வெள்ளி, 19 மே, 2017

தமிழகத்தில் ஈழ விவகாரத்திற்கு உயிர் கொடுத்தது கலைஞர் ... பின்பு எம்ஜியார் குதித்தார் .. பிரபாகரனை மட்டும் சேர்த்தார் எல்லாவற்றையும் கெடுத்தார் .

Stanley Rajan: ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர், அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது முதலில் வரவேற்க சென்றதும் அவரே
அதுவரை தமிழகத்தில் ஈழ அபிமானம் ஏதுமில்லை, 1964ல் மலையக மக்கள் திருப்பி அனுப்பபடும்பொழுது சிறிய சலசலப்பு மட்டும்தான் இருந்தது
கலைஞர்தான் ஈழவிவகாரங்களுக்கு தமிழகத்தில் உயிர்கொடுத்தார், விடுவாரா ராமசந்திரன்? அவர் உள்ளே குதித்ததுதான் பிரச்சி
னையின் மூலம்
கலைஞர் ஆழ்ந்து சிந்திப்பவர். தமிழகம் என்றுமே டெல்லிக்கு ஆகாது, மாநில கட்சி அதுவும் முன்பு பிரிவினை பேசிய கட்சி இன்னொரு நாட்டு பிரிவினையினை பேசுவது பெரும் ஆபத்தில் முடியும் என கணித்தார்
அது மகா உண்மையும் கூட பின்னாளில் வைகோ அனாதை ஆனது அப்படித்தான், 2009ல் புலிகள் அடிபட்டு சாக இந்தியா அமைதியாக இருந்ததும் அப்படித்தான்
அதனால் அகில இந்திய அளவில் ஈழபிரச்சினை எதிரொலிக்காமல் தீர்வில்லை என்றுதான் அன்று டெசோ அமைப்பினை வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பட்நாயக் என அகில இந்திய தலைவர்களை வைத்து அசத்தினார்
"இலங்கை தமிழரை தொட்டால், இந்தியா முழுக்க அதிரும்" என அவர் ராஜதந்திரமாக மிரட்டி நின்றார்

நிச்சயம் மிக அறிவார்ந்த காய்நகர்த்தல் இது, எம்ஜிஆருக்கு இப்படிபட்ட தந்திரம் எல்லாம் இல்லை, ஆனால் அவர் கையில் பிரபாகரன் கிடைத்தான்
இந்திரா ஈழபிரச்சினையினை கையாண்டது வெறும் 1 வருடமே, போராளிகளுக்கு பயிற்சி ஆரம்பிக்கும்பொழுதே இவர்கள் நச்சுபாம்புகள் என அவருக்கு தெரிந்தது, ஆனாலும் ஜெயவர்த்தனேவுக்கு ஆட்டம் காட்டினார்
சென்னையில் சிக்கிய பிரபாகரனை அவர்தான் காத்தார், இந்திரா செய்தது அந்த பெரும் தவறு
ராஜிவிற்கும் பிரபாகரனுக்கும் உரசல் இருந்தது, அதே நேரம் ஜெயாவினை வளர்க்கின்றார் என ராஜிவிற்கும் எம்ஜிஆருக்கும் உரசல் இருந்தது, நீ ஜெயாவினை வளர்த்தால் நான் உன் எதிரி பிரபாகரனை வளர்ப்பேன் என வரிந்து கட்டினார் எம்ஜிஆர்
இங்கு ஒரு கேள்வி எழும்? ஒரு மாநில முதல்வர் அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு உதவுகின்றார், அந்த அரசை டிஸ்மிஸ் செய்தால் என்ன? செய்திருக்கலாம், ராஜிவ் செய்யவில்லை
வாழ்வில் பல போராட்டங்களை நடத்தியவர் கலைஞர், ராஜ தந்திரமாக அற்புதமாக ஈழ ஆதரவாக‌ இந்தியாவினை திரட்டினார்
ஆனால் சகலத்தையும் கெடுத்தே பழக்கபட்ட ராமசந்திரன், புலிகளை வளர்த்துவிட்டு எல்லாவற்றையும் பாழாக்கினார்
கலைஞரின் டெசோவில் பிரபாகரன் தவிர்த்த ஈழ இயக்கம் கலந்து கொண்டது, அன்றே வெறிபிடித்தது புலிகளுக்கு
எல்லா இயக்கங்களை அழித்தார்கள், கலைஞர் சொல்லிபார்த்தார் "பழம் கிடைக்கட்டும் அதன் பின் சுளைகளை பங்கிடுங்கள்" என்றார், புலிகள் கேட்கவில்லை
"கெஞ்சி கேட்கின்றேன், ஈழதிசை நோக்கி கதறி கேட்கின்றேன் புலிகள் சபாரத்தினத்தை கொல்லவேண்டாம்..." என அவர் மன்றாடி நின்றபொழுது கொஞ்சம் கூட புலிகள் சட்டை செய்யவில்லை,
கலைஞரை மனிதனாக கூட நினைக்கவில்லை
வெறுப்புற்ற கலைஞர் டெசோவினை கலைத்துவிட்டு அமைதியானார், இப்பொழுது காட்சியில் வென்றது எம்ஜிஆரும் புலிகளும்
அப்பொழுதும் புலிகளை அவர் முழுக்க கைவிட்டுவிடவில்லை
அமைதிபடையினை ராஜிவ் அனுப்பும் பொழுது எம்ஜிஆர் தடுக்கவில்லை, மாறாக கலைஞர்தான் இது ஈழம் அடைவதை தடுக்கும் முயற்சி என மறுத்தார், அமைதிபடையினை எதிர்த்த முதல் தமிழர் கலைஞர்தான்
எம்ஜிஆர் சத்தமே இல்லை, அத்தோடு மறைந்தும் போனார்
மணலாற்றில் இந்திய படையினரால் வளைக்கபட்டிருந்தார் பிரபாகரன்,
ஒரு நாள் அவகாசமிருந்தால் இந்திய படை பிடித்து நசுக்கியிருக்கும்,
கிட்டதட்ட சோலி முடிந்த நிலை
அப்பொழுதுதான் விபிசிங்கிடம் மன்றாடி அமைதிபடையினை திரும்ப பெற்றார் கலைஞர்
பிரபாகரனின் உயிர் அவரால்தான் அன்று காப்பாற்றபட்டது, இதனை வரலாற்றில் எவன் மறுக்க முடியும்?
15 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தார் கலைஞர், அவரின் நெடிய போராட்டம் கழிந்து அப்பொழுதுதான் மூச்சுவிட்டார், புலிகள் அவர் ஆட்சியில் தமிழகத்தை வலம் வந்தனர்
அங்கோ இந்திய ராணுவத்துடனான மோதல், இந்தியாவிலே அடைக்கலம் எனும் அளவிற்கு புலிகளின் ஆதரவு இருந்தது, கலைஞர் அவ்வளவு சுதந்திரம் கொடுத்திருந்தார்
அப்பொழுதுதான் பத்மநாபா படுகொலை சம்பவம் நடந்து கலைஞர் ஆட்சி கலைக்கபட்டது, நொந்து போனார் கலைஞர், இவர்களை நாம் தான் அனுமதித்தோம், நம் ஆட்சிக்கே உலையா?
அடுத்த பேரிடியாக ராஜிவ் கொலை, அகில இந்தியாவும் அலறிற்று திமுகவினர் தாக்கபட்டார்கள், ஓடவிரட்டபட்டார்கள், தேர்தலில் திமுக 1 இடத்தில்தான் வென்றது
திமுக விசாரணை வளையத்தில் வந்தது, கலைஞர் திகைத்தார், கட்சி முடக்கும் அளவு சிக்கல், கலைஞர் கூட்டம் ரத்து ஏன் என ஏக கேள்விகள்
ஆனால் அன்று ராஜிவுடன் கூட்டணியான அதிமுகவின் ஜெயா ஏன் அந்த மேடைக்கு வரவில்லை என யாரும் விசாரிக்கவில்லை, பிராமண பாசம் அப்படி
தப்பி பிழைத்தது திமுக, பத்மநாபா கொலைக்குபின் புலிகளுடனான எல்லா தொடர்பையும் கலைஞர் முறித்ததால் திமுக ராஜிவ் கொலையில் பெரிதாக சிக்கவில்லை, அதன் பின்னும் விடா பிடியாக இருந்த வைகோவினை விரட்டினார்
ஈழதலைவன் என்றும், மிகபெரும் சிந்தனையாளன், பெரும் அரசியல்வாதி என இந்திராவாலும்,ராஜிவாலும் , வாஜ்பாயினாலும் அறிபட்டிருந்த அமிர்தலிங்கத்தின் கொலை கலைஞரை மனம் நோக செய்தது
ஈழம் அமைந்திருந்தால் அமிர்தலிங்கம்தான் ஜனநாயக அதிபராகியிருக்கவேண்டும் என்றால் அந்த கொலையின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என சொல்லி தெரியவேண்டியதில்லை
சர்வாதிகாரத்தின் உச்சியில் இருந்து எல்லோரையும் கொல்வோம், அதன் பெயர் போராட்டம் என சொன்னால் அறிவில்லாத வைகோ ஏற்கலாம், கலைஞர் ஏற்பாரா?
பின் வைகோ தனிகட்சி கண்டார், ஒன்றுமில்லாத வைகோ தமிழகத்தை மிரட்டும்படி பிரமாண்ட செலவு செய்ய பணம் எங்கிருந்து வந்தது என யாருக்கும் தெரியாது
அதன் பின் கலைஞர் ஈழவிவகாரங்களில் இருந்து ஒதுங்கினார், 1998, 2002 எல்லாம் புலிகளின் வெற்றி காலங்கள், யாரும் கலைஞரை தேடவும் இல்லை, அப்படி ஒரு மனிதர் இருப்பதாக நினைக்கவுமில்லை
பிரேமதசாவுடன் நட்பு கொண்டு பின் அவரையே கொன்றதை சிங்களம் மறக்கவில்லை, ஆனால் பிரபாகரன் அபபடி மகிந்தவுடன் நெருங்கினார், மகிந்த ராஜபக்சேவினை அதிபராக்கியது நிச்சயம் பிரபாகரனே
ஆட்சிக்கு வந்தார் மகிந்தா, அவரும் பிரேமதாச சாயலே, பல சக்திகள் உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிராக திரண்டன‌ அழகாக பயன்படுத்தினார் ராஜபக்சே
புலிகளுக்கோ கடல்மீன்கள் கூட நண்பர்கள் இல்லை, புலி ஆதரவு என ஒருகுரலுமில்லை
ஆனானபட்ட யாசர் அராபத்தே போராட்டத்தை கைவிட்டு சுயாட்சிக்கு திரும்பிய நேரம் அது, பிரபாகரனை உலகம் விடுமா? இவ்வளவிற்கும் அராபத் மீது அமெரிக்க அதிபரை கொன்ற வழக்கு கூட கிடையாது
நார்வே குழு மூலம் பேசிபார்த்தார்கள், ஆண்டன் பாலசிங்கமே அலறிவிட்டு ஓடினார், புலிகளின் இறுமாப்பு அப்படி இருந்தது,
அமெரிக்க தூதர் பகிரங்கமாக எச்சரித்தார் "இனி யுத்தம் வருமாயின் புலிகள் பெரும் படுதோல்வியினை சந்திப்பர், அவர்கள் இருப்பே நிர்மூலமாகும்"
ஆனால் விதி புலிகளை திருந்த விடவில்லை, 2006ல் யுத்தம் தொடங்கிற்று, புலிகளின் பாசாங்கு யுத்தம் வெல்லவில்லை
காரணம் கருணாவின் பிரிவு அப்படி, கருணா சமாதானம் பேசினார், மாத்தையாவின் முடிவு உனக்கும் வரலாம் என சிலர் எச்சரிக்க தந்திரமாக விலகினான் கருணா, சும்மா விலகவில்லை தன் படைகளோடு விலகினான், உயிர்காக்க சிங்களனிடம் சேர்ந்தான்
அன்று பிரேமதாசாவுடன் கிட்டுவும் பாலசிங்கமும் பேசலாம், பின் ராஜபக்சேவும் கருணாவும் பேசகூடாதா?
அதுவும் விமானங்களில் சென்று ஒரு தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவதை உலக நாடுகள் அனுமதிககாது, காரணம் இன்னொரு தீவிரவாத இயக்கம் அதனை நொடியில் பெற்றுகொள்ளும், இம்மாதிரி பல விஷயங்களில் புலிகளுக்கு கட்டம் கட்டபட்டது
அமெரிக்கா புலிகளின் 11 கப்பல்களை காட்டி கொடுத்தது, ஐரோப்பா புலிகளின் வங்கி கணக்கை மூடியது, உலகமே திரண்டது புலிகள் முடிந்துகொண்டிருந்தனர்
இப்பொழுது கலைஞரை வம்புக்கு இழுத்தனர், நீ புலிகளை காப்பாற்றவில்லை என்றால் துரோகி என மண்வாரி தூற்றினர், இந்த மண்ணில் முளைத்தவர்தான் சீமான்
இந்தியாவும் புலிகள் அழியவேண்டும் என நினைத்தநாடல்ல, அப்படி நினைத்தால் 1995ல் சந்திரிகாவோடு சேர்ந்து நசுக்கியிருப்பார்கள், இலங்கையின் எங்கோ ஒரு மூலையில் இலங்கை அரசுக்கு எதிரான முணகல் இந்தியாவிற்கு வேண்டும்
இந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை சாதாரணமாக நினைத்தனர் புலிகள்
ஆனால் 2009ல் உலகம் ஒன்றாய் கூடியது, இந்தியாவிற்கும் வேறு வழியில்லை, இலங்கையில் புலிகளை காத்துவிட்டு பாகிஸ்தானிடம் காஷ்மீரில் தலையிடாதே என எந்த முகத்தை வைத்து சொல்லமுடியும்
அப்பொழுதும் சிதம்பரம் தலையிட்டார், ப.சிதம்பரமும் பிரபாகரனும் 1980களில் பழகியவர்கள். பிரபாகரன் தமிழகத்தில் தங்கி இருந்தபொழுது சிதம்பரத்தின் கண்காணிப்பில்தான் இருந்தார்
ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய பிரபாகரன் அதன் பின் இந்தியா வரவே இல்லை , காரணம் அவரை தமிழக போலிஸ் கண்காணிப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்
அப்படி அன்றே அவமானபட்ட சிதம்பரம் 2009ல் யுத்தம் நிறுத்த வழி ஒன்றே ஒன்றுதான் அது இந்தியா 1987ல் செய்தபடி மாநில அரசை அமைத்தல் யுத்தம் நிறுத்துதல் என்ற ஒப்பந்தம், புலிகள் ஆயுதங்களை கைவிட சொல்லும் ஒப்பந்தம்
அதற்கு மேல் இந்தியா இறங்கிவரவில்லை, இதுதான் முடிவு இதற்கு ஒப்புகொண்டால் பேசலாம் என்றது, 1987ல் இருந்த நிலையில்தான் இந்தியா 2009லும் இருந்தது
கலைஞரும் அதனையே வற்புறுத்தினார்
விடுவாரா வைகோ? 2009ல் ஆட்சி மாறும் என்றும், பாஜக ஆட்சி வந்தவுடன் ஈழம் கிடைக்கும் என்றேல்லாம் சொல்லி அவரை உசுப்பேத்திவிட்டார்கள்
அரசியலில் மிக அப்பாவியும், தீவிரவாதத்தில் மூர்க்கனுமான பிரபாகரன் அதை நம்பினார், சிதம்பரம் சொன்ன யோசனைகளை புறங்கையால் தள்ளினார்
இந்தியா அதிகார மட்டத்தில் வேறு மாதிரி யோசித்தார்கள், என்ன இது? பலமுறை புலிகள் தோற்றார்கள், மக்கள் நடுவில் அமர்ந்தார்கள், மக்களை கொல்கின்ரார்கள் என அலறினார்கள்
நாம் சென்று மக்களை காப்பாற்றினால் இவர்கள் தப்பிப்பார்கள், தப்பித்து?
மறுபடி அதே சண்டை, அதே அலறல், நாம் சென்று காப்பாற்றிவிட்டால் அதே விளையாட்டு, சில நேரம் நம் மீதே அடி, இவர்களை காப்பாற்றினால் இந்த விளையாட்டு இன்னும் 30 ஆண்டுகள் நீடிக்கும், இன்னும் ஆயிரகணக்கானோர் செத்துகொண்டேதான் இருப்பார்கள்
புலிகள் சமாதான‌ முடிவுக்கு வந்தால் ஏதும் செய்யலாம், இல்லாவிட்டால் ஒழியட்டும்
புலிகள் முடிவிற்கு வரவுமில்லை, இந்திய யோசனையினை, நார்வே யோசனையினை கேட்கவுமில்லை
ப.சிதம்பரம், பண்ருட்டி ராமசந்திரன் என பிரபாகரனோடு பழகிய பலர் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சத்தமே இல்லை, காரணம் புலிகளை பற்றி அவர்களுக்கு தெரியும்
மாறாக கத்துவதெல்லாம் யார் என்றால் பிரபாகரனை சரியாக கூட பார்க்காதவர்கள், புலிகளிடம் வாங்கியவர்கள், வைகோ போல என்ன பைத்தியங்கள்
உண்மை தெரிந்தவர் எல்லாம் அமைதியாக இருக்க, ஒன்றுமே தெரியாதவர் உளறல்தான் கலைஞர் ஒழிக, காங்கிரஸ் ஒழிக‌
இப்பொழுது வடகொரிய பிரச்சினையினை தமிழக முதல்வர் தீர்க்க முடியுமா? முடியாது. ஈழ இறுதிபோரும் அபபடியே , அது பெரும் கைகளால் நடத்தபட்டது
கலைஞர் தன்னால் முடிந்த மட்டும் ஈழபோராட்டத்திற்கு எல்லா உதவியும் செய்தார், அவர் கை நீட்ட நட்புக்கு அழைத்த பொழுது தட்டிவிட்டவர்கள், அவர் கும்பிட்டு கேட்ட பொழுது கையினை முறித்தவர்கள்தான் புலிகள்
கலைஞர் சொற்படி கேட்டிருந்தால் என்றோ இலங்கையில் அமைதி நிலவியிருக்கும், இத்தனை பேரழிவுகள் நடந்திருக்காது,
ஈழசிக்கலில் எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் கல்வெட்டு அது
உடன் போராட வந்தவனை கொன்றது புலிகள், ஆதரவான இந்தியாவினை விரட்டியது புலிகள், சமாதானம் பேச வந்தவனை கொன்றுபோட்டதும் புலிகள்
உலகில் எந்த சக்திக்கும் கட்டுபட மாட்டோம், எங்களுக்கு நார்வே, அமெரிக்கா வேண்டாம். எத்தியோப்பியா, எரித்திர்யா ஆதரவு போதும் என சிந்தித்ததும் புலிகள்
செய்த தவறெல்லாம் அவர்களுடையது
சபாரத்தினம்,பத்மநாபா, அமிர்தலிங்கம், ராஜிவ் என எல்லோரையும் கலைஞரை கேட்டுவிட்டா கொன்றார்கள்? கலைஞரை கேட்டுவிட்டா மகிந்தவினை முதல்வராக்கினார்கள்?
கலைஞரை கேட்டுவிட்டா வைகோவினை தலைவராக்கினார்கள்?
அவரை ஒரு மனிதனாக கூட சிந்திக்கமாட்டார்களாம், ஆனால் அவர்களுக்கு ஒன்று என்றால் கலைஞர் செத்து காத்திருக்கவேண்டுமாம்
அப்படிபட்ட அவசியம் கலைஞருக்கு ஏன் வரவேண்டும்?
கலைஞரை மீறி சென்ற புலிகள் என்ன கிழித்துவிட்டார்கள், அல்லது திமுகவிற்குத்தான் என்ன குறைந்துவிட்டது?
இன்றும் வலுவான எதிர்கட்சி திமுக, இன்று தேர்தல் வைத்தாலும் வலுவான ஆளும் கட்சி திமுக‌
ஆக கலைஞருக்கு ஒன்றுமே இழப்பில்லை, இந்த வயிற்றெரிச்சலில்தான் கத்திகொண்டே இருக்கின்றார்கள்
அதற்காக அவர் ஒரு காலத்தில் செய்த ஈழ உதவிகளை மறப்பது எவ்வகையிலும் நியாயமாகாது..
பிரபாகரன் மட்டும்தான் போராளி என்றும், அவரை காக்காதவர்கள் எல்லாம் துரோகிகள் என சொல்வார்கள் என்றால் அது பைத்தியகாரதனம்
அப்படித்தான் பல பைத்தியங்கள் உருண்டு புரண்டு அழுதுகொண்டிருக்கின்றன‌

கருத்துகள் இல்லை: