செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி? வதேரா கற்று கொடுப்பார் : பா.ஜ.க

புதுடெல்லி: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் நிலமோசடி விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் அமளியில் இறங்கினர். இந்தப்பிரச்னையுடன் ஜம்மு கலவரம், கேரள மாநிலத்தில் சோலார் பேனல் ஊழல் விவகாரமும் சேர்ந்து கொண்டதை தொடர்ந்து இரு அவையும் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல பிரச்னைகள் குறித்து பேச தொடங்கினர்.
< சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் நில மோசடிகள் குறித்து, பா.ஜ.கவை சேர்ந்த யஷ்வந்த் சின்கா பேசினார். 'பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை சொல்லி கொடுக்க பல்வேறு பிசினஸ் ஸ்கூல்கள் உள்ளன. இந்த கல்லூரிகள் எதிலும் படிக்காமல் முதலீடு இல்லாமல் கோடி கோடியாக சம்பாதிப்பது எப்படி என்பதை உயர்ந்த இடத்துடன் தொடர்பு உள்ள ஒருவர் நமக்கு கற்று கொடுத்திருக்கிறார்' என மறைமுகமாக ராபர்ட் வதேரா குறித்து பேசினார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பி சஞ்சய் நிருபம் அவையின் மைய பகுதிக்கு சென்று பா.ஜ.க குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத், இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பீகார் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும் லாலு கட்சி உறுப்பினர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் குற்றம் சாட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். சோலார் பேனல் மோசடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இடதுசாரி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி நிலவியது.

இதை தொடர்ந்து அவையை பகல் 12 மணி வரை சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடிய போதும் இதே நிலை நீடித்ததால் பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. ராபர்ட் வதேரா, தெலங்கானா, கேரளா சோலார் பேனல், ஜம்மு கலவரம் என பல்வேறு பிரச்னைகளுக்காக மாநிலங்களவையும் முதலில் 12 மணி வரையும் பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. dinakaran,com

கருத்துகள் இல்லை: