மோக்ஷாக்னா
ன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே யாரோ குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. சட்டப்படி இது தவறு. அதுவும், நள்ளிரவில் போதையுடன் அதி வேகத்தில் பயணம் செய்வது பெரும் குற்றம். எனவே வண்டியை நிறுத்தச் சொல்லி கை காட்டினார்கள். ஆனால், போக்குவரத்து காவலர்களை பார்த்த வண்டி ஓட்டுநர், முன்பை விட அதிக வேகத்துடன் நிற்காமல் சென்று விட்டார்.
உடனே தங்கள் வாகனத்தில் ஏறி, அந்த டாடா சஃபாரியை காவலர்கள் துரத்தினார்கள். கிட்டத்தட்ட 10 கி.மீ. தூரம் சென்ற பிறகே அந்த வண்டியை மடக்க முடிந்தது. பிடிபட்ட அந்த வண்டியின் எண்: AP 16 BK 1. வண்டியினுள் ஐந்து பேர் இருந்தார்கள். ஐவருமே மாணவப் பருவத்தில் இருந்து இளைஞர்களாக மாறிக் கொண்டிருப்பவர்கள். மைனர்கள். ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருமே குடித்திருந்தார்கள். முழு போதையில் நிற்கக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஐவரும் யார் யார் என விவரங்களை சேகரிக்க ஆரம்பித்த காவலர்கள், ஒரு கட்டத்தில் தடுமாறி விட்டார்கள். காரணம், ஐவரில் ஒருவர், மோக்ஷக்னா (Mokshagna). மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரன். இந்நாள் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களில் ஒருவரும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன். மிகப் பெரிய இடம். கை வைக்க முடியாது. அது அரசியல் பிரச்னையாக உருவெடுத்து மாநில சட்ட ஒழுங்கை பாதிக்கும். மீடியாக்கள் அலறும். அரசியல் காரணங்களுக்காக பொய்க் குற்றம் சாட்டி தன் மகனை காவலர்கள் கைது செய்து விட்டதாக திருப்பதி பெருமாள் மீது பாலகிருஷ்ணா சத்தியம் செய்வார். நிலமையை கட்டுக்குள் கொண்டு வர உயர் அதிகாரிகளும் தங்களை சஸ்பெண்ட் செய்வார்கள்.
எதற்கு வம்பு? எனவே அன்றைய இரவு பணியில் இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டரான கே.பாலகிருஷ்ண ரெட்டி, மற்ற நான்கு பிள்ளைகளை மட்டுமே கைது செய்தார். முதல் தகவல் அறிக்கையில் மோக்ஷாக்னாவின் பெயர், சேர்க்கப்படவே இல்லை. அத்துடன் முதல் வேளையாக பாலகிருஷ்ணாவின் உதவியாளரை தொடர்பு கொண்டு சுயநினைவின்றி இருந்த மோக்ஷாக்னாவை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனால், தாறுமாறான வேகத்துடன் வண்டியை நள்ளிரவில் குடித்துவிட்டு ஓட்டியது மோக்ஷாக்னாதான்.
நாளை இந்த மைனர் குஞ்சு, தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார். நாட்டை காக்க தன் உயிரைக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுவார். தன் பின்னால் பெரும் படையே இருப்பதாக தொடை தட்டுவார். அனல் பறக்கும் பன்ச் டயலாக்குகளை பேசி செவிகளை செவிடாக்குவார். தெலுங்கு தேச கட்சியே தன்னுடையதுதான் என புருவத்தை உயர்த்துவார். முதலமைச்சர் கனவில் மாநிலம் முழுக்க சுற்றுலா செல்வார். ஒருவேளை முதலமைச்சர் ஆனாலும் ஆவார்.
இதுதான் யதார்த்தம்.
ஆந்திர மாநிலத்தில் நடந்த இந்த ஒரு சம்பவம்தான் ஒட்டுமொத்த பணக்கார இந்தியாவின் இன்றைய நிலைக்கான ஒரு சோறு பதம். மேட்டுக்குடி மைனர் குஞ்சுகள் குடித்துவிட்டு தாறுமாறாக நள்ளிரவில் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து எந்த செய்தித்தாளும் பதிவு செய்வதில்லை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் நடக்கும் உயிரிழப்புகளை பட்டியலிட்டால், பெரும் எண்ணிக்கை வரும். குறிப்பாக வார இறுதி நாட்களில் அப்பகுதி மீனவர்களும், உழைக்கும் மக்களும் தங்கள் உயிரை கையில் பிடித்தபடிதான் இரவில் உறங்காமல் உறங்குகிறார்கள்.
நகரங்கள் மட்டுமல்ல, நகரச் சாலைகளும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கின்றன. உழைத்து களைத்து வருபவர்களை மடக்கி, ‘லைசன்ஸ் இருக்கா… வண்டி யாரோடது… இன்னொருத்தன் வண்டியை நீ எப்படி ஓட்டலாம்? திருடினியா..?’ என்றெல்லாம் மீசையை முறுக்கி கர்ஜித்தபடி மாத இறுதியில் நூறு ரூபாயை எதிர்பார்க்கும் காவலர்கள், ஒரு போதும் சீமான்களை மடக்குவதில்லை. முடிந்தால் செல்வந்தர் வீட்டு பொமேரியன் நாய்குட்டிக்கு சலாம் அடிக்கவே காத்திருக்கிறார்கள்.
டெல்லி பாரில் ஜெசிகா லால் எனும் பரிமாறும் பெண்ணை கொன்ற மனுசர்மா முதல், மும்பை, டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை குடித்து விட்டு வேகமாக ஓட்டி பல ஏழைகளைக் கொன்ற சம்பவங்கள் ஏராளமிருக்கின்றன. புத்தாண்டு சமயம் இவர்களது குடியும், வன்முறையும் போதைக்கு போட்டியாக நடக்கும். மேட்டுக்குடி நட்சத்திர விடுதிகளின் நடன அறை துவங்கி பண்ணை வீடு விருந்து வரை இவர்களின் மர்ம உலகம் உருவாக்கும் வன்முறைகள் அதிகம். ஆனாலும் கொலையே நடந்தாலும் இத்தகைய மேன்மக்களை போலீசும், நீதி அமைப்புக்களும் ஒன்றும் செய்து விடாது.
இதுதாண்டா இன்றைய இந்தியா!!!