புதன், 17 மே, 2017

சிதம்பரம் ரஜினியோடு பேசிய அடுத்தநாளே சிதம்பரம் வீட்டில் சி பி ஐ ... ரஜினிக்கு மிரட்டல்!

பாஜக அழைப்பு : ரஜினி சொன்ன பதில்!
தனது ரசிகர்களை மே 15-ம் தேதி முதல் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 'இன்று நான் நடிகனாக இருக்கிறேன். நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால் பணத்துக்கு ஆசைப்படுபவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்' என்று அறிவித்தார்.
இதுவரை பல ஆண்டுகளாக அரசியல் பிரவேசத்தை ஒரேயடியாக மறுத்து வந்த ரஜினிகாந்த் , இப்போது, 'ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால்' என்று சொல்லியிருப்பதன் மூலம் அரசியலில் இறங்குவதற்கான விருப்பத்தை முதல் முறையாக வெளிப்படுத்தினார்.
அவ்வளவுதான்... ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்றும், பி.ஜே.பி.யில் சேர்ந்து தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படப் போகிறார் எனவும் தகவல்கள் அலையடித்தன.
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் தமிழக பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், 'ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கின்றோம். பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தாலும் வரவேற்கின்றோம். அது அவரது தனிப்பட்ட முடிவு. அவரை கட்டாயப்படுத்த முடியாது' என்று தெரிவித்திருந்தார்.


ரஜினி பி.ஜே.பி.க்கு வந்தால் வரவேற்கிறோம் என்ற மத்திய அமைச்சர் பொன்னாரின் கருத்து பற்றி மே 17-ம் தேதி காலை ரசிகர்களை சந்திக்க வந்த ரஜினிகாந்திடம்
’டைம்ஸ் நவ்’ ஆங்கிலத் தொலைக்காட்சி நிருபர் கேட்டதற்கு... கேள்வியை உள்வாங்கிக் கொண்ட ரஜினி, 'நோ கமெண்ட்ஸ். தேங்க் யூ வெரி மச்' என்று கையெடுத்து கும்பிட்டதோடு, 'போலாம்' என்று தனது ஓட்டுனரிடம் தெரிவித்து நழுவி விட்டார்.
விடாத நிருபர் தமிழக விவசாயிகள் பிரச்னை பற்றி அடுத்த கேள்வியை கேட்க, பதிலேதும் சொல்லாமல் கை தூக்கிக் காட்டிவிட்டு புறப்பட்டு விட்டார் ரஜினி.
ரஜினியின் நோ கமெண்ட்ஸ் பதிலுக்கு என்ன காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம்.

ரஜினிகாந்த் அரசியல் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்த அன்று மாலை மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் ரஜினியிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். 96 தேர்தலில் தான் ஒரு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது ஒரு அரசியல் விபத்து என்று சொல்லியிருந்தார் ரஜினி. 96 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. -த.மா.கா. கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததில் ப.சிதம்பரத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அதுபற்றி நினைவு கூர்ந்த ப.சிதம்பரம், ரஜினியோடு தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசியிருக்கிறார். பி.ஜே.பி. பக்கம் போக வேண்டாம் என்றும் அப்போது ரஜினிக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தாராம் சிதம்பரம். ப.சி. மீது ரஜினிக்கு எப்போதுமே ஒரு நன் மதிப்பு உண்டு.

இந்நிலையில் மறுநாளே சிதம்பரத்தைக் குறிவைத்து சி.பி.ஐ. ரெய்டு வர, 'இது ரஜினிக்கு விடப்பட்ட எச்சரிக்கை' என்று காங்கிரஸ் பிரமுகரும் சிதம்பரம் ஆதரவாளரும், ரஜினிக்கு நெருக்கமானவருமான கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பின்னணியில்தான், ரஜினி பி.ஜே.பிக்கு வந்தால் வரவேற்கிறோம் என்ற பொன்னாரின் அழைப்புக்கு, 'நோ கமெண்ட்ஸ். தேங்க் யூ வெரி மச்' என்று பதில் சொல்லியிருக்கிறார் ரஜினி.
அரசியலுக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு அரசியலா?  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: