திங்கள், 24 செப்டம்பர், 2012

தலித் பெண் 8 உயர்சாதியினரால் கற்பழிக்கப்பட்டார் தந்தை தற்கொலை

16 வயது தலித் பெண் கற்பழிக்கப்பட்டதால் அவரது தந்தை  தற்கொலை செய்து கொண்டார். இந்த கற்பழிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார், மேலும் 11 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள தப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தலிப் பெண் கடந்த 9ம் தேதி உயர் ஜாதியைச் சேர்ந்த 8 ஆண்களால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவர்கள் அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால் நடப்பது வேறு என்று மிரட்டியுள்ளனர். இதனால் அப்பெண் நடந்த விவகாரத்தை தனது பெற்றோரிடம் கூட தெரிவிக்கவில்லை. இதற்கிடையே அந்த வாலிபர்கள் அப்பெண்ணின் நிர்வாண வீடியோவை எம்.எம்.எஸ். மூலம் உள்ளூர்வாசிகளுக்கு அனுப்பினர்.
இதையடுத்து அந்த பெண் கடந்த 19ம் தேதி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவி்த்தார். உடனே அவரின் தந்தை இது குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது மகளுக்கு நேர்ந்ததை எண்ணி தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

பின்னர் ஒரு வழியாக வழக்குப் பதிவு செய்து நேற்று பலிஜீத் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தவிர 11 பேருக்கு இதில் தொடர்புள்ளது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் கூறிய 11 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரையும் உடனே கைது செய்யக்கோரி தப்ரா கிராம மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று துணை கமிஷனர் அமித் குமார் அகர்வால் மற்றும் எஸ்.பி. பாலன் ஆகியோர் உறுதி அளித்த பிறகே அப்பெண்ணின் தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்ததனர்.
அதன் பிறகு பிரேத பிரசோதனை முடிந்து அவரது உடல் அவரது சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: