சனி, 20 ஜூலை, 2013

Chennai பெண் கடத்தி கொலை கள்ளக்காதலனை பிடிக்க 3 தனிப்படை

சென்னை:சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (28). இவருக்கும் திருவான்மியூரை சேர்ந்த சரவணனுக்கும் 2005&ம் ஆண்டு திருமணம்
நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 13&ம் தேதி காலை பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை.அன்று பிற்பகல் 3 மணிக்கு தனது அண்ணன் ரவிச்சந்திரனுக்கு போன் செய்த கங்காதேவி, சென்ட்ரலில் உள்ள ஒருவரது செல்போனில் இருந்து பேசுவதாகவும், தன்னை கார்த்திக் என்பவர் அடித்து, உதைத்து கடத்தி செல்வதாகவும் கூறிவிட்டு போனை வைத்து விட்டார். சிறிது நேரத்தில் ரவிச்சந்திரனுக்கு மீண்டும் போன் வந்தது. அதில் பேசிய கார்த்திக், ‘‘உன் தங்கையை நான்தான் கடத்தியுள்ளேன். முடிந்தால் பிடித்து பார்’’ என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். ‘உன் தங்கை சென்ட்ரலில் இருந்துதான் பேசியுள்ளார். அதனால் பெரியமேடு போலீசில் புகார் செய்யுங்கள்’ என்று போலீசார் கூறிவிட்டனர்.

பெரியமேடு போலீசில் புகாரை கொடுத்தபோது, அவர்களும் வாங்கவில்லை. ‘திருவான்மியூரில் இருந்துதான் பெண் காணாமல் போயுள்ளார். அங்கே சென்று புகார் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டனர். 2 நாள் அழைக்கழிப்புக்கு பிறகு கடந்த 15 ம் தேதி திருவான்மியூர் போலீசில் புகார் செய்தனர்.

இதற்கிடையே, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் நங்கமங்கலம் ஏரியில் மூட்டைக்குள் நிர்வாண நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி தெரிந்ததும் கங்காதேவியின் உறவினர்களுடன் திருவான்மியூர் போலீசார் காவேரிப்பாக்கம் சென்றனர். வாலாஜா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை பார்த்து, அது கங்காதேவிதான் என்று உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இறந்தது காங்காதேவிதான் என்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவரை கடத்திச் சென்று கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். திருநின்றவூரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திக் (23) என்பவருடன் கங்காதேவிக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. கார்த்திக், கங்காவைவிட 5 வயது குறைவானவர். பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு செல்லும் கங்காதேவி, கார்த்திக்கை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார். இது இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது. அவர்களை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கார்த்திக்குடன் கங்காதேவி பழகியது சரவணனுக்கு தெரியாது. குழந்தை இல்லாத ஏக்கத்தில்தான் மனைவி, அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக நினைத்திருந்தார். சரவணன், சில மாதங்களாக வேலை இல்லாமல் இருந்ததால் கங்காதேவி பெற்றோர் வீட்டில் இருந்து செலவுக்கு பணம் வாங்கி வந்துள்ளார். வீட்டில் தனியாக இருக்கும்போது மணிக்கணக்கில் கார்த்திக்குடன் செல்போனில் பேசியுள்ளார்.

சம்பவத்தன்று கார்த்திக்தான் போன் செய்து கங்காதேவியை அழைத்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த ஆத்திரத்தில்தான் கங்காதேவியை கார்த்திக் கடத்திச் சென்று கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். கொலை செய்த விதத்தை பார்க்கும்போது, கார்த்திக்குக்கு வேறு யாராவது உதவியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: