திங்கள், 23 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு .. மக்களின் குரல் முதல் முறையாக ஓங்கி ஒலிக்கிறது ... நந்தினிக்காகவும் இனி ஒலிக்கட்டும்

நந்தினி தமிழ்நாடே ஜல்லிக்கட்டு என்னும் ஒற்றைக் கொள்கைக்காக அணிதிரண்டு பொதுவெளிகளில் காத்துக் கொண்டிருக்கிறது. பசி, தூக்கம், உடமை, சூழல் மறந்து வாடிவாசல் ஒன்றை மட்டுமே எண்ணத்தில் நிறுத்தி இருக்கிறார்கள் கரைகளில் கூடி நிற்கும் மக்கள் கடல். இதுவரை நிகழ்ந்த அத்தனை தனிமனிதக் குற்றங்களும் தவிடு பொடியாவது போல் ”தோழமை என்றால் அது நாங்கள்தான்” என்று ஒன்றாகக் கரம் தூக்கிக் குரல் கொடுக்கிறார்கள். உச்சாணியாக ஆண்களும் பெண்களும் பாலினம் மறந்து கொள்கை பேசி கொள்கை நினைப்பிலேயே உறங்கி கொள்கையுடனே துயிலெழுந்து கோஷம் எழுப்பி வருகிறார்கள். வாடிவாசல் எப்படியும் திறக்கப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கை மக்களுக்குப் பிறந்திருக்கிறது. விவசாயப் பிரச்னை, காவிரி நீர் என ஐந்து நாட்களாக மக்கள் பற்றியே பேசிய நாம் அவர்களுள் ஒருத்தியான இறந்த நந்தினியை மறந்துவிட்டோம்.
மேலிருக்கும் புகைப்படத்தில் இருப்பவள்தான் நந்தினி.குழந்தையென்றும் விவரம் அறிந்தவள் என்றும் கணித்திட முடியாத அப்பாவி முகம். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமம் சொந்த ஊர். வசதியின்மையால் ஒன்பதாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அம்மாவுடன் சித்தாள் வேலைக்குச் சென்றிருக்கிறாள்.
கடந்த 29ந்தேதி திடீரேன நந்தினி காணாமல் போக அடுத்த நாளே அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கீழ்மாளிகை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மணிகண்டனும் நந்தினியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டன் அந்த பகுதியின் இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் என்பது கூடுதல் தகவல்.

நந்தினியின் தாய் ராசாக்கிளி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை விசாரித்தனர் போலீசார் அதில், ஆறு மாத கால கர்ப்பமாக இருந்த நந்தினியை கீழ்மாளிகைக்கு அழைத்துச் சென்று நன்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்முறை செய்து அந்தப் பகுதி கிணற்றில் வீசியுள்ளார் மணிகண்டன் என்பது புலனாகியுள்ளது, மேலும் நந்தினியின் வயிற்றில் இருந்த ஆறு மாத சிசுவையும் வெளியே எடுத்து எரித்துள்ளனர் என்பது போன்ற திடுக்கிடும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். நந்தினியைக் காணவில்லை என்றே மக்கள் நம்பி வந்த நிலையில் 17 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கீழ்மாளிகை கிணற்றிலிருந்து மேலெழும்பி வந்துள்ளது. ஆனால் நிகழ்த்தப்பட்ட குற்றம் அனைத்தும் அறிந்தும் மணிகண்டன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை தயக்கம் காட்டி வருவதாக அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நந்தினியின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்கிச் செல்லுமாறு போலிசாரால் அவரது உறவினர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரியலூரில் மக்கள் போராட்டம்மக்களின் பதில் வேறாக இருந்துள்ளது. நந்தினிக்கு நியாயம் கேட்டு மருத்துவமனை முன்பு அப்படியே அமர்ந்துள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பல லட்சம் மக்கள் நியாயம் கேட்டுப் பொதுவெளிகளில் கூடி அமர்ந்த வேளையில், அரியலூர் மருத்துவமனை முன்பு ஒரு சிறு கூட்டம் நந்தினிக்காக நியாயம் கேட்டு அமர்ந்தது. ஆனால் நியாயத்தின் திறவுகோல் அரசின் எல்லா சாவித் துவாரங்களுக்கும் அவ்வளவு எளிதில் பொருந்திப் போவதில்லை. சென்னையில் பெரும் கூட்டத்துக்கு நட்புக்கரம் நீட்டிய போலீசார் அரியலூரில் சிறு கூட்டத்திடம் நட்பு பாராட்டவில்லை, மேலும் ஜல்லிக்கட்டுக்காக ஓங்கி ஒலிக்கும் லட்சோப லட்சம் குரல்களுக்கிடையே நந்தினிக்கான நியாயக் கோரல் கண்டுகொள்ளப்படவில்லை. மெரினாவில் ஆண்கள் சூழ பெண்கள் மிகவும் பாதுக்காப்பாகவே இருக்கிறார்கள். இருளிலும் கண்ணியம் பேணப்படுகிறது. மகிழ்ச்சி. ஆனால் உலகமும் பெண்களின் இருப்பும் மெரினாவுடன் சுருங்கி விடவில்லை. போராட்டத்துக்கு ஒரு இளைஞன் கையுயர்த்தும் அதே வேளையில், எங்கோ ஒருவன் நிச்சயம் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் வன்புணர்ந்துகொண்டிருக்கிறான், நந்தினிக்கு நிகழ்ந்தது போல.
ஆயிரம் பாதுகாப்புகள் அந்த பெருவெளியில் கிடைத்தாலும் இப்படியான செயல்களை நாம் மறுப்பதற்கில்லை. மெரினாவில் நியாயம் கேட்க அமர்ந்திருக்கும் மக்கள் காளை மாடுகளுக்காக போராடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல்  நந்தினி போன்ற வஞ்சிக்கப்படும் உயிர்களுக்காகவும் குரல் எழுப்புங்கள். 68 ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஜனநாயக நாட்டில் தற்போதுதான் மக்களின் குரலை செவிமடுத்துக் கேட்கத் தொடங்கியிருக்கிறது அரசியல்புறம். ஜல்லிக்கட்டு மட்டுமே எங்கள் பிரச்னையில்லை என்று தொடர்ந்து ஒலிக்கச் செய்யுங்கள். சென்னைக் கடற்கரையைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் சிறு நகரங்களுக்கும், அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பல தமிழக மாவட்டங்களுக்கும் தற்போது கடலோரம் அமர்ந்திருக்கும் லட்சோப லட்சம் மக்கள்தான் தலைவர்கள். அனைத்து உரிமை மீறலுக்கும் எதிராய் இனி ஓங்கி ஒலிக்கட்டும் இந்த அடையாளமற்ற குரல்கள்.  ஐஸ்வர்யா   விகடன்

கருத்துகள் இல்லை: