புதன், 28 ஜூலை, 2010

அமெரிக்காவில் ஆறு இலங்கையர்கள் கைது

அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் போலிசார் ஆறு இலங்கையர்களைக் கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் செமினோல் அவென்யூவுக்கு அருகில் கவுன்ரி ரோட்டில் தெற்கு நோக்கிச் சென்ற ஆறு ஆண்களே கைதாகியுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் அணிந்திருந்த காற்சட்டைகள் முழங்கால்வரை ஈரமாக இருந்ததைக் கண்ட போலீசார், இவர்களை படகு ஒன்று கரையில் இறக்கிவிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் கைது செய்தனர். ஆனால் அவ்விடத்தில் எதுவித படகும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
ஆறு ஆண்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், இவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அமெரிக்கப் போலீஸ் தெரிவித்தது. இவர்களிடம் இலங்கைப் பணமும், அமெரிக்கப் பணமும் இருந்துள்ளது. ஆனால் இவர்கள் ஆங்கிலம் பேசவில்லை என்றும் போலீஸ் குறிப்பிட்டுள்ளது. அவர்களிடம் எதுவித பயணப் பொதிகளோ, கையடக்கத் தொலைபேசிகளோ இருக்கவில்லை. மேலும், இவர்கள் தங்களைப் பற்றிய தகவல் எதையும் இதுவரை விசாரணையாளர்களிடம் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: