திங்கள், 27 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகாவின் விடுதலைக்கு பெளத்த பிக்குமார் மூலம் முனைப்பு?

பிரதான பெளத்த பீடாதிபதிகள் இருவர் சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்இவிடம் பேசவிருப் பதாக தெரிவிக்கப்படுகிறது.சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவின் கோரிக்கைக்கு இணங்க அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அனோமா பொன்சேகா மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மஹா நாயக்க தேரர்களை சந்தித்து இந்த கோரிக்கையை முன் வைத்ததைத் தொடர்ந்து அவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில் பீடாதிபதிகளின் இந்த முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் தற்போது கடற்படைத் தளத்தில் இருக்கின்ற அவர் சிறைக்கு மாற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வி கண்டது முதல் அவர் அங்கேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை உறுதி செய்ததைத் தொடர்ந்து அவருக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜனாதிபதியின் உறுதிப்படுத்தலின் பின்னரே இந்த தீர்ப்பு செல்லுபடியாகும். எனவே இது தொடர்பாக ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த தீர்ப்பை நிராகரிப்பதற்காக பீடாதிபதிகள் முயற்சிகளை மேற் கொள்ளவிருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: