ஞாயிறு, 9 மார்ச், 2014

தமிழகத்தில் இடதுசாரிகள் தனித்துப் போட்டி: நாங்கள் இல்லாமல் அதிமுக வெல்ல முடியாது'- காரத்


நாகப்பட்டனம்: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன. தங்களைத் தவிர்த்து விட்டு தமிழகத்தில் அதிமுகவால் வெல்ல முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் அதிமுக அணியிலிருந்து வெளியேறி விட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது அடுத்த நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய நாகப்பட்டனத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டது. கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். கீழ வெண்மணியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தை திறந்து வைக்க காரத் நாகை வந்தார். இதற்கு முன்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் கூறுகையில், வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளன. எங்களது ஆதரவு இல்லாமல், எங்களைத் தவிர்த்து விட்டு தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவால் வெ்ற்றி பெற முடியாது என்பதை உணர்த்துவோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் ஊழலற்ற, மதச்சார்பற்ற, அரசு அமைப்பதற்கு ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுவோம் என்றார் காரத். இதன் மூலம் இடதுசாரிகள் தனியாக ஒரு கூட்டணியாக மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு கூட்டணிகளுடன் இடதுசாரிகள் தனியாக 5வது அணியாக இணைகின்றனர். இதன் மூலம் தமிழக லோக்சபா தேர்தல் களம் 5 முனைப் போட்டியைச் சந்திக்கிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: