வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பெந்தெகொஸ்தே தேவாலயங்களை மூட உத்தரவு !போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் மதகுருமார்கள்

கேமரூன் நாட்டில் ஏறத்தாழ 500 பெந்தெகொஸ்தே தேவாலயங்கள் இயங்கிவருகின்றன. ஆனால், அவற்றுள் 50 மட்டுமே முறையான அனுமதி பெற்று நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று பமென்டாவில் உள்ள வின்னர்ஸ் பிரார்த்தனை மையத்திற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுமி சரிந்து விழுந்து இறந்து போனார். அவருடைய உடலில் இருந்த கெட்ட ஆவிகளை விரட்டியதாக அந்தப் பாதிரியார் இதற்கு பதிலளித்துள்ளார். தாங்கள் அதீத சக்தி பெறவேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்கைகள் நடைபெறுவது தடை செய்யப்படவேண்டும் என்று அந்த சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதன்விளைவாக, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டினுடைய பாதுகாப்பையே இது போன்ற நடவடிக்கைகள் அச்சுறுத்துவதாக உள்ளன என்று அதிபர் பால் பியா தெரிவித்துள்ளார். ஆனால், அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களால் எழும் பாதுகாப்பின்மையால் தான் பியா தங்களது தேவாலயங்களை மூட நினைக்கிறார் என்று அம்மத போதகர்கள் கூறுகின்றனர்.

அதிபர் பியா ராணுவத்தின் துணையுடன் தலைநகர் யாவுண்டே, வடமேற்கு பகுதியின் தலைநகரான பமென்டா பகுதிகளில் உள்ள பெந்தெகொஸ்தே ஆலயங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். பமென்டாவில்தான் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நடவடிக்கை மூலம் 50க்கும் மேற்பட்டுள்ள ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், நாட்டின் மற்ற எட்டு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை மூடும் எண்ணத்தில் அரசு உள்ளது.

இயேசு கிறிஸ்துவின் பெயரால் போலியான அதிசயங்களை நிகழ்த்தி மக்களைக் கொல்லும் இத்தகைய மதகுருமார்கள் அடியோடு நீக்கப்பட வேண்டும். இவர்கள் தங்களின் அதிகாரத்தை மீறுகின்றார்கள் என்று பமென்டாவில் அரசு அதிகாரியாகப் பணிபுரியும் மபு அந்தோணி லங் தெரிவித்துள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: