வெள்ளி, 19 மே, 2017

‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ விகடன் ; ஒரு வரி... ஒரு நெறி! - 12

சுகிர்தராணி :இந்தச் சமூகம் மிகவும் விசித்திரமானது. அநீதிக்குத் தண்ணீர் நிரப்பப் பட்ட சொகுசுப் படுக்கையையும், நீதிக்கு கற்கள் அடைக்கப்பட்ட கொடூரப் படுக்கையையும் அளித்துக் கொண்டிருக்கிறது. நீதியும், நேர்மையும், சமத்துவமும் கரடுமுரடான பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக் கின்றன. மானுட விடுதலையை, மனித மாண்பை அடைய விரும்பும் தலைவர்கள் எல்லாம் கற்களைக் கடக்காமல் சென்றிருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தன் முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். இது எல்லோரிடம் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளும் நாள் வரும் என்ற எதிர்பார்ப்பில்தான் முற்போக்குவாதிகளின் பயணம் தொடர்கிறது. அப்படியான மனிதர்களில் நானும் ஒருத்தி. சாதி வேறுபாடுகளற்ற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற, மேம்பட்ட ஒரு சமூகத்தை அடைய விரும்பி நம்பிக்கையோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவள். நான் ஒரு ஆசிரியை. நான் நன்றாகப் படித்து இந்த உயரத்தை எட்டியதற்கும், எழுத வந்ததற்கும் ஒரே ஒரு வரிதான் காரணம். அது, ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற ஏளன வரி.
இந்தச் சமூகம் என்னைப் பார்த்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தலித் மக்களையும் பார்த்து வீசும் விஷ வரி இது. வன்முறையான, சமூக நீதிக்கு எதிரான வார்த்தைகள்! எவ்வித நம்பிக்கையும் இல்லாமல் விளிம்பில் தவித்த என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டியது இந்த வரிதான்.
இந்தியச் சமூகம் சாதியால் கட்டமைக்கப்பட்ட சமூகம். சாதி, பிறப்பு சார்ந்து கட்டமைக்கப்படுகிறது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்னும் பாகுபாடு இதைச் சார்ந்தே பிரிக்கப்படுகிறது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று மக்களை வேறுபடுத்திப் பார்ப்பது எந்த நாகரிகச் சமூகத்திற்கும் அழகல்ல. ஆனால், அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது, பல நூற்றாண்டுகளாக கல்வி உள்பட எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் அளித்த உரிமை. சலுகை அல்ல. ஆனால், அதை வெகு சமூகம் ஜீரணித்துக் கொள்ள மறுக்கிறது. அவ்வப்போது இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடும் முற்பட்ட வகுப்பினர், ஒருபோதும் மலம் அள்ளும் தொழிலில் இட ஒதுக்கீடு கோருவதில்லை. சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கிற மக்கள் படித்து, தங்களுக்கு இணையாக மேலே வந்துவிடக் கூடாது என்ற வன்மம். இந்த நச்சு மனப்பான்மையின் நீட்சிதான், `பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்று என்னை நோக்கி வீசப்படும் வார்த்தைகள்.

ஒருவர் மதத்தைக்கூட மாற்றிக்கொள்ள இயலும். ஒருபோதும் பிறப்பை மாற்றிக்கொள்ள முடியாது. பிறப்பின் காரணமாக அமைந்த சாதியையும் மாற்றிக்கொள்ள முடியாது. இந்த இழிவுகளிலிருந்து ஓரளவேனும் விடுபடவும், எதிர்த்துக் கேள்வி எழுப்பவும், கல்வியை ஓர் ஆயுதமாகக் கைக்கொள்ள வேண்டும். அதைத்தான் நான் கைக்கொண்டேன். `படித்தால் சுய விழிப்பு பெறுவாய், உரிமை கேட்பாய், சேரியில் இருந்து எழுந்து வந்து சமத்துவம் பேசுவாய், பிறருக்கு இணையாகப் பணிபுரிவாய். அதனால் நீ படிக்கக்கூடாது. பறை அடிப்பவர்கள் அதை மட்டும்தான் செய்ய வேண்டும். அவர்களின் தலைமுறைக்கும் அதுதான் வாழ்க்கை...’ என்ற செய்தியைச் சுருக்கமாகச் சொன்னது `பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற வரி. அந்த வரி ஏற்படுத்திய வலிதான், என்னைப் படிக்கத் தூண்டியது. அந்தப் புறக்கணிப்புதான், மேலே வர வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது. அந்த வரி ஏற்படுத்திய அவமானங்கள்தான், ‘தனித்துவமான உதாரண மனுஷியாக வேண்டும்’ என்ற வேட்கையை உருவாக்கியது. இந்தச் சமூகம் என்னை நோக்கி எழுப்பிய கேள்வியை அணையாமல் பார்த்துக் கொண்டேன். அந்த வார்த்தைதான் எனக்கு எதிர்மறையான ஊக்கத்தைத் தந்தது.

தலித் என்பதால் பள்ளி நாட்களில் வகுப்பறையின் கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்டபோதும் கல்வியை நான் விடவில்லை. பதினைந்து ஆண்டுகள், தோழிகளே இல்லாத பருவமாய் கடந்தபோதும் நான் கல்வியைக் கைவிடவில்லை. படித்து முடித்து ஆசிரியரான பிறகும் நான் படித்துக் கொண்டே இருக்கிறேன். ‘உனக்குப் படிப்பு எதற்கு?’ என்று என்னை ஏளனம் செய்தும், என்னைப் பின்வரிசையில் அமர வைத்தும், என்னுடன் பழகுவதற்கு யாருமேயில்லாமல் பார்த்துக் கொண்ட சமூகத்திடம் ஒரு எளிய கேள்வியை முன் வைக்கிறேன். என் வாழ்க்கையில் நான் இழந்த பதினைந்து ஆண்டுகளை எனக்குத் திரும்பத் தருவது யார்? நான் இந்தச் சமூகத்தை மன்னிக்கப் போவதில்லை. மன்னிக்கவும் கூடாது.
பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு?’ எனக்கேட்ட சமூகத்திற்கு நான் தரும் பதில்.. `நான் படித்தேன். படித்துக்கொண்டே இருப்பேன். ஓர் ஆசிரியராக எல்லோரையும் படிக்க வைத்துக்கொண்டே இருப்பேன். ஆண் - பெண் பாகுபாடற்ற, சாதிகள் அறவே ஒழிந்த, மானுட விடுதலை அடைந்த சமூகம் உருவாகும் வரை!’

சந்திப்பு: வெ.நீலகண்டன்
படம்: டி.அசோக்குமார்

கருத்துகள் இல்லை: