சனி, 29 செப்டம்பர், 2012

கர்நாடகாவில் தமிழர்கள் பதட்டத்தில்! சில இடங்களில் தொடங்கியது மிரட்டல்!!


Viruvirupu
காவிரி நதி நீர் ஆணையம், தமிழகத்துக்கு, 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து, கன்னட அமைப்புகள் வரும், 6-ம் தேதி பந்த் நடத்தவுள்ளன. இது அங்கு ஒருவித பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், சில அமைப்புகளும், கட்சிகளும், தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டும், பேசியும் வருவதால், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
கடந்த, 1991-ம் ஆண்டு, அப்போதைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா, காவிரி நதி நீர் ஆணைய இடைக்கால உத்தரவை ஏற்க மறுத்ததோடு, மாநில அளவில், பந்த் நடத்தினார். அந்த பந்த்தின் போது, தமிழர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். சாம்ராஜ் நகர், ஹெச்.டி.கோட்டே பகுதியில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தினர், மொத்தமாக கர்நாடகாவை விட்டு வெளியேறினர்.
தற்போது, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை எதிர்த்து, கன்னட அமைப்புகள், அக்டோபர் 6-ம் தேதி, முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளன. சில கன்னட அமைப்புகள் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் வசிக்கும், தமிழ்க் குடும்பங்களை இப்போதே அச்சுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாயத் தொழிலில் வேலை செய்து வரும் தமிழர்கள், தனிமையாக வசித்து வருவதால் மிகவும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவளிக்கவில்லை எனில், 1991-ம் ஆண்டு கலவரம் போன்று மீண்டும் நடத்துவோம் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் உள்ள, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக போலீஸ் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த பிரச்னை, கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களை மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள, கன்னடர்களையும் பாதிக்கலாம் என்ற கருத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு செயல்பட வேண்டும் என்று அவர்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ் மக்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில் உள்ள உள்ளூர் தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து, தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, தமிழ் அமைப்பு குழுவினர் கேட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: