சனி, 29 டிசம்பர், 2018

விஷம் குடித்துவிட்டேன்; புதுமனைவியோடு நீ சந்தோஷமாய் வாழு!'- தாயின் பேச்சால் உயிரைவிட்ட மகன், காதல் மனைவி

காதல் ஜோடி.vikatan.com -  சி.ய.ஆனந்தகுமார் - தே.தீட்ஷித் :
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு வலுத்ததால், தற்கொலை செய்துகொண்ட காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாமல், மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்ட செய்துகொண்ட சம்பவம் திருச்சி, புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அடுத்துள்ளது வெண்ண முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பார்த்திபன். 24 வயதுடைய இவர், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பார்த்திபன், அதேபகுதியைச் சேர்ந்த சங்கிலிமுத்து என்பவரின் மகள் அனுப்பிரியாவை கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பார்த்திபன் – அனுப்பிரியா காதல் விஷயம் இருவர் வீட்டுக்கும் தெரியவரவே அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அனுப்பிரியவை தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வேம்படியில் அவரின் அக்கா வீட்டில் தங்க வைத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி பார்த்திபன் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிச் சென்று, வேம்படியில் தங்கியிருந்த அனுப்பிரியாவை சந்திக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அனுப்பிரியாவையும்- பார்த்திபனையும் கையும் களவுமாகப் பிடித்துவிட்ட அனுப்பிரியாவின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நடத்தி வைத்தனர்.  மகனுக்குத் திருமணம் நடக்கும் தகவலறிந்த பார்த்திபனின் தாயார் கவிதாவும் அவரது உறவினர்களும் அங்கு சென்றபோது, பார்த்திபனும், அனுப்பிரியாவும் திருமணக் கோலத்தில் இருந்தனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றாலும் இருவரையும் ஏற்க மறுத்த அவரது உறவினர்கள், அங்கிருந்து வெளியேறினர்.
இந்த நிலையில், பார்த்திபனின் தாயார் அழைத்தபோது அவர்களை அனுப்ப அனுப்பிரியாவின் பெற்றோர் மறுத்ததுடன், மறுநாள் அனுப்பி வைப்பதாகக் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மறுநாள் காலை பார்த்திபனுக்கு போன் செய்த அவரின் தாயார் கவிதா, தான் விஷம் குடித்துவிட்டதாகவும், புது மனைவியோடு சந்தோஷமாக இரு எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதைக் கேட்ட பார்த்திபன், தனது திருமணத்தால் தாய் தற்கொலை செய்துகொண்டதை நினைத்து மனமுடைந்தவர், திருமணம் நடைபெற்ற கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடக்க, உயிருக்குப் போராடிய பார்த்திபனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்திருப்பது தெரியவந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பார்த்திபன் கடந்த 22-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், தனது திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு பார்த்திபன், தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன் மகன் பார்த்திபன் சாவில் மர்மம் உள்ளதாகவும் தன் மகனைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திக் கொன்றுவிட்டதாகவும் கூறி, பார்த்திபனின் தாயார் கவிதா, புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கடந்த 23-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பார்த்திபனின் உடல், உடற்கூறு ஆய்வு செய்து அவரது சொந்த ஊரான முத்துப்பட்டி கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

பார்த்திபன்அப்போது உடலை ஊர்வலமாகக் கொண்டு சென்றபோது பார்த்திபன் மறைவுக்கு அனுப்பிரியாவின் குடும்பத்தாரே காரணம் எனக் கூறி,  அனுப்பிரியாவின் உறவினர் சக்திவேல் என்பவரது வீட்டை,  பார்த்திபன் உறவினர்கள் அடித்து நொறுக்கிச் சூறையாடினர். பாதிக்கப்பட்ட சக்திவேல், தனது வீட்டை அடித்து நொறுக்கி ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் முதலியவை கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் புகார் கொடுக்க, அந்தப் புகாரில்  15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பார்த்திபன் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பெண் வீட்டு உறவினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலைமை இப்படியிருக்க, தனது காதல் கணவர் பார்த்திபனுடன் திருமணம் நடந்தாலும், ஒருநாள்கூட வாழாத நிலையில் பார்த்திபன் தற்கொலை செய்துகொண்டதை எண்ணி, மனவேதனையில் இருந்த அவரின் மனைவி அனுப்பிரியா தனது சொந்த ஊரான வெண்ண முத்துப்பட்டிக்கு  அழைத்து வரப்பட்டார். நேற்று மதியம் வீட்டில் இருந்த அனுப்பிரியா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஓட்டு வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்கு மாட்டித் தொங்கிய நிலையில், கையில் கணவர் பார்த்திபனின் புகைப்படத்தை பிடித்தபடி காணப்பட்டார். தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: