ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

நித்தியானந்தா & ரஞ்சிதா சிடி வழக்கில் பொய்யான வாக்குமூலம் பெற போலீஸ் அடித்து சித்திரவதை

சென்னை: கஸ்டடி எடுத்த போலீசார் பொய் வாக்குமூலம் தரச் சொல்லி சரமாரியாக அடித்து துன்புறுத்திதால் படுகாயம் அடைந்த சினிமா வினியோகஸ்தர் மாஜிஸ்திரேட் முன்பு மயங்கி விழுந்ததால் சைதாப்பேட்டை கோர்ட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட சிடி தொடர்பான வழக்கில் சன் பிக்சர்ஸ் சக்சேனாவையும், பட வினியோகஸ்தர் அய்யப்பனையும் போலீசார் நேற்று கைது செய்து சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் எம்.பி.ராம் முன்னிலையில் ஆஜர்படுத்த ஜீப்பில் அழைத்து வந்தனர். அய்யப்பனின் உடலில் நிறைய காயங்கள் இருந்தன. ஜீ¢ப்பில் இருந்து அவரால் இறங்க முடியவில்லை. அவரை இரண்டு போலீசார் கைத்தாங்கலாக இறக்கி கோர்ட்டுக்குள் கொண்டு சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த நிருபர்கள் எப்படி காயம் ஏற்பட்டது என அய்யப்பனிடம் கேட்டனர். அழுகையை அடக்க முடியாமல் கதறிய அய்யப்பன், தன்னை போலீஸ் காவலில் எடுத்த சிபிசிஐடி போலீசார் சரமாரியாக அடித்து துன்புறுத்தியதாக பதிலளித்தார். எதற்காக அடித்தார்கள் என நிருபர்கள் தொடர்ந்து கேட்டதற்கு, ‘Ôசன் குரூப் தலைவர் கலாநிதி மாறனை பற்றி உனக்கு என்ன தெரியும், சொல்லு என்று கேட்டார்கள். ‘அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை பார்த்ததுகூட இல்லை’ என்று சொன்னேன். அதனால் ஆத்திரம் அடைந்து அவரை பற்றி சொல்லு என்று கேட்டு கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்தினார்கள்’’ என்று கூறிய அய்யப்பன், தன் உடலில் இருந்த ரத்த காயங்களையும் காட்டினார்.

கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சக்சேனா, அய்யப்பன் ஆகியோரிடம், நித்ய ஆத்ம பிரமானந்தா என்பவர் ஜூலையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார். அதற்கு சக்சேனா, “ஏற்கனவே இது சம்பந்தமாக என்னிடம் விசாரித்த டிஐஜியும் டிஎஸ்பியும் என் மேல் எந்த புகாரும் இல்லை என்று சொன்னார்கள். தேவையில்லாமல் இரண்டரை மாதம் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். இன்று காலை வீட்டுக்கு சென்றிருப்பேன். ஆனால் தொடர்ந்து சிறையில் அடைக்கும் வகையில் இந்த வழக்கில் இப்போது கைது செய்திருக்கிறார்கள்“ என்று கூறினார். அடுத்து அய்யப்பன், “இதற்கு முந்தைய வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து போலீஸ் காவலில் எடுத்தனர். அப்போது விசாரணை என்ற பெயரில் என்னை கடுமையாக அடித்து உதைத்தார்கள். கால், தொடையில் இருந்து ரத்தம் கொட்டியது. இரண்டு வேட்டிகளால் ரத்தத்தை துடைத்தனர். பிறகு அவர்களே வேறு வேட்டி வாங்கி கொடுத்தனர்“ என்றார்.

மாஜிஸ்திரேட் : போலீஸ் காவல் முடித்து நீதிமன்றத்துக்கு கூட்டி வந்தபோது ஏன் இதை சொல்லவில்லை? அய்யப்பன்: அடித்ததாக இங்கே சொல்லக்கூடாது என்று என்னை மிரட்டினார்கள். இருபது போலீசார் என்னை சுற்றி நின்று, ‘நாங்கள் அடித்ததாக சொன்னால், ஜெயிலுக்கு கொண்டு போகிற வழியில் நீ தப்பி ஓட முயன்றதாக சொல்லி சுட்டுத் தள்ளி விடுவோம்’ என்று துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். அதனால் போன தடவை வந்தபோது சொல்ல முடியவில்லை. இப்போது என்னால் நிற்கக்கூட முடியவில்லை. நீதிபதி: சிறையில் மருத்துவ உதவி தந்தார்களா? அய்யப்பன்: மருத்துவ உதவி தருவதாக சொல்லி வெளியில் கூட்டிவந்து மாத்திரை வாங்கி கொடுத்து திரும்பவும் சிறைக்கு கூட்டிச் சென்றார்கள்.  காயங்களையும் என் நிலைமையையும் பார்த்த ஜெயில் அதிகாரிகள், ‘இந்த காயத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. எங்கள் மீது பழி விழக்கூடாது. அதனால், சிபிசிஐடி போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை என்று எழுதிக்கொடு’ என்று கூறினார்கள். அதன்படி ஜெயில் சூப்பிரண்டிடம் எழுதி கொடுத்தேன்.

இவ்வாறு கூறிய அய்யப்பன் அழுதபடியே தனது வேட்டியை அவிழ்த்து போலீசார் அடித்ததால் ஏற்பட்ட ரத்த காயங்களை காட்டினார். அதை பார்த்த மாஜிஸ்திரேட் அய்யப்பனை உட்கார சொன்னார். அப்போது அய்யப்பன் திடீரென மயங்கி விழுந்தார். சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக தெரிந்தது. வக்கீல் ஒருவர் அவருக்கு சாக்லெட் கொடுத்தார். முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அய்யப்பனுக்கு மயக்கம் தெளிந்தது. மாஜிஸ்திரேட்: 23ம் தேதிவரை இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன். சக்சேனா: எனக்கு பிரஷர் அதிகமாகி 3 முறை இசிஜி எடுத்தார்கள். மருத்துவ உதவி எதுவும் தரவில்லை. என்னை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட வேண்டும். மாஜிஸ்திரேட்: இருவருக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் தொடர்பான மனு இருந்தால் தாக்கல் செய்யுங்கள். போலீசார் அடித்தார்கள் என்றால் அதையும் எழுத்து மூலமாக தாக்கல் செய்யுங்கள். ஜாமீன் மனு மீது 13ம் தேதி விசாரணை நடத்தப்படும். இருவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். தேவையானால் அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம். & இதையடுத்து இருவரையும் போலீசார் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை: