வியாழன், 27 செப்டம்பர், 2012

பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் எத்தனை கோடி முதலீடு என்பது பிரச்சனை அல்ல.. மக்களின் பாதுகாப்புக்கு முக்கியம் இல்லையெனில் மூடிவிட வேண்டியதுதான் என்று மிகக் கடுமையாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அணு உலையை இயங்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொறியாளர் சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக்மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது கூடங்குளம் அணு உலைக்கு தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியதில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அணு உலைக் கழிவால் கடல்வளத்துக்கு ஆபத்து என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார். ஆனால் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜப்பானின் புகுஷிமாவை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது கூடங்குளம் அணு உலை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர். அப்போது, கூடங்குளத்தில் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது? செலவு செய்யப்பட்டுள்ளது என்பது முக்கியம் அல்ல. கூடங்குளத்தில் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். கூடங்குளத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் அணு உலையை இழுத்து மூட வேண்டியதுதான் என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: