புதன், 26 டிசம்பர், 2018

85 நாட்களுக்குப் பின் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்ட அமமுக பிரமுகர்!

Imagens7.tv/ta/tami :   85 நாட்களுக்கு முன்பு மாயமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரின் உடலை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு எலும்புக் கூடாக காவல் துறையினர் கண்டெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகரச் செயலாளராக பொறுப்பில் இருந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கோவை நீதிமன்றத்திற்கு
அடிக்கடி சென்று வந்துள்ளார் ஜெயவேணு. அதன்படி கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற்ற சாட்சி
விசாரணைக்காக கோவைக்கு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் தூத்துக்குடிக்கு திரும்பிச் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயவேணுவின் அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் சிலர் ஜெயவேணுவைத் தேடி கோவைக்கு சென்றனர்.

கோவையில் ஜெயவேணுவுக்கு நெருக்கமான சிலரிடம் உறவினர்கள் விசாரித்தபோது அவர்களோ ஜெயவேணு தூத்துக்குடிக்கே சென்றதாகக் கூறியுள்ளனர். இதனால் பதற்றமும் குழப்பமும் அடைந்த உறவினர்கள் மீண்டும் கோவைக்கே திரும்பிய நிலையில் ஜெயவேணுவின் மனைவி ஜெயதீபா துடியலூர் காவல் நிலையத்தில் தனது கணவனை காணவில்லை என்று புகார் கொடுத்தார். அதோடு தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயவேணுவின் நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தபோது நண்பர்களில் ஒருவரான சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை வளையத்தை தீவிரப்படுத்திய துடியலூர் போலீசார் ராஜேசை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் திடுக்கிட வைக்கும் உண்மைகள் தெரிய வந்தன.
துடியலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் உள்ள சுரேசின் வீட்டிற்கு ஜெயவேணுவும் ராஜேசும் சென்றுள்ளனர். பிறகு நண்பர்களான மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். மூவருக்கும் அளவுக்கு அதிகமான போதை தலைக்கேறியதும் அரசியல் கட்சிகள் தொடர்பான வாக்கு வாதமும் அதிகரித்துள்ளது.
ஒரு கட்டத்தில் வெறிகொண்ட சுரேசும் ராஜேசும் ஜெயவேணுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ஜெயவேணு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பிறகு ஜெயவேணுவை இரு சக்கர வாகனத்தின் நடுவில் உட்கார வைத்ததோடு முன்னும் பின்னும் இருவரும் சடலம் கீழே விழுந்துவிடாதவாறு நெருக்கமாக அமர்ந்துகொண்டு சென்றுள்ளனர். பிறகு அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த பாழடைந்த கிணற்றில் ஜெயவேணுவின் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன்பிறகுதான் போலீசில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜேஷ் கொடுத்த வாக்குமூலத்தின்படி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலத்தை மீட்கும் பணியில் காவல் துறை இறங்கியது. ஆனால் 150 அடி ஆழமான அந்தக் கிணற்றில் மலை போல குப்பைகள் நிறைந்திருந்ததால் காவல்  துறைக்கு தலை சுற்றியது. பிறகு பொக்லைன் இயந்திரம் மூலமும் ஆட்கள் மூலமும் குப்பைகளை அகற்ற முயன்றனர் காவல் துறையினர். ஆனால் மக்கிய குப்பைகளை அகற்றுவது பெரும் போராட்டமாகவே இருந்துள்ளது. ஒரு வழியாக 35 நாட்களுக்குப் பிறகு 250 டன் குப்பைகளை அகற்றிய காவல் துறையினர் தாசில்தார் மற்றும் அரசு மருத்துவமனை டீன் முன்னிலையில் கொலை செய்யப்பட்ட ஜெயவேணுவின் சடலத்தை எலும்புக் கூடாக மீட்டனர்.
வேணுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிக்கிய கொலையாளி ராஜேசிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரின் சடலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு எலும்புக் கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: