திங்கள், 26 ஜூலை, 2010

மதராசபட்டினம் படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட வெற்றி

நீங்கள் எனக்கு அல்வா கொடுக்கவில்லை:
நெல்லையில் நடிகர் ஆர்யா

நெல்லையில் உள்ள ராம் தியேட்டரில் நடிகர் ஆர்யா நடித்துள்ள மதராசபட்டினம் படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்த கருத்துக்களை கேட்பதற்காகவும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் நடிகர் ஆர்யா நேற்று ராம் தியேட்டருக்கு வந்தார். அவருடன் படத்தின் கதாநாயகி எமி ஆண்ட்ரியா தாசன் மற்றும் டைரக்டர் விஜய், இசையமைப்பாளர் பிரகாஷ் குமார், நடிகர்கள் பாலாஜி, சதீஷ் ஆகியோரும் வந்தனர்.
இவர்களுக்கு தியேட்டர் வாசலில் செண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதியம் நடந்த சினிமா படக்காட்சியின் இடையே நடிகர் ஆர்யா, நடிகை எமி ஆண்ட்ரியா தாசன் ஆகியோர் ரசிகர்கள் முன் தோன்றினர். அவர்களை பார்த்ததும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். பின்னர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
’’நான் 10 படம் நடித்து உள்ளேன். இது எனது 10-வது படம். மதராசபட்டினம் படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்று உள்ளது.
இந்த படம் சுதந்திரத்துக்கு முந்தைய கதை. அதாவது 1946-ம் ஆண்டு வெள்ளைக்கார பெண் ஒரு கூலித்தொழிலாளியை காதலித்த கதை என்பதால் ரசிகர்கள் படத்தை ரசனையோடு பார்க்கிறார்கள்.

சண்டைக் காட்சி உள்பட அனைத்து காட்சிகளும் ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டு உள்ளது.

கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து உள்ளோம். அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் படத்தை பாராட்டி உள்ளனர்.
திருநெல்வேலி எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது. நீங்கள் எனக்கு அல்வா கொடுக்கவில்லை’’ என்று கூறினார் ஆர்யா.

கருத்துகள் இல்லை: