வெள்ளி, 1 அக்டோபர், 2010

திருச்சபைக்கு சொந்தமான இடத்தை விற்க முயன்ற கும்பல்


வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள கத்தோலிக்க திருச்சபை பாதிரியாராக இருப்பவர் மரியம் மைக்கேல் .

இவர் கடந்த 1995ம் ஆண்டு திருச்சபைக்கு சொத்து சேர்க்கும் வகையில் மேல்மொணவூர் அருகே சுமார் 55 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இதை சேண்பாக்கத்தைச் சேர்ந்த மரியா  என்பவர் பராமரித்து வந்துள்ளார்.

1998ம் ஆண்டு பாதிரியார் மரியம் மைக்கேல் அமெரிக்கா சென்றுவிட்டார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மரியா அவரது மகன் முத்துக்குமரன் திருநாவுக்கரசு ஜான் போஸ்கோ ஜெயசீலன் ஆகியோர் 55 சென்ட் நிலத்தை விற்க திட்டம் தீட்டியுள்ளனர்.இதற்காக மரியாவுக்கு பாதிரியார் மரியம் மைக்கேல் பவர் பட்டா எழுதிக் கொடுத்ததாக போலி பத்திரம் தயாரித்துள்ளனர்.

இதைக் கொண்டு 55 சென்ட் நிலத்தை பிளாட் போட்டு விற்றுள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு இந்தியா திரும்பிய மரியம் மைக்கேலுக்கு இந்த தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாதிரியார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் எஸ்.பி அன்பு உத்தரவின்பேரில்  இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டது. டிஎஸ்பி ராமேஸ்வரி இன்ஸ்பெக்டர் தேவாசீர்வாதம் ஆகியோர் தலைமறைவு குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இதில் முத்துக்குமரன் நேற்று போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: