வியாழன், 30 செப்டம்பர், 2010

ஜனாதிபதி பதவியேற்ற போது யுத்தத்தை நிறைவு செய்ய இரு வழிகள் இருந்தன : பாதுகாப்பு செயலாளர்


"மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற போது, இராணுவ நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரு வழிகளில் யுத்தத்தை நிறைவு  செய்ய சந்தர்ப்பம் இருந்தது. அப்போது அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் யுத்ததை நிறைவு செய்வோம் என்றனர். ஆனால் ஜனாதிபதி, யுத்தத்தின் மூலம்  நிறைவு செய்யலாம் என்று யுத்தத்திற்கு தயாரானார்" என  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ராஜகிரியவில்  உள்ள இலங்கை மத்திய வங்கியின் வங்கிக் கற்கைகளுக்கான நிலையத்தில் இன்று  புதன்கிழமை மாலை இடம்பெற்ற 'பொருளாதார முகாமைத்துவமும்  யுத்தத்தினால்  கற்றுக்கொண்ட பாடங்களும்' எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கில்  உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர்,"கடந்த 30 வருடமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவுக்குக்  கொண்டு வந்த அரசாங்கத்திற்கு, நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த  முடியும்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களும் ஜனாதிபதிகளும் விடுதலைப் புலிகளுடனான  இந்த யுத்தத்தை நிறைவு செய்ய முடியாது என்றார்கள். ஆனால், இன்று ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை  நிறைவு செய்துள்ளது. இதற்கு பிரதான காரணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  அர்பணிப்பு, அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புமே ஆகும்.

இந்த யுத்தத்தை நேரான சிந்தனையுடன் வெற்றி பெற முடியும் என்ற  நம்பிக்கையுடன் ஆரம்பித்தோம். அப்போது இதற்கு முன்னர் இருந்த அரச  தலைவர்கள் ஏன் யுத்தத்தில் தோல்வி அடைந்தார்கள் என்பதை மிக நுணுக்கமாக  ஆராய்ந்தே யுத்தத்தை ஆரம்பித்தோம்.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தத்தை மேற்கொள்வதற்காக  என்னை பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி நியமித்தார்.

அதன் பின்னர் இராணுவத்தினுள் இருந்த சில பலவீனங்களுக்கு தீர்வு கண்டு  யுத்தத்திற்கு தயாராகினோம்.

இந்த யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பொருளாதரத்திலும்  அரசியலிலும் தளம்பல் ஏற்படாமல் இருப்பதற்கு அதிக கவனம் செலுத்தினோம்.  அன்று எமது அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பலவீனமாக இருந்தது. அந்நிலையிலேயே  நாங்கள் யுத்தத்தை நிறைவு செய்தோம்.

அச்சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு அரசாங்கம் எதிர்த்த போது, இந்திய அரசு  யுத்ததை எதிர்க்கவில்லை. இந்தியாவுடன் நட்புறவை பேணுவதற்காக மூன்று பேரை  கொண்ட குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார். அக்குழு உறுப்பினர்கள்  இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் யுத்தத்திற்கு எதிராக  தமிழ் நாட்டு  முதலமைச்சர் மு.கருணாநிதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அப்போது என்னுடன்  தொடர்பு கொண்ட இந்திய வெளிவிகார செயலாளர் இது தொடர்பாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச வேண்டும் என்றார். நான் ஜனாதிபதியோடு பேசிய போது இந்திய வெளிவிகார செயலாளரை மறுநாள் இலங்கை வந்து தன்னை சந்திக்கும் படி தெரிவித்தார்.

ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மற்றொரு நாட்டுக்கு செல்வதற்கு அனுமதி கிடைப்பது இரண்டு மணி நேரத்தில் இயலாத காரியம். எனினும் எமது ஜனாதிபதி அதனை செய்து காட்டினார். அவர் இலங்கை வந்தவுடன் கலந்துரையாடி யுத்தத்தின் போது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை எனத் தெரிவித்தார். இதனை அடுத்து கருணாநிதி உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்தளவு நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டோம்.

கிழக்கை இராணுவம் கைப்பற்றியவுடன் தான் தொப்பிக்கலைக்கு செல்ல வேண்டும் என்றார்  ஜனாதிபதி. பாதுகாப்பு படையினர் எவ்வளவு தடுத்தும் அவர் அங்கு சென்றார். அதே போன்று வன்னிப் பகுதி கைப்பற்றப்பட்ட போது  கிளிநொச்சி செல்ல வேண்டும் என்றார். வவுனியா செல்ல ஏற்பாடு செய்கின்றேன்  என நான் தெரிவித்த போது, ஜனாதிபதி கிளிநொச்சிக்கே செல்ல வேண்டும் என்றார்.

இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் ஜனாதிபதி மிக அர்ப்பணிப்புடன்  செயற்பட்டார். யுத்தத்தை நிறைவு செய்வதற்கு இராணுவத்தினருடன் சேர்ந்து  ஏனையவர்களும் ஒத்துழைத்தனர்.

வடக்கில் யுத்தம் இடம்பெற்றபோது, கொழும்பில் விடுதலைப் புலிகளின் வலையமைப்பை  பொலிஸார் முறியடித்தனர். அதே போன்று கிழக்கில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு  வந்ததை அடுத்து எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பணியில் சிவில்  பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட்டது. கடல் வழி மூலம் விடுதலைப் புலிகளுக்கு  வந்த ஆயுத கப்பல்களை கடற்படையினர் அழித்தனர். அதே போன்று விமானப்  படையினரும் ஈடுபட்டனர்.

அத்துடன் குறிப்பிட்ட சிலரிடம் முடங்கியிருந்த அதிகாரங்களை அனைவருக்கும்  பகிர்ந்து மிகவும் அர்ப்பணிப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டார்.  அத்துடன் இந்த யுத்தத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ   தலைமையிலான சிறந்த அரசியல் தலைமைத்துவம் கிடைத்தது.

அனைத்து தமிழர்களும் விடுதலைப் புலிகள் அல்ல. ஆனால், 99 வீதமான விடுதலைப் புலிகள் தமிழர்களாவர் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: