: தொடரும் விசாரணை!மின்னம்பலம் :விழுப்புரத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கொலை, சிறுமி பாலியல் கொடுமை, தாய் ஆராயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள வெள்ளம்புதூர் குக்கிராமத்தைச் சேர்ந்த ஆராயி தனது இளையமகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 22ஆம் தேதி தமிழகமே பதறிய ஒரு கொடூர சம்பவம் அங்கு அரங்கேறியது. அன்று இரவு ஆராயி, தனம், சமயன் ஆகியோரை மர்ம நபர்கள் கொடூர முறையில் தலை உட்பட பல இடங்களில் தாக்கியுள்ளனர். சிறுமியைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் சமயன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆராயி, தனம் ஆகிய இரண்டு பேரும் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நடந்து நான்கு நாள்களுக்குப் பிறகே பரபரப்பாகப் பேசப்பட்டது. ஒருபக்கம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன. மற்றொருபக்கம், தலித் மற்றும் மாற்றுச் சமூகத்தினரும் மாறி மாறிப் பழி சுமத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போதுவரை குற்றச் செயலில் ஈடுபட்டது யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், காவல்துறையினர் சிறப்புக் குழுவை அமைத்து நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சிறப்புக் குழுவில் உள்ள அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “ஏற்கனவே மாற்றுச் சாதியினர் வீட்டில் நடந்த சம்பவம், தற்போது தலித் வீட்டில் நடந்த சம்பவம் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளது. தனிமையில் உள்ள வீட்டில் இரவு நேரத்தில் கதவை திறந்துப் போட்டுத் தூங்கும் பழக்கம் ஆராயிக்கு உள்ளது. வெளியூருக்குச் சென்றிருந்த ஆராயி கடந்த 21ஆம் தேதி காலையில்தான் திரும்பி வந்துள்ளார். 22ஆம் தேதி நள்ளிரவில் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. சிறுமி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயின் மற்றும் டாலர் படுத்திருந்த பாயில் அறுந்துக் கிடந்தது. அவருடைய உடை வெறித்தனமாக கிழிக்கப்பட்டிருந்தது. அதுபோன்று ஆராயியும் சமயனும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர்.
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய், தொழில்நுட்பவியலாளர் குழுக்கள் சம்பவம் நடந்த இடத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் ஆய்வு நடத்தினார்கள். இரண்டுக்கும் மேற்பட்ட கைரேகைகள் பதிவாகியுள்ளது. வந்தவர்கள் மதுபோதையில் இருந்துள்ளார்கள். உள்ளூர், வெளியூர் ஆட்கள் முதல் வடமாநில இளைஞர்கள் வரை சந்தேகம் உள்ளது. மேலும், அந்தப் பகுதிக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை அலசிப் பார்த்து வருகிறோம்.
மேலும் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஊருக்கு வந்தவர்கள், வெளியூருக்குச் சென்றவர்கள் விவரங்களைக் குறிப்பிட்ட பகுதிகளில் அலசி ஆராய்ந்து வருகிறோம். ஆராயிக்கு வெளி நட்பு பழக்க வழக்கம் இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தப்பட்டது. அப்படி ஏதுமில்லை. ஆராயியும் வன்புணர்வுக்கு ஆட்பட்டிருப்பாரோ என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அவருக்கு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையிலேயே (vaginal smear) வஜினல் ஸ்மயர் டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை. கால தாமதமாகி ஜிப்மர் மருத்துவமனையில் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ‘இந்தச் சோதனை முடிவு வருவதற்கு ஒரு வாரம் வரையில் ஆகலாம்’ என்றும், ‘அந்தச் சோதனையில் விந்தணுக்கள் இருக்கிறதா என்று கண்டறியவுள்ளதாகவும் அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார்.
கடலூர் முதுநகர் காவல் நிலையம் எல்லைப்பகுதியில் ஒருவன் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தான். அவனைப் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்.
எஸ்.பி.ஜெயக்குமார் இந்த வழக்கை சேலஞ்சாக எடுத்து விசாரணை நடத்தி வருகிறார். வெகு விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்போம்” என்கிறார்கள் தனிப்படை போலீஸார்.

கருத்துகள் இல்லை: