திங்கள், 24 செப்டம்பர், 2012

தனித் தெலுங்கானா அமைத்தால் கூண்டோடு விலகிடுவோம்

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகி விடுவோம் என்று 6 அமைச்சர்கள் உட்பட 32 எம்.எல்.ஏக்கள் அறிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சாதகமான முடிவை அறிவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தெலுங்கானா தனி மாநிலம் அமைந்தால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கூண்டோடு காங்கிரசில் ஐக்கியமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசில் இருந்து திரிணாமுல் வெளியேறி விட்ட நிலையில் இப்போது சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளையே காங்கிரஸ் நம்பியிருக்கிறது. ஆனாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை அப்படியே காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்படுத்தியிருக்கும் பேரிழப்பை சற்றேனும் சமாளிக்கலாம் என்பதுதான் காங்கிரசின் கணக்காக உள்ளது.
மேலும் கடந்த ஒருவார காலமாக ஆந்திர மாநில சட்டப்பேரவையை தெலுங்கானா ராஷ்டீரிய சமீதிக் கட்சியினர் முடக்கி வைத்திருக்கின்றனர். தனித் தெலுங்கானா மாநிலம் அமையும்வரை ஆந்திர பேரவையை நடத்தவிடமாட்டோம் என்று கூறிவருகிறது. இதனால் எப்படியும் தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தெலுங்கானாவை எதிர்க்கும் ராயலசீமா பகுதியை சேர்ந்த 6 அமைச்சர்களானசைலஜாநாத் வெங்கடேசன், முரளி மோகன், சீனிவாசராவ்,அகம துல்பா, தோட்டா நரசிம்மா ஆகியோரும் 32 எம்.எல்.ஏ., 14 எம்.பி.க்களும் ஹைதராபாத்தில் திடீரென அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டால் ராயலசீமா பிரதேசத்தைச் சேர்ந்தோர் அனைவரும் காங்கிரஸிலிருந்து விலகிவிடுவது என்று முடிவெடுத்திருக்கின்றனர். மேலும் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: