புதன், 29 செப்டம்பர், 2010

பொன்சேகாவின் எம்.பி. பதவியை இரத்தாக்க கோரும் மனுவை நீதிமன்றம் நிராகரிப்பு

ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகாவின் எம்.பி. பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நிராகரித்துள்ளது.
அப்புத்தளையைச் சேர்ந்த ஆனந்தன் மோகனதாஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை மூன்று உறுப்பினர்கள் கொண்ட நீதிபதிகள் குழாம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக பொன்சேகா இருக்கவில்லையெனவும் ஆதலால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதற்கான உரிமை அவருக்கு இல்லையெனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தேர்தல் ஆணையாளர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தனது பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றிற்குச் சமர்ப்பித்தார். இந்த மனுவை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நியாயபூர்வமான சட்டரீதியான ஏற்பாடுகள் இல்லையென நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தமது தரப்பு மனுதாரர் மனுவை வாபஸ்பெற விரும்புவதாகத் தெரிவித்தார். வாபஸ் பெறுவதை ஏற்றுக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்தது. தேவையேற்பட்டால் எதிர்காலத்தில் மற்றொரு திகதியில் மனுதாரர் புதிய மனுவைத் தாக்கல் செய்ய முடியுமென நீதிமன்றம் தெரிவித்ததாக அததெரண இணையத்தளம் நேற்று குறிப்பிட்டது.

கருத்துகள் இல்லை: