புதன், 17 மே, 2017

மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்: லாலு பிரசாத் யாதவ்

சி.பி.ஐ. சோதனை மூலம் எனது குரலை ஒடுக்கிவிட முடியாது என்றும் பாஜக-வின் வெற்று மிரட்டல்களுக்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன் என்றும் ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது கட்சியின் எம்.பி. பி.சி.குப்தாவின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. பினாமிகள் பெயரில் நிலம் வாங்கி, 1,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் கூறி இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் தன்னுடைய ட்விட்டர் வலைப்பதிவில் அடுத்தடுத்து தெரிவித்துள்ளதாவது, ‘எனது குரலை ஒடுக்கும் சக்தி பாரதிய ஜனதாவுக்குக் கிடையாது. வெற்று மிரட்டல்களுக்கு நான் அடிபணிய மாட்டேன்.
அப்படியே லாலுவின் குரலை ஒடுக்கினாலும், ஆயிரமாயிரம் லாலுக்களின் குரல் ஒலிக்கும். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடக்கிவிட முடியாது. எனது இறுதி மூச்சு உள்ளவரை பாசிஸ்டுகளை எதிர்த்துக்கொண்டுதான் இருப்பேன்’.
மேலும், ‘புதிய கூட்டாளிகளுக்காக பாஜக-வை வாழ்த்துகிறேன். 22 இடங்களில் ரெய்டு நடைபெற்றது என்று ஊடகத்தினரே கூறுகின்றனர். எந்தெந்த இடங்கள் என்று அவர்களால் கூற இயலுமா? ஆனால், நான் பாஜக-வின் ஆதரவு ஊடகங்களுக்கும், அதன் கூட்டணி கிளைகளுக்கும் அஞ்சப் போவதில்லை’ என்று கூறினார்.
லாலு கூறிய பாஜக-வின் புதிய கூட்டணி ‘சிபிஐ-யும், வருமான வரித்துறையும்தான்' என்று ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் மனோஜ் ஜா தெளிவுபடுத்தினார். லாலுவின் ட்விட்களுக்குப் பதிலளித்த பாஜக-வின் சுஷில் குமார் மோடி, ‘நீங்கள் எதை விதைத்தீர்களோ, அதையே அறுவடை செய்கிறீர்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: