வியாழன், 18 ஜூலை, 2013

இந்­தியா தனது வாயா­லேயே தனது பலவீனத்தை வெளிப்­ப­டுத்தி விட்ட நிலை! -ஹரி­கரன்

இந்­தி­யாவின் பிராந்­திய அர­சியல்  இராஜ­தந்­தி­ரத்­துக்கு இப்­போது மிகப் பெரிய சோதனை ஏற்­பட்­டுள்­ளது.  இலங்கை விவ­கா­ரத்தில், இந்­தி­யா­வுக்கு உள்ள செல்­வாக்கு எத்­த­கை­யது என்ற கேள்வி எழுப்­பப்­படும் சூழல் ஏற்­பட்­டுள்­ளதே அதற்குக் காரணம். தென்­னா­சியப்  பிராந்­தி­யத்தில், இந்­தியா  கொண்­டி­ருந்த செல்­வாக்கும், ஆதி­பத்­தி­யமும், 2009 மே 18ஆம் திக­தி­யுடன் கேள்­விக்­குள்­ள­ாக்­கப்­பட்டு விட்­டது.  இந்­தி­யா­வுடன் நேரடி நட்புக் கொண்­ட­தாக,  புலிகள் இயக்கம், இல்லா­விட்­டாலும், தென்­னா­சியப்  பிராந்­தி­யத்தில், இந்­தி­யா­வி­னது  அதி­கார சம­நி­லையைப் பேணு­வ­தற்கு   மறை­முக கார­ணி­யாக அந்த இயக்கம் இருந்து வந்­தது என்­பது ஆச்­ச­ரி­ய­மான உண்மை  புலிகள் இயக்கம் இருந்த­வ­ரையில், இந்­தி­யா­வினால், இந்த உண்மை உண­ரப்­ப­ட­வில்லை.  புலிகள் இயக்­கத்­தினால் ஏற்­படக் கூடிய தீமை­களை மட்­டுமே இந்­தியா கணக்குப் பார்த்­தது.  அதற்கு அப்பால், இந்தியாவின் பாது­காப்பில் செல்­வாக்குச் செலுத்­தத்­தக்க கார­ணி­யாக  இருந்­துள்­ளது என்­பது,  புலி­களால்  ஏற்­பட்ட  வெற்­றி­டத்­துக்குப் பின்­னரே இந்­தி­யா­வினால் உண­ரப்­ப­டு­கி­றது.
விடு­தலைப் புலி­களின் வீழ்ச்­சிக்குப் பின்னர், தெற்­கா­சி­யாவில் ஏற்­பட்­டுள்ள, பிராந்­திய, அர­சியல், இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார மாற்­றங்கள், இந்­தி­யா­வுக்கு சாத­க­மான அம்­சங்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை.  இலங்­கையின் மீது கொண்­டி­ருந்த செல்­வாக்கு உடைந்து போனது அதற்­கான மிகப்­பெ­ரிய காரணம்.
இந்­தியப் பெருங்­க­டலின், சர்­வ­தேச கடற்­பா­தைக்கு மிக நெருக்­க­மாக அமைந்­துள்ள  அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தை  சீனா தன் கைக்குள் கொண்டு வரத் தொடங்­கி­யதன் பின்னர், இலங்­கையின் எத்­த­கைய நகர்­வு­க­ளையும் இந்தியா கைகட்டி  நின்று வேடிக்கை  பார்க்க வேண்­டிய நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளது.
அவ்­வப்­போது  இந்­தியா தனக்குக் கிடைக்கக் கூடிய சின்­னச்­சின்ன  துருப்­புச்­சீட்­டு­களை வைத்துக் கொண்டே, இலங்­கை­யு­ட­னான நட்பைப் பேண வேண்­டிய நிலையில் உள்­ளது.
இப்­போது, 13ஆவது திருத்­தச்­சட்ட விவ­கா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றியில், இந்­தியா முன்­ன­கர்த்த முடி­யாத ஒரு இராஜ­தந்­திரச் சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ளது.
தனது  சொந்தக் குழந்­தை­யான  13ஆவது  திருத்­தச்­சட்­டத்தை, இலங்கை அர­சாங்கம் பலி­கொ­டுக்கப் போவதை இந்­தி­யா­வினால் பார்த்துக் கொண்­டி­ருக்­கவும்  முடி­ய­வில்லை. அதே­வேளை, அதைத்  தடுப்­ப­தற்கு  எதையும்  செய்­யவும் முடி­யாத  இக்­கட்­டான  நிலைக்­குள்ளும்   இந்­தியா சிக்கிப் போயுள்­ளது.
இந்­தியா தனது, இராஜ­தந்­தி­ரிகள் மூலம், வெளி­வி­வ­கார  அமைச்சர் மூலம், பிர­தமர் மூலம், எல்லாம், 13ஆவது  திருத்­தச்­சட்டம்  பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை  என்று தெளி­வாக எடுத்துக் கூறியும், இலங்கை அரசாங்கத்தின் முடி­வையோ  போக்­கையோ மாற்ற முடி­ய­வில்லை.
கடை­சி­யாக, இந்­தி­யாவின்  தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் சிவ்­சங்கர் மேனன், ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை சந்­தித்த போது கூட, எந்த மாற்­றத்­தையும் இந்­தி­யா­வினால் செய்ய முடி­ய­வில்லை.
தெரி­வுக்­கு­ழுவே, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின்   தலை­வி­தியைத் தீர்­மா­னிக்கும் என்று மட்­டு­மன்றி, மாகா­ணங்­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­பது நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றது, அது நடக்­காது என்றும் சிவ்சங்கர் மேன­னிடம் வெளிப்­ப­டை­யா­கவே கூறி­யி­ருந்தார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ.
இது 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை, முழு­ அ­ளவில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்ற, அதில் கை வைக்­கவே கூடாது என்ற இந்­தி­யாவின் நிலைப்­பாட்­டுக்கு முர­ணா­னது என்று தெரிந்­தி­ருந்தும் கூட, தனது முடிவில் இருந்து இலங்கை பின்­வாங்­க­வில்லை.
இந்­தி­யாவின் முகத்­துக்கு நேரே, அடித்துக் கூறும்  இந்தத்  தற்­து­ணிவு, இதற்கு  முன்னர்  பிரே­ம­தாஸ  தவிர்ந்த வேறெந்த ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் இருந்­தி­ருக்­க­வில்லை.  அப்­போது, புலி­க­ளுடன் இணைந்து கொண்டு அவர், இந்தியப்படைகளை வெளி­யே­று­வ­தற்குக் காலக்­கெடு விதித்தார்.
போர்ப்­பி­ர­க­டனம் செய்யப் போவ­தாக அச்­சு­றுத்­தினார்.
எனினும், 13ஆவது  திருத்­தச்­சட்­டத்தை கடு­மை­யாக  எதிர்த்த பிரே­ம­தாஸ கூட, அதனை ஒழிப்­ப­தற்கோ, அதன் மடியில் கை வைப்­ப­தற்கோ துணி­ய­வில்லை.  ஆனால், இப்­போ­தைய அர­சாங்கம், இந்­தி­யா­வுடன் போர்ப்­பி­ர­க­டனம் செய்­ய­வில்­லை­யா­யினும்,  இந்­தி­யாவின்  குழந்­தை­யான 13ஆவது திருத்­தச்­ சட்­டத்­தையே  பலி­கொ­டுக்கத்  துணிந்து விட்­டது.
13ஆவது திருத்­தச்­சட்­டத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கான தெரி­வுக்­கு­ழுவின் பணிகள் ஆரம்­ப­மாகி விட்­டன.
தமது முடிவில் எந்த மாற்­றமும் இல்லை என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவே உறு­தி­யாகக் கூறி­விட்டார்.
இந்­தி­யாவின் குழந்­தை­யான 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை அழிப்­ப­தற்கே இந்­தி­யாவின் உத­வியை, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாடி­யது தான். மிகப்­பெ­ரிய நகைச்­சுவை. அதா­வது தெரி­வுக்­கு­ழு­வுக்குள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை  வர­வ­ழைக்க   இந்­தியா  உதவ வேண்டும்  என்று  சிவ்­சங்கர் மேன­னிடம்,  மஹிந்த  ராஜ­பக்ஷவும், சல்மான்  குர்­ஷித்­திடம்   பஷில் ராஜ­பக்ஷவும்   வேண்­டுகோள்  விடுத்­தி­ருந்­தனர்.
இவை­யெல்­லா­வற்­றுக்கும்  பின்­னரும், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தைத் தற்­போ­துள்­ளது போலப் பாது­காக்­கவோ, முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தவோ, இலங்கை அர­சாங்கம் முன்­வரப் போவ­தில்லை என்­பது இந்­தி­யா­வுக்கு நன்றாகவே  புரிந்­தி­ருக்கும்.
ஆனாலும், இந்­தி­யத்­த­ரப்பு இன்­னமும், இலங்கை அதைச் செய்யும் என்று நம்­பு­வ­தாக அறிக்­கை­க­ளையே வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.
13ஆவது திருத்­தச்­சட்­டத்தை தற்­போ­தைய நிலையில், விட்டு வைக்க இலங்கை அர­சாங்கம் தயா­ராக இல்­லாத நிலையில், இந்­தி­யா­வுக்கு மாற்றுத் தெரிவு என்று எது­வுமே இல்­லாத வெறுமை நிலை ஒன்று ஏற்­பட்­டுள்­ளது.
இந்த வெளி தான், இலங்­கைக்குச் சாத­க­மா­னது 
இப்­போது இந்­தி­யா­வுக்கு இலங்கை மீது உள்ள ஒரே, பிடி அல்­லது துருப்­புச்­சீட்டு என்றால், அது, கொமன்வெல்த் உச்சி மாநாடு தான்.  இந்­தி­யா­வி­னது எந்தக் கருத்தும், கொமன்வெல்த் மாநாடு நடை­பெறும் வரையில் தான் இலங்கையால் செவி­மடுக்­கப்­படும்.
அதற்குப் பின்னர், இந்­தியப் பெருங்­க­டலில்  இந்­தி­யாவின் நிலை, கேள்­விக்­குள்­ளாக்­கப்­படும்.
இலங்கை உள்­ளிட்ட எந்­த­வொரு நாட்­டி­னதும் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் தலை­யிடப் போவ­தில்லை என்ற இந்­தி­யாவின் அணு­கு­முறை, இலங்­கைக்கு வாய்த்த மிகப்­பெ­ரிய வரப்­பி­ர­சாதம். இந்­தியா தனது வாயா­லேயே தனது பலவீனத்தை வெளிப்­ப­டுத்தி விட்ட நிலையில், உள்­நாட்டு  விவ­காரம் என்ற தளத்தை வைத்துக் கொண்டு இலங்கை அர­சாங்கம் சுல­ப­மாக காய்­களை நகர்த்தி வரு­கி­றது.
இதனால், தமி­ழர்­களின்  நலன்­களும், உரி­மை­களும்  கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­வ­துடன்  நின்றுவிடப் போவதில்லை.  இலங்கையில் உள்ள தமிழர்களை நாம் ஒருபோதும் கைவிட்டு விடப் போவதில்லை என்று, இந்தியா அடிக்கடி கூறும் வாக்குறுதியும் கூட கேள்விக்குள்ளாகி விடும்.
இப்போதைய நிலையில், இலங்கை விவகாரத்தில், எதையும் செய்யவும் முடியாத – அதேவேளை, எதையும் செய்யாமல் இருக்கவும் முடியாத திரிசங்கு நிலையில் இந்தியா சிக்கிப் போயுள்ளது.
இந்த இராஜதந்திர நெருக்கடி – இடைவெளி இந்தியாவுக்கு எதுவரை நீளப் போகிறது என்பதை, புதுடில்லியின் அதிகாரபீடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த முடிவை இந்தியா, எந்தளவுக்குத் தாமதிக்கிறதோ, அந்தளவுக்கு பிராந்திய ரீதியில் இந்தியாவின் செல்வாக்கும் கேள்விக்குள்ளாக்கப்படவே வாய்ப்புக்கள் உள்ளன.
-ஹரி­கரன்  ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: