செவ்வாய், 28 செப்டம்பர், 2010

High security zone பாடசாலைகள் மீளக் கையளிப்பு

நம்பிக்கை தரும் மிக முக்கிய செயற்பாடு
பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு
பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்படவுள்ள இந்த பாடசாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிடுகின்றனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் உட்பட அந்தப் பிரதேசத்திலுள்ள மேலும் சில பாடசாலைகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இந்த பாடசாலையைக் கையளிக்கிறார். அதன் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி ஆகியோரிடம் இப்பாடசாலை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் 1532 மாணவர்களும் பங்கு கொள்ளவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பாடசாலை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரவினால் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டதாக வட மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் தெரிவி த்தார். இந்தப் பாடசாலை புனரமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிலுள்ள ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் கல்வி அமைச்சின் வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டத்தினால் இந்தப் பாடசாலை புனரமைப்பு, நிர்மாணத்திட்டத்தி ற்கென 60 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படவுள்ள இத் திட்டத்தின் மூலம் சேதமடைந்த கட்டடங்கள் புனரமைக்கப்படவு ள்ளதுடன், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆய்வு கூடங்கள், நூலகம், போன்றவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருத்தப் பணிகள் நிறைவுற்ற பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதன் மூலம் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
சிவப்பு மண்ணால் பொன் விளையும் பூமியில் அமைந்த இந்தப்பாடசாலை பல அறிஞர்களை உருவாக்கிய பாடசாலை. வெள்ளைப் பூச்சு அடித்த சுவர்கள் இந்த மண்ணின் மகிமையைச் பறைசாற்றி சுவரின் அடிப்பாகங்களில் எப்போதும் மண்ணின் நிறமான சிவப்பை தனக்குள் உள்ளவாங்கி இருப்பதை பலாலி வீதியால் இப் பாடசாலையை தாண்டி செல்பவர்கள் காணமல் இருக்க முடியாது. அந்த 'சிவப்பு; தரும் பசுமையை நாம் இனியும் காண்போம் என்பதில் நாங்கள் யாபேரும் சந்தோஷம் அடைவோமாக.

கருத்துகள் இல்லை: